Sunday, December 22, 2013

மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்...



1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள் மனம் விட்டு

சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்

நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும். ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள்.

உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம்


இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டவர், இவரை எதிலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாமல் அனைத்திலும் கலந்து கட்டி அடித்தவர். தனது நடனம், இசை, புதுமை என்று அனைத்திலுமே சிறந்து விளங்கினார்.

பலரும் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் மைக்கேலின் பேய் தனமான ஆட்டத்தை ஒரு காட்சியாவது பார்க்காமல் இருப்பவர்கள் மிக சொற்பம், கராத்தே என்றால் எப்படி அனைவரும் இன்றுவரை கிராமம் முதல் கொண்டு ப்ரூஸ் லீ யை கூறுகிறார்களோ, நடனம் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான், இவர் எவ்வளோ தூரம் மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கிறார் என்பதற்கு நம்ம கவுண்டரின் வசனமான ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாக, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக என்று சாதாரண வசனம் ஒன்றே போதும் கிராமம் உட்பட அவர் எந்தளவு அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் என்று.

நமது பிரபு தேவா முதல் கொண்டு உலகம் முழுவதும் உள்ள நடன கலைஞர்களின் ரோல் மாடல் இவர் என்றால் மிகையல்ல, பலரும் இவரை மனதில் வைத்தே தங்கள் நடன ஆசையை வளர்த்துக்கொள்கிறார்கள். இத்தனை பேரை தனது ரசிகர்களாக, ரோல் மாடலாக மாற்ற வைப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. இன்று இவர் நடனத்தின் பாதிப்பு இல்லாமல் நடனம் ஆடுவது என்பதே ரொம்ப சிரமம்.

தனது 9 வயதிலேயே ஆட்டத்தை துவங்கியவர், சிறு வயதிலேயே பலரை புருவம் உயர்த்த வைத்தவர். வெள்ளையர்களுக்கு கறுப்பர்கள் என்றாலே மட்டமான நினைப்பு தான், தற்போது குறைந்து விட்டது என்றாலும் இன்னும் இருக்கிறது. அப்போது இது உச்சத்தில் இருந்த போது தன் திறமையால் அவர்களையே தனக்கு வெறிப்பிடித்த ரசிகர்களாக மாற்றி காட்டியவர். நான் வெறிப்பிடித்த என்று கூறியது மிகைப்படுத்த பட்ட வார்த்தை அல்ல, சொல்ல போனால் அதை விட மிக குறைவான வீச்சை தரும் வார்த்தையே.

மைக்கேல் அரங்கில் வந்தால் ஆர்வம் தாங்காமல் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழும் ரசிகர்கள் கோடிக்கணக்கானவர்கள், மிகைப்படுத்தவில்லை. அவர் அரங்கில் ஆடும் போது முதலில் மெதுவாக ஒவ்வொரு ஸ்டெப் ஆக வைப்பார் ஆனால் அது வரை கூட தாங்க முடியாத ரசிகர்கள் அவரை ஆடக்கூறி கதறி அழுவார்கள், இதை நம்மில் பலர் பார்த்து இருக்கலாம் ஒரு சிலர் இதை போல காட்சிகளை பார்க்க வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கலாம்


எடுத்துக்காட்டிற்கு மைக்கேல் தனது ரசிகரிடம் நீ இவனை கொன்று விடு என்று கூறினால் பதில் கேள்வி கேட்காமல் செய்யக்கூடிய அளவிற்கு காட்டுத்தனமான ரசிகர்கள். ஒருவரை இந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்றால் மைக்கேல் எத்தனை பெரிய திறமைசாலியாக மக்களை கவருபவராக இருந்து இருக்க வேண்டும். இதில் வெள்ளையர்கள் கறுப்பர்கள் என்று எந்த பாகுபாடும் இல்லை. அனைவரையும் தனது இசையால் நடனத்தால் கட்டிப்போட்டவர். இவருக்கு தாறுமாறான பெண் ரசிகர்கள், இவர் பெண்கள் கூட்டத்தில் சிக்கினால் தனி தனியாக பிய்த்து விடுவார்கள், இவர் மேல் பைத்தியமாக இருப்பவர்கள். இவரின் ஒரு அசைவிற்காக கண்ணீருடன் காத்து இருப்பவர்கள், இவரின் ஆட்டத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு மயக்கமடைந்து விடுமளவிற்கு வெறித்தனமானவர்கள்

அவருடைய த்ரில்லர்(1982) ஆல்பம் வெளிவந்த போது அடைந்த சாதனைகள் (41 மில்லியன்) கொஞ்சநஞ்சம் அல்ல, இது உலக சாதனை அடைந்தது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பாப் இசையில் புதிய பரிமாணத்தையே கொண்டு வந்தவர், இவருடைய பல நடனங்கள் குறிப்பாக காற்றில் கை வைத்து ஆடுவது, கயிறு இல்லாமலே கயிற்றை இழுப்பது, ஓடிய படியே நடப்பது (மிதப்பது), தொப்பி அணிந்து கண்களை மறைத்து ஆடுவது போன்றவை எவராலும் மறக்க முடியாது. நம் ஊர் மேடையில் ஆடுபவர்கள் கூட இதை போல செய்வதை பலரும் கவனித்து இருப்பீர்கள், இவை மட்டுமல்லாது தனது உடைகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தார், ராணுவ உடை, வெள்ளை கருப்பு உடை (உடன் க்ளவுஸ்), கற்கள் பதித்த உடை, ஜிகினா உடை என்று புதிய ஸ்டைல்களை அறிமுகப்படுத்தினார். இவர் ஆல்பங்கள் எடுத்த விதம் மிகவும் வித்யாசமாக இருக்கும், இதுவரை எவரும் பயன்படுத்தி இருந்திராத முறையில் கலக்கலான கிராபிக்ஸ் ல் இருக்கும்.

இவர் இரு முறை திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார். இவரது மகன்களின் பெயர் வித்யாசமாக இருக்கும் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2.

பிரபலம் என்றாலே பிரச்சனை தான் என்பது போல இவருக்கு பிரச்சனை வேறு ரூபத்தில் வந்தது. பெப்சி விளம்பர நிகழ்ச்சிக்காக ஆடிய போது தீ விபத்து ஏற்பட்டு காயங்கள் ஆனது, இதற்க்கு பெரும் நஷ்ட ஈடு பெற்றார் ஆனால் அனைத்தையும் நன்கொடை செய்து விட்டார், அதன் பிறகு தான் தன் கருப்பு தோலை வெள்ளையாக மாற்ற காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வெள்ளைக்காரனாக! மாறினார். பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதற்கும், இயற்கையை மீறினால் என்றுமே ஆபத்து தான் என்பதற்கும் இவரே சிறந்த உதாரணம் இதனால் அவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். இவர் இந்த நிலைக்கு காரணமே இந்த தோலை மாற்றியதும் என்று என்று அனைவரும் கூறுகிறார்கள்.

அதன் பிறகு சிறுவனுடன் ஓரின சேர்க்கை பிரச்சனையில் மாட்டிக்கொண்டார், இதற்க்கு பல மில்லியன் டாலர்களை நஷ்டஈடாக கொடுத்தார், இதை போல செலவுகள் அவரை பெரும் சிக்கலில் தள்ளியது. சவுதியில் ஒரு நிகழ்ச்சி செய்ய பணம் வாங்கி விட்டு அவர் அதை செய்யாததால் அதிலும் பல சிக்கல்கள், பிறகு உலகையே அதிர்ச்சி அல்லது ஆச்சர்யம் அடையும் வைக்கும் விதமாக முஸ்லிம் மதத்திற்கு மாறினார், உலகில் உள்ள பிரபலமான செலிபிரிட்டி ஒருவர் மதம் மாறியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அவர் பெயர் உட்பட தன்னை மாற்றிக்கொண்டாலும் அவர் இறந்த பின்னும் உலகம் அவரை மைக்கேலாகவே நினைத்தது, இசைக்கும் நடனத்திற்கும் மதம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்தார், அவர் என்னாவாக மாறினாலும் அவரது ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பில் கொஞ்சமும் மாறமாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

தற்போது கூட "இறுதித் திரை" என்று நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தார், இதற்காக அனைவரும் ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால் இறுதி திரை செல்லாமலே இறுதி பயணத்தில் கலந்து கொண்டு விட்டார் என்பது பலரையும் கண்ணீரில் ஆழ்த்திய நிகழ்ச்சி. கலந்து கொண்டு இருந்தால் உலகம் இருக்கும் வரை நினைவு கூறும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எளிய பயிற்சி‏....


    எப்பவாச்சும் ரொம்ப மன அழுத்ததோட இருக்கும் போது அதிலிருந்து விடுபட ஒரு எளிய பயிற்சி

உங்களை தனிமை படுத்திக் கொள்ளுங்கள்

மீனவன் வலை வீசுவதைப் பாத்திருக்கீங்களா? "ஹூம்" என்றபடி இரு கைகளையும் பலம் கொண்ட மட்டும் அதைப் போல காற்றில் வீசுங்க (எது மேலயும் இடிச்சிடாம பாத்துக்கங்க கை கழன்டு போற மாதிரி இல்லாம ஒரளவு மிதமான வேகத்தோட வீசுங்க)

இப்படி வீசும் போது உங்களை விட்டு இரு விஷயங்கள் வெளியேறுவதாக கற்பனை செய்யுங்க. ஒன்னு ஈகோ என்னும் ஆணவம், இன்னொன்னு உங்க மன அழுத்தம். இப்படி மூனு-நாலு முறை செய்யுங்க

சரி இப்ப எல்லாம் உங்களை விட்டு மன அழுத்தமும் ஈகோவும் போயிடுச்சி இல்லயா? ஈகோ இல்லாம எல்லாரோடவும் போய் பழகுங்க

என்ன நம்பமுடியலையா? செஞ்சி பாருங்க!

தன்னம்பிக்கை வளர வழி...!


தன்னம்பிக்கை வளர வழி...!

எனது குறிக்கோள் என்ன என்பதை நானே நிர்ணயித்துள்ளேன். ஆகவே அதை அடையத் தீவிரமாகவும், முழு முயற்சியுடனும் தொடர்ந்து ஈடுபடுவேன். வெற்றி பெறுவேன். எண்ணும் எண்ணங்களே உடலின் வெளித் தோற்றத்திலும் செய்கையிலும் மிளிரும் என்பதை அறிவேன். ஆகவே நான் வெற்றி அடைந்த தோற்றத்தை மனக்கண் முன்னால் தினமும் முடிந்தவரை பார்ப்பேன்.

வெற்றி பெறத் தேவைப்படும் அனைத்துக் குணங்களையும் மனதில் ஒரு பத்து நிமிடம் தினம்தோறும் நினைத்து அதை அடையப் பாடுபடுவேன். நியாயம், தர்மம் இவற்றின் அடிப்படையில் அல்லாது மற்ற வழியில் வரும் வெற்றி நிலைக்காது என்பதால் தன்னம்பிக்கையுடன் நேர்மையான வழியிலேயே நிச்சயம் வெற்றியைப் பெறுவேன். வெற்றி நிச்சயம் என்பது எனக்கேயாகும் இந்தத் தன்னம்பிக்கைச் சிந்தனையை விடாது காலை எழுந்தவுடன் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள்.

வெற்றியை அடைய இரண்டாவது படி இதுவே!