Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Monday, January 27, 2014

பெருமாளே கிரிவலம் வரும் தலம்..!



தன்னை நம்பி வருவோர்க்கு நற்கதி நல்குவான் நாராயணன். அவன் கோயில் கொண்டருளும் தலங்களுள் ஒன்று, துத்திப்பட்டு. ஒருசமயம் ரோமச ரிஷியும், அவரது சீடர்களும் கானகத்தில் தவம் புரிந்து வந்தபோது பிரதூர்த்தன் என்ற அரக்கன் தொல்லைகள் கொடுத்து வந்தான். இதனால் வெகுண்ட ரிஷி அந்த அரக்கனை 'புலியாகக் கடவது' என்று சாபமிட்டார். புலியுருவை அடைந்த அரக்கன் கானகத்தில் வாழும் உயிரினங்களை அழிக்க முற்பட்டதுடன், முனிவர்களை முன்பைவிட இன்னும் அதிகமாக துன்புறுத்தி வந்தான். வேறு வழியின்றி முனிவர்கள் இந்திரனை சரணடைந்தனர்.

முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்திரன் தானும் புலியாக உருமாறி பிரதூர்த்தனுடன்  போரிட்டான். இறுதியில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் அரக்கனை அழிக்க முற்பட்டபோது, சாகும் தருவாயில் அரக்கன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். அவனை மன்னிக்க விரும்பிய இந்திரனும், தேவர்களும் அந்த அரக்கன் நற்கதி பெற வேண்டுமென்று திரு மாலை வழிபட்டனர். திருமாலும் சங்கு, சக்ரதாரியாக தேவியருடன் காட்சி கொடுத்து, அரக்கனுக்கு நற்கதி அளித்தனர்!

அரக்கனுக்கு அருள்புரிந்த அதே கோலத்தில் அங்கேயே எழுந்தருளுமாறு ரோமச ரிஷியும், அவரது சீடர்களும் திருமாலிடம் வேண்டிக் கொள்ள முனிவர்களின் அன்புக் கோரிக்கையை ஏற்று திருமால் இங்கேயே கோயில் கொண்டார். பிரதூர்த்தன் நற்கதியடைந்த தலமாதலால் 'பிரதூர்த்தப்பட்டு' என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் 'துத்திப்பட்டு' ஆகிவிட்டது. இக்கோயிலை 'வரதராஜ பெருமாள் கோயில்' என்றே தற்சமயம் அழைக்கிறார்கள்! நுழைவாயிலில் நாற்பத்தைந்து அடி உயரமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் நடுநாயகமாக அமைந்துள்ளது. கோயில் ஒரே பிராகாரம் கொண்டது. அதில் மூன்று சந்நதிகள் உள்ளன.

மகா மண்டபமும், ஒருமுக மண்டபமும் உள்ளன. கொடிமரத்தைக் கடந்து கருடாழ்வாரை தரிசித்து, மகாமண்டபத்தை கடந்து, மூல ஸ்தானத்தை அடைந்ததும், பிந்து மாதவராய் பெருமாள் (வரதராஜர்) ஆறடி உயரம் கொண்ட மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஒருபுறம் பெருந்தேவியும் மறுபுறம் குமுதவல்லி நாச்சியாரும் பெருமாளுடன் சேவை சாதிக்கின்றனர். பெருமாள் சதுர்புஜங்களில் மேலே சங்கு, சக்கரம் தரித்தும், கீழ்கரங்களில் கதை, அபய முத்திரையுடனும் காட்சி தருகின்றார். உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.

மூலவர் சந்நதிக்கு மேலே 'தேஜோ விமானம்' அணி செய்கின்றது. பெருந்தேவி  தாயாரும், ஆண்டாளும் தனித்தனி சந்நதிகளில் கோயில் கொண்டுள்ளனர். திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் தனியே தரிசனம் தருகிறார். நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் உடையவர் திருவுருவங்களும் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மண்டபச் சுவரில் இத்தல த்தில் நற்கதியடைந்த பிரதூர்த்தனின் திருவுருவம் உள்ளது. இந்த புண்ணிய பதியில் விஷ்ணு புராணத்தை பராசர முனிவர் மைத்ரேய மகரிஷிக்கு எடுத்துரைத்ததாக கூறப்படுகின்றது.

தை மாதம் காணும் பொங்கலன்று அருகிலுள்ள நிமிஷாசல மலையைச் சுற்றி உத்ஸவ மூர்த்தி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த மலையில் 'ரோமச ரிஷி' இன்றும் தவம் இருப்பதாகவும், அவருக்குக் காட்சி கொடுக்கவே பெருமாள் மலையை வலம் வருவதாகவும் ஐதீகம். உற்சவ காலங்களில் இவ்வூரைச் சுற்றியுள்ள பத்து கிராமங்களுக்கும் பெருமாள் செல்வது இப்போதும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத் தக்கது! வேலூர் மாவட்டம் ஆம்பூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் துத்திப்பட்டு அமைந்துள்ளது.

Monday, December 2, 2013

விநாயகர் இவ்வளவு தகவல்களா!



* "வி' என்றால் சிறப்பு. "நாயகன்' என்றால் தலைவர். சிறப்பு மிக்க தலைவர் என்பது பொருள். கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார்.

 * மூவரும் தேவரும் போற்றும் தனிப்பெருந்தெய்வம் விநாயகப் பெருமான். ஓங்கார வடிவமுடையவர். போற்றுபவர் துயர் போக்கும் கடவுள். அடியவர்களுக்கு எளிதில் அருள்புரியும் கருணைக்கடல். இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார்.


* விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார்.


 * விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.


 * விநாயகர், யானையை அடக்கும் கருவிகளான பாசமும், அங்குசமும் வைத்திருக்கிறார். தன்னை அடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் தன் கைகளில் இக்கருவிகளை ஏந்தியுள்ளார்.


 * விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார்.


 * கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.


 * விநாயகருக்கு உகந்தது அருகு. இது ஓரிடத்தில் முளைத்து, கொடிபோல நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையுடையது. ""அருகு போல் வேரூன்றி'' என்பது பழமொழி. அருகம்புல் இட்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் காய்ச்சல் தீரும். யோகிகள் யோகப்பயிற்சியில் விளையும் சூடு தணிய அருகுக்கஷாயம் அருந்துவார்கள். இதற்கு "மூதண்டக் கஷாயம்' என்று பெயர்.


 * விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார்.


 * விநாயகரின் சக்தியாகிய வல்லபை மரீசமுனிவரது புதல்வி.


தோப்புக்கரணம் பிறந்த கதை:

ஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்கள் தன்னைக் கண்டால் தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். கோபமடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். இதுமுதல் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது.


விநாயகரை கரைப்பது ஏன்?

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

ஐந்து சுவாமி பூஜை:

பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

எங்கும் இவரது அருளாட்சி:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் வழிபாடு செய்வது விநாயகரைத் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பரீட்சை என்று வந்து விட்டால், ""பிள்ளையாரப்பா! எனக்கு அருள் செய்வாய்,'' என்று இவரிடம் போய் நிற்பார்கள். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லுகின்ற வழியெல்லாம் நமக்குத் துணையாக இருப்பவரும் இவரே. ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, ஊர்ப் பொது இடம் என்று எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சிதான் நடக்கிறது.

இழந்த பொருளை தரும் விநாயகர்:

தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் ஏராளமாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் சிவன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்து மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார். திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார்.

 இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்' என்ற சிறப்புப் பெயர் உண்டானது. கையில் இருக்கும் பொருள்களை தவறுதலாகவோ அல்லது தீயவர்களாலோ இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால் அவர் அருளால் தொலைந்த பொருள் மீண்டும் வந்து சேரும். கோவை மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி உள்ளது.

சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?


கணபதியின் பிறப்பு: 

ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின்தொடர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒரு சக்தி வெளிப்பட்டது. தெய்வ நல்வடிவுடன் கூடிய அக்குழந்தையை சிவசக்தியர் அணைத்து மகிழ்ந்தனர். அவரைக் கணங்களின் அதிபதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் சிவபெருமான். கணபதியைத் தம் மீது அமர்த்திப் பட்டாபிஷேகம் செய்தார். அக்கோலம் ஆனைமுகற்கு அருளிய அண்ணல் என்று கொண்டாடப்படுகிறது. அதனால் சிவனை கஜ அனுக்கிரகர் என்றும், விக்னேசப் பிரசாதர் எனவும் அழைப்பர். சிவன் ஆண் யானையாகவும், அம்பிகை பெண் யானையாகவும் இருக்க விநாயகரான கணபதி தோன்றினார் என்பதை திருஞான சம்பந்தர் பின்வருமாறு அருளிச் செய்துள்ளார்:

பிடியதன் உருவுமை கொள மிகு கரியது, 
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே!

விநாயகர் அவதாரம்: விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன்.

ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்.

என்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவ-பராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.

பிள்ளையார் என்பது ஏன்?

தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை. விதிவிலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா இவரைப் பற்றி?

உடலில் உள்ள ஆறு ஆதாரங்களில் விநாயகருக்குரியது மூலாதாரம்!
விநாயகரை அருகம்புல்லால் பூஜிக்க உகந்த நாள் அஷ்டமி!
உலகின் மிகப் பழமையான ரிக் வேதத்தில் விநாயகர் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது!

விநாயகப் பெருமானை இந்து சமயத்தின் முழு முதற் கடவுளாக மாற்றியவர்கள்- குப்தர்கள்.

திருவரங்கத் திருமாலின் ஏகாந்த நித்திரைக் கோலத்தை முதன் முதலில் தொழுதவர்கள் கணபதியும், அகத்தியரும்!

மதுரைத் திருத்தலம் அருகிலுள்ள திருபுவனத்தில் தேங்காய் பிள்ளையார் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். இவரின் இயற்பெயர் விசாலாட்சி விநாயகர்!
பதினொரு விநாயகர்கள் உள்ள திருத்தலம் திருப்பாசூர்! இவர்கள் வாசீஸ்வரர் கோயிலில் ஒரு சன்னதியில் உள்ளனர்.

திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயிலில் உள்ள நெல்லிக்கனி விநாயகருக்கு, நெல்லிக்கனி மாலை சாத்தி வழிபடுவர்!

÷ஷாடச (பதினாறு) விநாயகர்களில் முதலாமானவர் பால கணபதி!
விநாயகர் வழிபாடு தமிழருக்கு உரியதென மறைமலையடிகள் குறிப்பிடுகிறார்.

கி.மு 6-ஆம் நூற்றாண்டு நூலான தத்ரேய ஆரண்யத்தில் யானைக் கொம்புடைய இறைவன் எனக் குறிக்கப்படும் கடவுள், விநாயகர்!

ஆவணி மாத சிறப்பு

கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாகப் பின்பற்றப்படுகிறது. முழுமுதற்கடவுளான விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி ஆவணியில் கொண்டாடப்படுவதன் அடிப்படையில் இவ்வாறு பின்பற்றுகின்றனர். கேரளத்தின் முக்கிய விழாவான ஓணம், இதே மாதத்தில் கொண்டாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இம்மாதத்தில் நவக்கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார்.

விநாயகரால் விளைந்த நன்மைகள்: கணபதி இல்லாவிட்டால் அகஸ்தியர் தமது கமண்டத்தில் எடுத்துச் சென்ற காவிரி மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்குமா? காகரூபமாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை வெளிப்படுத்தினாரே! கணபதி இல்லாவிட்டால் ஸ்ரீரங்கநாதர் நமக்குக் கிடைத்திருப்பாரா? அவரது விக்ரகம் இலங்கைக்கல்லவா போயிருந்திருக்கும். கீழே வைக்கக்கூடாது என்ற  நிபந்தனையுடன், ஸ்ரீராமர் தான் வழிபட்ட ரங்கநாதர் விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் ஸ்ரீரங்கம் பகுதியை அடைந்த போது மாலை நேரமாகிவிட்டது.

மாலைச் சந்தி கர்மங்களைச் செய்யவேண்டுமே என விபீஷணன் யோசித்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் எதிரே வந்தார். அந்தச் சிறுவனிடம் சற்று நேரம் விக்ரகத்தைக் கையில் வைத்திருக்குமாறு கொடுத்த விபீஷணன் ஆற்றங்கரை நோக்கிச் சென்றான். அவன் திரும்பிவந்து பெற்றுக் கொள்வதற்குள் அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர். அது அங்கேயே நிலைகொண்டுவிட்டது. விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான் விபீஷ்ணன். ஆனால் இயலவில்லை. அந்த ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போய் குட்டினான். பின்னர் உண்மையறிந்து வணங்கிச் சென்றான். அவ்வாறு கோயில் கொண்டவரே ஸ்ரீரங்கநாதர். திருச்சி மலைமீதிருக்கும் உச்சிப்பிள்ளையாரே இந்தத் திருவிளையாடல் புரிந்தவர். அவர் தலையில் குட்டுப்பட்ட தழும்பு இருப்பதைக் காணலாம்.

இதேபோன்ற ஒரு நிகழ்வை இராவணனிடமும் நிகழ்த்தினார் பிள்ளையார் இராவணன் தவம் பல புரிந்து சிவனிடம் வரம்பெற்று, அவரிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். அவனும் சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் ஆத்மலிங்கத்தைத் தர, அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர். அதுவே கர்நாடக மாநிலத்திலுள்ள கோகர்ணம் அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவைக் காணலாம். பராசக்தி தேவி பண்டாசுர வதத்திற்குக் கிளம்பினாள். ஆனால் விக்னயந்திரம் அதற்கு இடையூறாக இருந்தது. சக்திதேவி சிவனையும் கணபதியையும் நினைக்க, கணபதி அந்த விக்ன யந்திரத்தைத் தூளாக்கினார். அதன் பிறகே பராசக்தியால் பண்டாசுர வதம் செய்ய முடிந்தது.

விநாயகர் மூஷிக வாகனர் ஆனது எப்படி?

விநாயகரின் சிறப்பான வாகனம் மூஞ்சுறு (எலி) தான். மூஞ்சுறு எப்படி விநாயகருக்கு வாகனமானது. விநாயகப் பெருமானைப் போற்றி வணங்கும் கிரவுஞ்சன் என்னும் கந்தர்வ இளைஞன் ஒருவன் பூலோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரின் மனைவியைக் கண்டு மோகித்து அவளின் கரங்களைப் பற்றி இழுத்தான். அதைக் கண்டு கோபங் கொண்ட முனிவர், மண்ணைத் தோண்டி வளையில் பதுங்கும் மூஷிகமாக மாறக்கடவாய் என சாபமிட்டார். அதனால் மூஷிகமாக (எலி) மாறி பராசர முனிவரின் ஆசிரமத்தில் புகுந்து எல்லாவற்றையும் கடித்துக் குதறி நாசம் செய்ததோடு அங்குள்ள மரங்களின் வேர்களைத் துண்டித்து விழச் செய்தும் அட்டகாசம் செய்த வண்ணம் இருந்தான்.

அச்சமயம் அபினந்தன் என்ற மன்னன் ஒரு யாகம் செய்தான். இந்திரன் தன் பதவிக்கு பங்கம் வராதிருக்க காலநேமி எனும் கொடிய அசுரனைத் தோற்றுவித்து அந்த யாகத்தை அழிக்கும்படி உத்தரவிட்டான். ஆனால் அவனோ அந்த யாகத்தை அழித்ததோடு மட்டும் அல்லாமல் பூவுலகம் முழுவதிலும் எங்கெங்கு யாகம் நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று அவற்றை நாசப்படுத்தி அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான். அதிலிருந்து விடுபட அனைவரும் ஈசனை வேண்ட அவரும் அருள் புரிந்தார். வரேனியன் என்னும் மன்னருக்கு மகனாகத் தாம் பிறக்கப் போவதாகச் சொல்லி அவ்விதமே யானைமுகத்துடன் அவதரித்தார்.

 அதைக் கண்ட ராணியும் மன்னனும் வருத்தமடைந்து சாமுத்ரிகா லட்சணங்களுடன், பிறக்காத இக்குழந்தையை எடுத்துச் சென்று எங்காவது போட்டு விடுங்கள் என்று கட்டளையிட்டனர். அவனது படைவீரர்கள் அக்குழந்தையை எடுத்துக் கொண்டு போய் காட்டில் ஒரு குளத்தின் கரையில் வைத்து விட்டுச் சென்று விட்டனர். அவ்வழியே நீராடச் சென்ற பராசரர் அக்குழந்தையைக் கண்டு அதிசயித்து நம் பெருமாளே இந்தக் குழந்தையை நமக்கு அளித்துள்ளான் என்று அகமகிழ்ந்து வளர்த்து வந்தார். அக்குழந்தையும் நாளும் வளர்ந்து வரலானார்.

மூஷிகன் பராசரரின் குடிசைக்கு வந்து அட்டகாசம் செய்வது கண்டு கணேச பெருமான் தமது பரசு ஆயுதத்தை எடுத்து மூஷிகன் மேல் வீசினார். பரசு அவனை நோக்கிப் பாய்வதைக் கண்டு பயந்தபடி இங்குமங்கும் ஓடினான். பூமியைக் குடைந்தபடி பாதாளலோகம் வரை சென்றான். அப்போதும் பரசு ஆயுதம் அவனைத் துரத்தி வருவதைக் கண்டு சோர்ந்து போனான். பரசும் அவனைக் கட்டி இழுத்து வந்து பெருமான் முன்பாக நிறுத்தியது. மூஷிகன் தன் முந்தைய வரலாற்றைக் கூறி தம்மை மன்னித்தருளும் படி வேண்டினான். விநாயகரும் அவனை அரவணைத்து அருளினார். அதன்பின் காலநேமியை அழிக்க எண்ணங்கொண்ட போது அவனாகவே விநாயக பெருமானின் பாதங்களில் விழுந்து சரணடைந்து நற்கதி பெற்றான். இவ்விதமாய் மூஷிகத்தை வாகனமாகப் பெற்ற விநாயகர் மூஷிக வாகனர் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.

விநாயகர் சதுர்த்தியன்று கடைபிடிக்க வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர்,

ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே 
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது ஒன்றைப் படையில் அமையும்படியாக 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்.

கணபதிக்கு பிரியமான 21:

 கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் 21: 

புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

அபிஷேகப் பொருட்கள் 21:

தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

இலைகள் 21: 

மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

நிவேதனப் பொருட்கள் 21: 

மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.

திதிக்குரிய கணபதி: 

பொதுவாக விநாயகருக்கு சதுர்த்தி திதி உகந்தது என்றாலும், ஒவ்வொரு திதிக்குமே அதற்குரிய கணபதிகள் உள்ளனர். அந்த நாளில் அதற்குரிய கணபதியை வழிபடுவது சிறப்பு பலன் தரும் என்பர்.

பிரதமை- பாலகணபதி; துவிதியை- தருண கணபதி; திரிதியை- பக்தி கணபதி; சதுர்த்தி- வீர கணபதி; பஞ்சமி- சக்தி கணபதி; சஷ்டி-துவிஜ கணபதி; சப்தமி-சித்தி கணபதி; அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி; நவமி- விக்ன கணபதி; தசமி- க்ஷிப்ர கணபதி; ஏகாதசி-ஹேரம்ப கணபதி; துவாதசி- லட்சுமி கணபதி; திரயோதசி- மகாகணபதி; சதுர்த்தசி-விஜய கணபதி; அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி. அந்தந்த திதிக்குரிய கணபதி நாமத்தை 108 முறை கூறி தோப்புக்கரணம் போட்டு பக்தியுடன் வணங்கி வந்தால், நம் வாழ்வில் எதிர்ப்படும் விக்கினங்கள் விலகி சகல வளங்களும் கைகூடும்.

அருள்புரிவாய் ஆனைமுகா!

விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் படைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனை கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே! என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்க  வனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே! எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.

உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத் தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.

உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். எங்களுக்கு இம்மையில் சகல செல்வத்தையும், மறுமையில் முக்தியையும் தந்தருள்வாயாக.