Sunday, December 22, 2013

‘தூம் 3’ தூள் பரக்கிறது..!



சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார்.

அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை சேர்ந்தவர் என முடிவெடுக்கும் சிகாகோ காவல்துறையினர் ஆமிர்கானை கண்டுபிடிக்க இந்தியாவில் இருந்து அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா ஆகிய இரண்டு பேரை சிகாகோவுக்கு வரவழைக்கின்றனர். ஆமிர்கானை பிடிக்க பல்வேறு வழிகளில் இவர்கள் முயற்சித்தும் பலன் அளிக்காமல் போய் விடுகிறது. ஆமிர்கான் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆமிர்கானை பற்றி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, ஜாக்கி ஷெராப்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கின்றனர். அதில் ஒருவர் கேத்ரினா கைப்பை காதலிக்கிறார். இதனை தெரிந்துக் கொண்ட போலீசார் கேத்ரினா மூலம் கொள்ளையடிக்கும் ஆமிர்கானை பிடிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

இறுதியில் ஆமிர்கானை பிடித்தார்களா? அல்லது தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

ஆமிர்கான் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடனக்காட்சிகளிலும், ஸ்டண்ட் காட்சிகளிலும் அசத்தவும் செய்கிறார். போலீசாக வரும் அபிசேக் பச்சான் மற்றும் உதய் சோப்ரா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அழகாகவரும் கேத்ரினாவுக்கு காட்சிகள் மிகவும் குறைவு. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ப்ரீதம் சக்ரபொர்த்தி இசையில் பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் பின்னணி இசையில் மிகவும் கலக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘தூம் 3’ தூள் பரக்கிறது

பெண்கள் வாயாடிகள் ஆவது நல்லது

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.

ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. “நலமா ?” என ஆரம்பிக்கும் உரையாடல் “நல்லா இருக்கேன்” என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.

அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்” என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.

மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.

இலங்கைத்தமிழரின் திருமணம்..!

 
இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் திருமண முறை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது நிரந்தரமானது. அது ஆயிரங்காலத்துப் பயிர் என்று கூறப்பட்டு திருமணத்தின் முன் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக ஆராயப் படுகின்றன. திருமணம் பேசுவதற்கு முன் சாதி, சமயம், அந்தஸ்து ஆகியன ஒன்றாகவுள்ளனவா என்பது பார்க்கப்படும்.

ஏனெனில் ஒரே சூழலில் வாழ்ந்தவர்களுக்கு ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போவது எளிது என்று கருதப்படுகிறது. இதனால் இவற்றில் மாறுபாடுள்ளவர்கள் அதாவது சாதி, சமய, அந்தஸ்து வேறுபாடுகள் கொண்டவர்கள் காதல் வசப்படும் போது அது பெரும்பாலும் முற்றாகவே பெற்றோராலும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுகிறது. இந்த மூன்றுடன் குணநலம், குடும்பப் பின்னணி, சாதகப் பொருத்தம், சீதனம் என்பனவற்றின் பொருத்தத்திலேயே திருமணம் தீர்மானிக்கப்படும்.

ஆணுக்கு தொழில், குணம், சுமாரான அழகு என்பன முக்கியமாகக் கவனிக்கப்பட பெண்ணுக்கு வயது, அழகு, குணம், கல்வி, சீதனம் என்பன முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஒரு காலத்தில் ஒரு பெண் திருமணம் செய்வதற்கு A B C D E F என்பன முக்கியமாகத் தேவை என்றும் அப்போது தான் ஆண் G என்று அதாவது good என்று சொல்லி தாலியைக் கட்டுவான் என்றும் வேடிக்கையாகச் சொல்லப்பட்டதுண்டு. அதாவது A-Age, B-Beauty, C-Caste, D-Dowry, E-Education, F-Family status.

இலங்கையில்  திருமண உறுதிப்பபாட்டுக்குப் நிரந்தர வருமானம் முக்கியமாகக் கருதப்பட்டதால் ஆரம்பத்தில் அரச பதவி பெற்றவர்களை நாடி பெண்ணைப் பெற்றவர்கள் ஓடினர். கோழி மேய்த்தாலும் கோறணமேந்தில் மேய்ப்பவருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதே ஒரு காலத்தில் நியதியாக இருந்தது. தொழில் அடிப்படைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தொழில் பெறுவது சுலபமாகவும், பெற்ற தொழில் நிரந்தரமானதாகவும் இருந்ததால் திருமணச் சந்தையில் அவர்கள் முன்னிடத்தை வகித்தார்கள்.

அவர்களில் ஒருவரைத் தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பலர் பண அடிப்படையில் போட்டி போட்டார்கள். அதிக பணம் கொடுக்க வல்லவர்கள் ஒரு வைத்திய கலாநிதியையோ அல்லது பொறியியலாளரையோ பெற்றனர். இதனால் படித்து நல்ல தொழில் பெற்ற இளைஞர்களது பெற்றோர் பெண்ணைப் பெற்றவர்களைத் தம் விருப்பபடி ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர்.

மகனைப் படிப்பித்த பணத்தை மட்டுமின்றித் தாம் பெற்ற பெண்களுக்கு வழங்கவுள்ள சீதனப் பணத்தையும் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து சிலர் கறந்து விடுவார்கள். இதனால் யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில், பணமும் தொழில் அடிப்படையில் கல்வி கற்ற ஆண்பிள்ளைகளும் இல்லாதவர்கள் தமது பெண்களுக்குத் திருமணம் செய்யப் பெரிதும் சிரமப்பட்டனர்.

ஆயினும் பின்னர் நாட்டு நிலையால் பலதரப்பட்ட நிலைகளில் உள்ள இளைஞர்களும் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா என்று போகத் தொடங்கியதும் நிலமையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எல்லா நிலைகளிலும் பணம் புழங்கத் தொடங்கியதும் தமது பெண்களுக்குப் பெருமளவு சீதனம் கொடுத்துத் திருமணம் செய்து கொடுக்கப் பலரால் முடிந்தது.

இந்தியாவைப் போலன்றி யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் ஒரு குடும்பச் சொத்தும் வீடும் மகளுக்கு வழங்கப்படுவதே வழக்கம். இதற்கு அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. பெற்றோர் வயது முதிர்வடையும் போது மகளுடன் வாழச் செல்வது வழக்கம். அவர்கள் வழங்கிய வீட்டாலும் சொத்தாலும் எதுவித மனப்பாதிப்புகளுமமின்றி அவர்கள் உரிமையுடன் அங்கு வாழ முடிந்தது. இந்த நல்ல முறை காலப்போக்கில் மாப்பிள்ளை பகுதியினரின் பேராசையால் பெண்ணைப் பெற்றவரிடம் அதிக பணத்தைப் பலவந்தமாகக் கேட்கும் சீதன முறைக்கு வித்திட்டது எனலாம்.

அடுத்ததாக ஜாதகம் பார்த்தல். ஜாதகம் பார்த்தலே திருமணப் பேச்சில் முதலாவது கட்டமாகக் கருதப்படுகிறது. சாத்திரிகள் ஜாதகப் பொருத்தம் சம்பந்தமாகக் கூறுவது வேத வாக்காகக் கொள்ளப்படுகிறது. சாத்திரத்தைத் தொழிலாகக் கொண்ட பலருக்குப் பெரும்பாலும் திருமணப் பொருத்தம் பார்த்தலே பிரதான வருவாய்க்கு வழி வகுப்பதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் பெரும்பான்மையானவை ஜாதகப் பொருத்தம் பார்க்கப்பட்ட பின்னரே நடைபெறுகின்றன.

திருமணம் செய்யப்படவுள்ள ஆணோ பெண்ணைப் பற்றி வெறும் கேள்வியறிவின் மூலம் முற்றாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் ஜாதக ரீதியாக பெறப்படும் சில தகவல்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது. சிலர் எண் பொருத்தமும் பார்ப்பதுண்டு. ஜாதக, எண் பொருத்தங்களில் உண்மை உண்டோ இல்லையோ, அதிகமாக வந்துள்ள சாதகக் குறிப்புகளில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கேற்ப எண்ணிக்கையை வரையறுப்பதற்கும், அதிகம் விருப்பமில்லாத குடும்பங்களில் இருந்து வந்த சம்பந்தங்களை ஒதுக்குவதற்கும் இப் பொருத்தம் பார்த்தல் பலருக்கு உதவியது எனலாம்.

முந்திய காலத்தில் பெண்களுக்குத் தமக்கு வரவுள்ள கணவனைத் திருமணத்தின் முன் பார்ப்பதற்கும் அவனைப் படித்திருக்கிறதா இல்லையா என்று கூறுவதற்கும் சுதந்திரம் வழங்கப்படவில்லை. ஆயினும் பெண்கள் அதிக அளவில் படித்துப் பட்டங்கள் பெற ஆரம்பித்த பின்னர் பெற்றோர் ஓரளவில் அவர்கள் விருப்பத்திற்கும் மதிப்பளிக்க ஆரம்பித்தனர். ஆயினும் சீதன முறையால் பெண்கள் இந்தச் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தங்களிடம் உள்ள பொருளாதார வளத்திற்கேற்ப வரும் சம்பந்தங்களில் ஒன்றைத் தம் பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பெற்றோர் ஆளாகினர்.

பெண்ணின் படிப்புக் கூடக்கூட திருமண விஷயத்தில் அவளது சுதந்திரம் குறையலாயிற்று. படித்த பெண்ணுக்குரிய ஒரு படித்த ஆணைத் தேடுவதற்குப் பெற்றோர் அதிக விலை கொடுக்கவேண்டி இருந்தது. ஏனெனில் படித்துப் பட்டம் பெற்ற ஆணுக்குக் கலியாணச் சந்தையில் பெறுமதி அதிகமாகவிருந்தது. படித்த பெண்களுக்கு ஏற்ற வகையில் அதிக சீதனம் கொடுத்து ஒரு படித்த இளைஞனைத் தேடிப்பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதன் காரணமாகச் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த படித்த பெண்களின் திருமணம் பெற்றோருக்கு அதிக பிரச்சினைக்கு உரியதொன்றாயிற்று.

இவை இப்படி ஒருபுறம் இருக்க இந்த கல்யாண முறைகளில் பல மாறுதல்களை எம்மக்கள்  கொஞ்சம்  கொஞ்சமாக  கொண்டுவர தொடங்கிவிட்டனர்.

 பெரும்பாலும் புலம்பெயர்ந்த பின் மிகவும் அதிகளவு மாற்றங்களைக் கொண்டது எனலாம். வேற்று இன மக்களின் குறிப்பாக வட இந்திய மக்களின் முறைகளில் நாட்டம் கொண்டு ஒவ்வொருவரும் தமக்கு விரும்பிய படி சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தினர்.

குறிப்பாக மணமகளின் குஜராத் சேலைகட்டும் முறை, மணமகனின் குருதார் உடை என்பனவற்றிலிருந்து அனைத்துமே மாற்றங்கள் பெறத்தொடங்கிவிட்டது.

இதைவிட வேறு ஊர் சம்பந்தம் ஏற்படும் போது, அவர்களும் ஆளாளுக்கு இது எங்கள் முறை, இது எங்கள் பழக்கம் என்று வாதிட, புதிதாய் சில மாற்றங்கள் தோன்றத்தொடங்கியும் விட்டன.

பல்வேறு கிரியைகளைக் கொண்டு நீண்ட நேரமாகச் செய்யப்பட்டு வந்த சடங்கு இன்று  குறுகிய   நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய வகையில் சுருக்கப்பட்டுள்ளது.

பிள்ளையார் பூசை, காப்புக் கட்டுதல், மணப்பெண்ணை அவளது பெற்றோர் மணமகனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தல், மணமகன் மணமகளுக்குப் புடவை முதலியவற்றைப் பரிசளித்தல், தெய்வம், சபையோர், அக்கினி சாட்சியாகத் தாலி கட்டுதல், அக்கினியை வலம் வருதல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், மாலை மாற்றுதல், பெரியோரிடம் ஆசி பெறுதல் ஆகியன இந்துத் தமிழரது திருமணங்களில் முக்கிய கட்டங்களாகக் கருதப்படுகின்றன. இந்த அடிப்படைக் கிரியைகளை விட வேறும் பல அம்சங்கள் காலத்திற்கும் வசதிக்கும் இடத்திற்கும் ஏற்றவாறு சேர்க்கப் பட்டும், நீக்கப்பட்டும் விட்டது.

இந்து சமயத்தின் படி திருமணம் என்பது ஒரு ஆணையும் பெண்ணையும் உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றுபட வைத்தலாகும். திருமணத்தின் பின் அவர்கள் உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும். கணவனைப் பிரிந்து வாழும் மனைவி நீர் இல்லாத நீரோடையையும் ஆன்மா இல்லாத உடலையும் போன்றவள் என்கிறது இராமாயணம்.

சிலப்பதிகாரத்திலே கோவலன் கண்ணகி திருமணத்திலேயே முதன் முதல் மணமக்கள் தீ வலம் வருதல் குறிப்பிடப்படுகிறது. இந்த வடநாட்டு முறை அந்தக் காலத்திலேயே தமிழ் நாட்டில் அறிமுகமாயிற்று. அக் காலத்திலிருந்து தீயை வலம் வரும் முறை தமிழரது திருமணங்களில் இடம் பெறலாயிற்று. ஆயினும் தீயை வலம் வருவதன் எண்ணிக்கை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இலங்கைத் தமிழ் இந்துக்களின் திருமணங்களில் பொதுவாக மூன்று தடவைகள் வலம் வரும் முறையே காணப்படுகிறது.

இந்து சமய மரபின் படி மணமக்கள் ஏழு தடவைகள் தீயை வலம் வருதல் வேண்டும் என்று கூறப்படுகிறது. முதல் நான்கு தடவைகளும் மணமகள் முன் செல்ல மணமகன் பின் தொடர்வான். அப்போது மணமகள் தனது கணவனிடம் ஏழு வேண்டுகோள்களை விடுப்பாள் என்று கூறப்படுகிறது.

    * 1. எந்த நேரத்திலாவது நீங்கள் சமயக் கிரியைகளில் கலந்து கொள்ளவோ அல்லது யாத்திரை செல்லவோ வேண்டியிருப்பின் அதற்கு முன் எனது விருப்பத்தைக் கேட்டு எனது சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

    * 2. எந்த நேரத்திலாவது நீங்கள் பிதுர்களை வழிபட விரும்பினால் என்னையும் அதில் இணைந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
    * 3. எந்த நேரத்திலாவது எனது பெற்றோர் அவமானம், வறுமை, நோய் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரும் போது நீங்கள் எனது கணவன் என்ற முறையில் அவர்களது துன்பத்தை நீக்க உதவ வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    * 4. எந்த நேரத்திலாவது நீங்கள் எங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதற்கோ அல்லது கோயில் கட்டுவதற்கோ அல்லது சமய சேவை செய்வதற்கோ விரும்பினால் அந்தச் செயற்பாடுகளில் உங்களுடன் இணைந்து கொள்வதற்கு நான் அனுமதிக்கப்பட வேண்டும்.

    * 5. எந்த நேரத்திலாவது நீங்கள் மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேலை விஷயமாகவோ வீட்டை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு போக நேரிட்டால் வீட்டில் எமது நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதி மொழியை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். அத்துடன் அவ்வாறு போவதன் முன்னர் எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

    * 6. எந்த நேரத்திலாவது நீங்கள் கொடையளிக்க, பொருள்களையோ பணத்தையோ கொடுக்க வாங்க விரும்பினால் அதற்கு முன்னர் எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்,

    * 7. எங்களது வயது முதிர முதிர உங்கள் அன்பும் விருப்பமும் வளர்ந்து முதிர வேண்டும் என்று இப்போது நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மணமகளின் இவ்வேழு கோரிக்கைகளுக்கும் மணமகன் சம்மதம் தெரிவித்த பின்னர் அவன் வழிநடத்த மணமகள் தொடர இருவரும் தீயை வலம் வருவார்கள்.

நல்ல நண்பர்கள் ?

நல்ல நண்பர்கள் ?

இதோ எனக்கு

  தெரிந்தவை நான் அறிந்தவை:-

 நல்ல நண்பர்களே கிடைக்கவில்லை என்றால் பிழை நண்பர்களில் இல்லை. நம்மனதில்தான்இருக்கிறது.நீங்கள் அறிந்த வரையறை பிழையானதாக இருக்கும். நண்பன் என்பவன் ஆபத்தில் உதவும் மூன்றாவது மனிதனாக மட்டுமின்றி, நீங்கள் வீட்டிற்குள் செல்லும்; போது ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும் உங்கள் ஜுனியராகவோ, கால்களுக்கிடையே இடையே சுற்றிவரும் பூனைக்குட்டியாகவோ, சொன்னதையே சொல்லிச் சொல்லி இன்பம் தரும் கிளியாகவோ, உங்கள் சந்தோசத்தின் போது வாலையாட்டியும், துக்கத்தின் போது தானும் சாப்பிடாமல் உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டு நம் கவலையைப் பகிர்ந்து கொள்ளும் நாயாகவோ கூட இருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட புத்தகங்களை உங்களது நண்பனாக்கிக் கொண்டால் சிறந்த மனிதனாவீர்கள். உங்கள் உள்ளங்கள் பரந்த வெளியாக இருக்கும் போது உங்களைச் சுற்றி நண்பர்கள் மட்டுமே இருப்பர்கள்.

நண்பர்கள் செய்யும் காரியம் ஏற்புடையதென்றால் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்துங்கள். கைகளைத் தட்டுவதால் உங்கள் ரேகைகள் அழிந்து போய்விடாது.  கைகளைத் தட்ட சோம்பல்படும் நண்பர்களிடம் சொல்லுங்கள் ; அமைதியாக வேடிக்கை பாருங்கள் – என்று. வேடிக்கை பார்த்துக் கொண்டே உங்களுக்குப் பள்ளம் வெட்டுபவர்களிடம் சொல்லுங்கள்,ஒரு நண்பனை
அழித்தால் அவன் போல  இன்னும் நூறு நண்பன் கிடைப்பான் என்று

சிக்கனமாய் இருப்பவரா நீங்கள்?


இந்த பொருளாதார நெருக்கடியில் மில்லியன்களில் புழங்கும் பன்னாட்டு நிறுவனங்களே தள்ளாடுகின்றன...மாத சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துபவர்கள் பாடு திண்டாட்டம்தான்...பணக்காரனாய் இருந்தாலும் சரி, அன்றாடங்காய்ச்சியாய் இருந்தாலும் சரி, அனாவசிய செலவுகளை,ஆடம்பர செலவுகளை குறைத்தால் நிம்மதியாய் வாழலாம்.

முதலாவதாக அடிக்கடி கடைகளுக்குச் செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள். மளிகை சாமான், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் இப்படி என்னவாக இருந்தாலும் மாதம் ஒரு முறை திட்டமிட்டு ஒரே நாளில் உங்கள் ஷாப்பிங்கை முடியுங்கள்.. அதற்காக முழு கடையையும் உங்கள் வீட்டுக்கே தூக்கிச் செல்லும் அளவிற்கு பொருட்களை வாங்கி குவித்து விடாதீர்கள்...என்னென்ன சாமான்கள் வேண்டும் என்பதை நிதானமாக யோசித்து வீட்டிலேயே ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொண்டு செல்லுங்கள்...இம்பல்ஸிவ் பையர்-ஆகாமல், உங்களுக்கு தேவையான பொருட்களை "மட்டும்" வாங்குங்கள்.

இதனால் அலைச்சல் மிச்சம்..எரிபொருள் மிச்சம்..முக்கியமாக "பணம்" மிச்சம்!!!

நீங்கள் எப்படி சிக்கனத்தைப் பேணுகிறீர்கள்?

உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் !!!!! 

அப்பா - என் ஒவ்வொரு வயதிலும்..!



ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்?

என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

 என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்!

என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்!

என் 12 வயதில் : நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்!

என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி!

என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்துகொள்ளாதவர்!

என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி

என் 20 வயதில் : எங்கப்பா தொல்லையைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்களோ?

என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்!

என் 30 வயதில் : என் பையனை கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசுல இருந்தப்ப எங்க அப்பான்னாலே எனக்கு எவ்வளவு பயம்!

என் 40 வயதில் : என்னை என் அப்பா எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார்! நானும் அப்படித்தான் பையனை வளர்க்கப்போறேன்

என் 45 வயதில் : அப்பா எங்களையெல்லாம் எப்படி வளர்த்தார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது

என் 50 வயதில் : அப்பா எங்களை வளர்க்க எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தார். எனக்கோ ஒரேயொரு பிள்ளையைக்கூட கட்டுப்படுத்த முடியல

 என் 55 வயதில் : எங்கப்பா எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு எங்களுக்காக எதையும் திட்டமிட்டுச் செய்தார். அவரைப்போல வேற ஒருத்தர் இருக்க முடியாது

என் 60 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

- எந்தப் பிள்ளையும் தன் தந்தையை தன் வாழ்க்கையின் முதல் கட்டத்தில் பார்த்தது போலவே மீண்டும் பார்ப்பதற்கு இப்படி 56 ஆண்டுகள் ஆகிவிடுகிறது! எனவே காலத்தை வீணாக்காதீர்கள், உங்கள் பெற்றோரை மறந்து-விடாதீர்கள்

தமிழர் கல்யாணத்தில் தாலிக்கொடி!


தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ”பண்பாட்டு அசைவுகள்” என்ற புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள்:

    *
      1. தாலி – என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.
    *
      2. நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
    *
      3. தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி மட்டுமே!
    *
      4. ‘கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது’ – வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.
    *
      5. ‘பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை’ – பெரும்புலவர் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனார்.
    *
      6. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.
    *
      7. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
    *
      8. கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.
    *
      9. இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.
    *
      10. பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது
    *
      11-ஆம் நூற்றாண்டில் கச்சியப்பரால் இயற்றப்பட்ட கந்தபுராணத்தில் தான் திருமணத்தின்போது தாலி கட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

தாலி கட்டிய பின் நாய் போல் நடத்துவதற்கும், நாய்க்கு தாலி கட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?... பாருங்கள் மணமகனின் மகிழ்ச்சியை!!??

தாலி கட்டிய பின் நாய் போல் நடத்துவதற்கும், நாய்க்கு தாலி கட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?... பாருங்கள் மணமகனின் மகிழ்ச்சியை!!??

பழந்தமிழர் யார்? அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைப் பற்றி நமக்கென்ன கவலை. அது இன்று அறிவுக்குப் பொருந்துமா? என்று கேட்டு, தாலி அடிமையின் சின்னம் என்றார் தந்தை பெரியார்.

பெண்ணிய பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆண் ஆதிக்க (male chauvanism) செயற்பாடாக தற்போது சில முற்போக்கு எண்ணமுடையவர்களினால் பார்க்கப்படுகிறது.

இப்படி பல விடயங்கள் வரலாற்றில் உள்ளபோதும் அவற்றை எல்லாம் ஒரு அறிவுக்காக அறிந்து கொண்டு  நாம் இப்போ  நிகழ்கால நிகழ்வுக்கு வருவோம்.

தற்போது கல்யாணத்திற்கு தாலிக்கொடி செய்வதை ஒரு போராட்டம் என்றே கருதவேண்டும். காரணம்

    அவர் 10 பவுனில் போட்டுவிட்டார் நான் 15 பவுனில் போடவேண்டும்…

என்னும் வறட்டுக் கெளரவம்  படியேறிப்  படியேறி  தற்போது 50 பவுனில் வந்து நிற்கின்றது. இதைவிட இன்னுமொரு ஆச்சரியப்பட வைக்கும் விடயம், சிலர் பேரப்பிள்ளையையும் கண்டபின், தமது பழைய தாலியை புதுப்பித்து 50 பவுணில் பெருப்பித்து கட்டுவதுதான்!

இன்னும் ஒரு விடயம், சிலர் தமது மகளின் கல்யாணத்திற்கு என்று வெளிநாட்டில் இருந்து இந்தியா சென்று, மகளுக்கு தாலி கட்டுவதுடன், தாய் தானும் ஒரு புதுத்தாலி கட்டி வருபவர்களும் இருக்கின்றனர்!

இங்கு மற்றொரு விடயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது தமிழ் நாட்டில் என்னதான் பணக்காரர்கள் என்றாலும் அவர்கள் மஞ்சள் கயிற்றில் தான் தாலி கட்டுவார்கள். அப்போதுதான் மூன்று முடிச்சு போடமுடியும்! எப்படி இலங்கையில் பவுனில் தாலிக்கொடி கட்டும் வழக்கம் வந்ததோ தெரியவில்லை.

ஒருவிதத்தில் பார்த்தால் தாலியோ, நகைகளே ஒருவகையில் சொத்துச்  சேர்ப்பது  போன்றதுதான். ஒரு அவசரத்திற்கு உடனே காசாக்கல்லாம். இலங்கையில் கையில் காசில்லாத போர் சூழலில் உள்ள மக்கள் தமது நகைகளையும், ஏன் தாலிக்கொடியையும் விற்று தமது அன்றாட செலவை செய்தனர்.

இதைவிட சமுகத்தில் ஒரு அந்தஸ்த்து என சம்பத்தப்பட்டவர்கள் கருதுவதும், அழகு என எண்ணுவதும் காரணமாக இருக்கல்லாம். பார்ப்பதற்கு கண்ணுக்கு நிறைந்த காட்சியும் தானே!

சுனாமி..!



சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு + னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

சுனாமி எப்படி உருவாகிறது?

பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின. இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.


எப்படியெல்லாம் வரும் சுனாமி.?

1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.

2. கடலாழ பூகம்பத்தினால் வரும்

3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.

4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.

5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)

6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.


சுனாமி முதன் முதலில் ஏற்பட்டது எப்போது..?

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.

2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.


சுனாமி எச்சரிக்கை அமைப்பு:

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.

அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் 'சுனாமி மிதவை கருவி'.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்:

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.

நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும்.

அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி?


பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி?

பிறந்தநாள் அப்படீனு காதுல விழுந்தாலே அது சீமைல
இருந்து வந்த வழக்கம். மேற்கத்திய நாடுகள்ள அவங்க
கொண்டாட நாம அதை பழக்கத்துல எடுத்துக்கிட்டோம்
அப்படீனு எல்லாம் நினைப்போம். எங்க பாட்டி
சொன்னாங்க, 'அது அப்படி இல்லடா பேராண்டினு'.
கிழவி ரொம்ப விவரமாவே சொல்லுச்சு. சரி, விசயத்த
மேல பாப்போம்.

அதாவது வந்துங்க, இந்த தீய சக்திகள் காத்து கருப்பு,
இதுக்கெல்லாம் குழந்தை பிறப்பு, குழந்தைக பிறந்த நாள்
இப்படி ஒரு சில விசயங்கள சுத்தமா பிடிக்காதாம். அந்த
மாதிரி நேரங்கள்ல சம்பந்தபட்டவங்கள எப்படியாவது
தொந்தரவு பண்ணனும், தீத்து கட்டனும்னு வெறியா
அலையுமாம். நீங்களும் பாத்து இருப்பீங்க, கேள்விப்பட்டு
இருப்பீங்க,"வெடிஞ்சா பொறந்த நாள், இப்படி ஆயிப்
போச்சு,பிறந்த நாள் அன்னைக்கு இப்படி கைய
ஒடச்சிட்டு வந்து நிக்கறானே, பிறந்த நாள் கொண்டாடிட்டு
வண்டியில அவங்க அம்முச்சி(பாட்டி)ய பாக்க போனாங்க,
இப்படி ஆயிருச்சு"னு சர்வ சாதாரணமா ஊர்ல சனங்க
புலம்பறத கேட்டு இருப்பீங்க.

அதனால அந்த காலத்துல எல்லாம், குழந்தை பிறப்புன்னா
பதினஞ்சு நாளைக்கு முன்னாடியே சொந்த பந்தம்,
ஊர்க்காரங்கன்னு ஒரு பெரிய கூட்டமே வீட்டுக்கு
வந்துருவாங்களாம். ஏழு வயசுக்கு உட்பட்ட குழந்தைக
பிறந்த நாள் வருதுன்னு சொன்னா,மூணு நாள் முன்னமே
நெறய பட்சணம், பலகாரம்,சிறுதீன்,விளயாட்டு
சாமான்னு நெறய கொண்டு வந்து வீட்டிலயே
உக்காந்துக்குவாங்களாம்.

கூட்டம் கூடினா கூத்து கும்மியடி கும்மாளம்,
கொண்டாட்டந்தானே! இந்த கூத்து கும்மாளம், குலுவை,
பாட்டு சத்தம் இதுகளக் கண்டா தீய சக்திகளுக்கு
பயம் வந்து, கிட்டயே வராதாம். பிறந்த நாள் அன்னைக்கு
குழந்தய குளிக்க வச்சி, புதுத்துணியெல்லாம் போட்டதுக்கு
அப்புறம் இறைவணக்கம் சொல்லி, பாட்டு பசனை எல்லாம்
பாடி, சாமி கும்புடுவாங்க. அதுக்கப்புறம் எல்லாரும்
வாழ்ததுவாங்க, நலங்கு வெச்சி ஆசி வழங்குவாங்க. திருநீறு
பூசி நலங்கு வெப்பாங்க. பூத்தூவி நலங்கு வெப்பாங்க.இப்படி
பல விதமா குழந்த நல்லா இருக்கணும்னு வேண்டிக்குவாங்க.
அப்புறம் பரிசுத் தொட்டில்ல விழுந்த, பரிசுகள வெச்சி
விளயாட்டு காமிச்சி குழந்தய உற்சாகமா வெச்சு இருப்பாங்க.
எந்த ஆத்மா மகிழ்வா மன சஞ்சலம் இல்லாம இருக்கோ,
அந்த ஆத்மாவ கெட்ட சக்திகள் ஒண்ணும் பண்ணாதுங்றதும்
ஒரு ஐதீகம்.

ஆக, இப்படி நம்ம ஊர்ல பழங்காலத்துல தோணின ஒரு
சம்பிரதாயந்தான் இந்த பிறந்த நாள் விழா. இதுல இருந்து
நாம தெரிஞ்சுக்கறது என்னன்னா,யாருக்கு பிறந்த நாள்
விழான்னு தெரிஞ்சாலும் மனசார வாழ்த்துங்க.
கூப்பிடறாங்களோ இல்லயோ நீங்க மனசார வாழ்த்துங்க.
வாழ்த்துறதுல உங்களுக்கும் மகிழ்ச்சி, அவங்களுக்கும்
மகிழ்ச்சி இல்லீங்களா?

(பிறந்த நாள் அன்னைக்கு தண்ணி ஏத்தி கும்மாளம் போட்ட
இளசுகளப் பாத்த கெழவி இன்னொரு கெழவிகிட்ட சொல்லுது,
"என்னடி ரங்கநாயகி, இவனுக எங்கயோ இருக்குற காத்து கருப்ப,
வீட்டுக்கு விருந்து வெச்சு அழைக்கிற மாதிரி இல்லே இருக்கு
இவனுக கூத்து..")

மெல்போர்ன் - மழை..வெயில்..குளிர்...


மெல்போர்ன் - மழை..வெயில்..குளிர்...

மழை..வெயில்..குளிர்...

மெல்போர்ன் என்றாலே இம்மூன்றும் நினைவுக்கு வந்து ஒரு விதமான சுகத்தையும், சூட்டையும் உண்டுபண்ணும்.

இங்கு வாழ்ந்தவர்களுக்கும்,வாழ்பவர்களுக்கும் அதன் அர்த்தம் புரியும். பொதுவாக மெல்போர்ன் காலநிலை எப்போதும் ஒரு சீராக இருப்பதில்லை..ஒரு நாளில் ஆறு வானிலைகள் தோற்றம் காட்டும் ஒரு காலத்துப்பூங்கா..இப்பொது தண்ணீரை அரசியலும் இயற்கைத்தாயும் சரி பாதி பங்கெடுத்து தர முயற்ச்சிக்கின்றனவாம்...இயற்கைத்தாய் சரி..அரசியல்?

காலையில் அடிக்கும் வெயில்,சரி இன்று குளிர்சட்டை தேவையில்லைபோல என்று இங்கு(மெல்போர்ன்) வந்த தொடக்கத்தில் நினைத்து வெளிக்கிளம்பியபோது பக்கது வீட்டு ஆண்டி ஒரு மாதிரி சிரித்தது இன்னும் நினைவுக்குள் இருக்கு. அடுத்த நிமிடம் காற்றும் மழையும் அடித்து நடந்துபோன என்னை ஓடவைத்தது. இரயில் நிலையத்தில் நின்ற அரைவாசி மூக்கு முகத்தில் ஒட்டிக்கொண்ட பெண்ணும் சிரித்துவைத்தாள். மறுபடியும் வெயில்,இப்போது காற்றும் சேர்ந்து..அன்று வீடு திரும்பியபோது அந்த ஆண்டி சொன்னபிறகுதான் ஓரளவு விளங்கியது.

இன்று பலஆண்டுகள் களித்தும் சிலநேரங்களில் எதையும் பார்க்காமல் வெளியில் கிளம்பிவிடுவேன் ஆனால் இம்முறை கார் இருக்கிறது என்ற துணிவில், ஆனாலும் சிலநேரங்களில் மழையிலுமோ அல்லது வெயிலிலோ மாட்டிவிடுவேன்.இன்றும் அப்படித்தான் ஆனால் மெல்போர்ன் தனது ஆறுமுறைமாறும் வானிலையை இருமடங்காக்கியிருக்கிறது என்று மட்டும் புரிகிறது. நாளை?

மழை...வெயில்..காற்று...

யாரிடத்தும் எதையும் எதிர்ப்பார்க்காதே - சிந்தனைத்துளி


சுதந்திரமானவனாக இரு. எவரிடத்திருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன் உனது கடந்தகால வாழ்க்கை நீ பின்னனோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமல் போனதையும் தான்காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்து வந்தவையாகத்தான் இருக்கும்.

- விவேகானந்தர்.

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.

-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.

- வால்ட் விட்மல்

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.

- விவேகானந்தர்.


மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி

- சீன அறிஞர் கன்பூசியஸ்


“வேதனையைத் தாங்கி
பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”

- தாகூர்

உறவுகள்….. உணர்வுகள்.....

“டீன் ஏஜ் பருவம்” ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கவே முடியாத மிக அழகான காலகட்டம்தான்.

துடிதுடிப்பு, பரப்பரப்பு, அலட்சியம், எந்த விஷயத்தையுமே மிகைப்படுத்துதல், ஆரவாரம், ஆர்ப்பாட்டம் என அமர்க்களமாயிருகும். அந்தப் பருவத்தில் அதற்கு எதிர்மாறான வலிகளும், ரணங்களும் தாக்குவது இயல்புதான்.

சுருக்கமாக சொல்லப்போனால் முரண்பாடுகளின் ஒட்டு மொத்த சங்கம்ம்தான் “டீன் ஏஜ்” பருவம்.

இந்தப் பருவத்தினரைக் கையாள்வது என்பது சாதார விஷயமல்ல. கம்பி மேல்நடப்பது போல் அதி ஜாக்கிரையுடன் இருக்க வேண்டியது அவசியம். டீன் ஏஜ் பருத்தினரின் மனநிலையை இந்த குட்டிக்கதை தெளிவாக விளக்கம் என நம்புகிறேன்.

ஒருவன் குரங்குகளை வளர்த்து வந்தான். தினமும் அவை சாப்பிட காலையில் நான்கு மாம்பழங்களையும் மாலையில் மூன்று மாம்பழங்களையும் கொடுத்து வாந்தான்.

ஒருநாள் அந்தக் குரங்குகளைப் பார்த்து “இனிமேல் உங்களுக்கு காலையில் மூன்று மாம்பழங்களும் மாலையில் நான்கு மாம்பழங்களும் தரலாம் என்றிருக்கிறேன்” என்றான்.

இப்படிச்சொன்னதுதான் தாமதம். “முடியாது. முடியவே முடியாது. இதற்கு நாங்கள் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது” என்று எல்லாக் குரங்களுகள் கத்த ஆரம்பித்துவிட்டன.

“கொஞ்சம் பொறுமையாகக்கேளுங்கள். காலையில் நான்கு மாலையில் மூன்று என்று வைத்துக் கொண்டாலும், காலையில் மொத்தம் உங்களுக்குக் கிடைக்கப் போவது ஏழு மாம்பழங்கள் தானே?

இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்… என்று எஜமான் விளக்கமளித்து முடிப்பதற்குள் அவை “வேண்டாம் வேண்டாம் எங்கள் முடிவை நாங்கள் மாற்றிக் கொள்வதாக இல்லை. முதலில் கொடுத்த முறைப்படியே கொடுங்கள்” என்று போராடி வெறி பெற்று, அந்த எஜமானரை சம்மதிக்க வைத்த பிறகு தான் ஓய்ந்தன.

இதே மனநிலைதான் டீன் ஏஜினருக்கும். முடிவைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அடுத்தவர் சொல்லும் கருத்தை ஆராய்ந்து அதில் இருக்கும் சாதக பாதகங்களைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம் இருப்பதில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று பிடிவாதமா இருப்பார்கள்.

அடுத்தவர் சொல்லி விட்டார் என்பதற்காகவே, இவர் சொல்லி நாம் என்ன கேட்பது என்று நினைத்து வேண்டுமென்றே அதற்கு நேர்மாறாக செய்வார்கள்.

இவர்களை வலதுபக்கம் போகச் சொல்ல வேண்டும் என்றால் “இடது பக்கம் போ” என்று சொன்னால் போதும். காரியம் சரியாக நடந்துவிடும்.

அடுத்தது, இந்தக் குரங்குக்கூட்டத்தைப் போலவே ஒருவன் எதிர்க்க ஆரம்பித்தால் எல்லோரும் சேர்ந்து கொண்டுகூட்டத்தோடு கோவிந்தா போடுவது. இந்தக் குழு மனப்பான்மையின (Mass Mentality) எதிரொலிதான் கல்லூரிகளில் அடிக்கடி நடக்கும் ஸ்டிரைக், கலாட்டா போன்றவை.

இந்தக் கதையில் இன்னொரு உட்கருத்தும் பொதிந்துள்ளது. வாழ்க்கையின் முற்பகுதியில் கஷ்டப்பட்டுவிட்டு பிறகு சந்தோஷமாக வாழலாம் என்ற எண்ணம் மன முதிர்சி உடையவர்களுக்கு எழும். இப்போது கஷ்டப்படுவது பின்னால் கஷ்டப்படாமலிருப்பதற்குத்தான் என்ற பக்குவம் டீன் ஏஜ் பருவத்திற்குத் தோன்றாது.

இந்தக் குரங்குகள் எப்படி காலையிலேயே அதிகமா சாப்பிட்டு விடவேண்டும் என்று நினைகின்றனவோ அதே போல்தான் இப்போதே வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்து விடவேண்டும் என்ற எண்ணம் இவர்கள் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும்.

“ஃபீயூச்சரைப் பத்தி யோசிச்சு பிரசன்ட் மறந்திராதே” என்று அதிமேதாவித்தனமாக தத்துவம் பேசுவார்கள். இதற்கு அத்தம் திருட்டுதம் அடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது, பெரியவர்களை எதிர்த்துப் பேசுவது தவறில்லை என்பதுதான்.

டீன் ஏஜினர் பேசும்போது கொஞ்சம் உற்றுக் கவனித்துப் பாருங்கள். ஒருவன் ஜோக்கடிப்பான் எல்லோரும் சிரிப்பார்கள். உடனே இன்னொருவனுக்குத் தன்னுடைய திறமையைக் காட்டி எல்லோரையும் தன் ஒரு கானா பாடலை எடுத்து விடுவான். உடனே எல்லோரும் கைதட்டுவார்கள்.

இது போராடித்து விட்டதா? அடுத்தகட்டம் சத்தமாய் சிரித்துப் பக்கத்தில் நடந்து போவோரை கதிகலங்கச் செய்வது, பஸ்சைத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்வது போன்ற நடவடிக்ககளின் மூலம் அடுத்தவரை திரும்பிப் பார்க்க வைத்து விடுவார்கள்.

நாய் குரைப்பது போல் சப்தம் எழுப்பும் ஹாரன்களை நம் பக்கதில் வந்து அடித்து பயமுறுத்துவார்கள். யாராவது “ஏம்பா ஒழுங்கா பார்த்துப் போகக்கூடாதா?” என்று நியாயமாய் கேள்வி எழுப்பினால் “ஏய், என்னா பெருசு, ஃபிலிம் காட்டற?” என்று எகிறுவார்கள்.

இதெல்லாம் தங்கள் ஈகோவை பூஸ்ட் அப் செய்து, உலகத்திலேயே நான் பெரிய ஆள், என்னை விட்டால் வேறு யாரும் கிடையாது என்று காட்டிக் கொள்ளத்தான்.

கூட்டத்திலிருக்கும் போது வீரம் காட்டுவார்கள். தனியாய் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான்! பேய் முழி முழித்து “ஸாரி தலைவா” என்று ஜகா வாங்கி விடுவார்கள்.

இது போல் டீன் ஏஜினரின் சாகசங்களையும் குணநலன்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். மேற்சொன்னதெல்லாம் சிறுதுளிதான். இவற்றையெல்லாம் நான் குற்றச் சாட்டுகளாக சொல்லவில்லை. இந்த சேஷ்டைகள் எல்லாம் இல்லையென்றால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.

‘டீன் ஏஜினரின் குணங்களை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால்தான், அவர்களை எப்படிக் கையாள்வது என்பதை உணர முடியும்.

குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, பிறந்த குழந்தை இரவில் அழும். நம்மைத் தூங்கவிடாமல் செய்யும் என்பதை தாய் புரிந்து கொண்டு, தூக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு தயாரகிவிடுகிறாள்.

அதேபோல்தான் டீன் டீஜ் பருவத்தை அடையும்போது நம் குழந்தை இப்படி இப்படி நடந்து கொள்வான், அவன் மனநிலை இப்படித்தான் இருக்கும் என்பதை முதலிலேயே பெற்றோர் உணர்ந்து கொண்டு விட்டால், அந்த சமயத்தில் அவர்களை அழகாகக் கையாண்டு விடலாம்.

டீன் பருவத்தில் உங்கள் குழந்தையின் மனது கடல் போல பெருத்த ஆரவாரத்துடன் இருக்கும். அவர்கள் எப்போதும் சத்தம் போட்டுச் சிரிப்பது, ரேடியோவை, டீவியை சப்தம் அதிகமாய் வைப்பது போன்றவற்றிற்கெல்லாம இந்த மனநிலைதான் காரணம்.

தங்களின் மன இரைச்சலைத்தான் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். அது உங்களுக்கு எரிச்சல் மூட்டினாலும், பக்குவமாய் சொல்லித்தான் மாற்றி முயல வேண்டும்.

அதிக சத்தத்தினால் அக்கம்பக்கதிலுள்ள எவருக்கு எவ்வளவு தொந்தரவு, உன் காதிற்கு எவ்வளவு கேடு என்ற ரீதியில் பேசினால் நிச்சயமாய் இந்தப் பிரச்சனையைத் தீர்த்து விடலாம்.

நான் ஏற்கனவே சொன்னது போல இந்தப் பருவத்தினருக்கே உரிய குணம் ஈகோ, “நான்” “தன்னுடைய” என்ற நினைப்பு இவர்களுக்கு அதிகமாயிருக்கும். கத்தியை கொல்லவும் பயன்படுத்தலாம் என்பது போல் இவர்களுடைய ஈகோவை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம்.

அவர்களை அருகில் அமர வத்துப்பேசுங்கள். “உனக்கு என்ன வேண்டும்? உன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் அவ்வளவு தானே இதற்கு ஏன் இப்படி பஸ்ஸைத் தட்டிக் கூச்சல் போடுகிறாய்? இதனால் மற்றவர்களின் எரிச்சலைத்தானே சம்பாதித்துக்கொள்கிறாய்? இந்த சக்தியைப் பயன்படுத்தி பாட்டு கற்றுக் கொள், மேடையில் கச்சேரி செய், புகழுக்குப் புகழ், பணித்திற்குப் பணம். என்ன…?” அப்படிப் பேசிப் பாருங்கள்.

நிச்சயமாய் ஏதாவது ஒரு துறையில் உங்கள் பிள்ளை சாதித்துக் காட்டுவான். ஆரம்பத்தில் தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும். என்பதற்காகவே ஆரம்பித்தாலும் போகப் போக இந்த கலைகளே அவன் மனதிலிருக்கும் அகங்காரத்தைத் துடைத்துப் போடும்.

ஊரை அழிக்கும் பெரிய வெள்ளத்தை மடைதிருப்பி விட்டு பலருக்கும் பயனுள்ளதாக எவ்வளவு எளிதில் நீங்கள்மாற்றி விட்டீர்கள் பார்த்தீர்களா?

டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர் அடிக்கடி சொல்லும் “வார்த்தை வயித்தில நெருப்பைக் கட்டிக்கிட்டிருக்கேன்” என்பது தான். காரணம்? இந்த வயதில் வரும் இன்ஃபார்ச்சுவேஷன்.

கனி ஜோதிடம் தெரியுமா...........

கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா?
மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.

கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!

மாம்பழப்பிரியரா நீங்கள்?

அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோ மிகவும் கடினமான விஷயம். உங்களுக்கென்று மாற்றமுடியாத நிலையான எண்ணங்கள் இருக்கும். எந்தச் சூழ்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்புவீர்களே தவிர சூழ்நிலைக்கேற்றவாறு நீங்கள் வளையமாட்டீர்கள். மூளைக்குச் சவால் விடும் பணிகளை அதிகம் விரும்புவீர்கள். கொஞ்சம்... கொஞ்சமென்ன நிறையவே பிடிவாதக்காரர் நீங்கள். ஆயினும் அன்பான துணையிடம் கன்றுக்குட்டி போல் பாசமாக இருப்பீர்கள். அன்பை வீட்டுக்குள்ளும் உங்கள் வலிமையையெல்லாம் வெளியிலும் காட்டுவது உங்கள் தன்மை.

உங்கள் விருப்பம் வாழைப்பழமானால்....

நீங்கள் அந்த வாழைப்பழம் போலவே மென்மையானவர். மிகவும் அன்பானவர். பிறருக்கு இரங்கும் மனமும் இதமாகப் பழகும் குணமும் நிறைந்தவர். ஆனால் உங்களுக்குக் கூச்சம் அதிகம். பிறருடன் கலந்து பழக மாட்டீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறைவுதான். உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு விடுவர். கவனம் தேவை.
உங்கள் துணையை நீங்கள் மிகவும் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வீர்கள். உங்கள் இனிய குணத்தினால் உங்கள் குடும்ப வாழ்வில் எப்பொழுதும் அமைதியும் அன்பும் நிலவும்.

ஆரஞ்சுப் பழத்தை விரும்புபர்களுக்கு:

அதிக அளவு பொறுமையும்இ அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவர்கள் நீங்கள். மெதுவாக நிதானமாக அதேசமயம் கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள் நோக்கமாக இருக்கும். நீங்களும் கூச்ச சுபாவம் உடையவர்தான் என்றாலும் நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள். பொதுவாக சண்டை சச்சரவை விரும்பாதவர்களாகிய நீங்கள் மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர். உங்கள் வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்; முழு மனதுடன் நேசிப்பீர்கள்.

ஆப்பிளை விரும்பும் அன்பர்களே!

நீங்கள் உடனடியாக முடிவெடுத்துத் தடாலடியாகச் செயல் படக்கூடியவர். அதிகமாகச் செலவு செய்பவர். மிகவும் வெளிப்படையாகப் பேசும் போக்கை உடையவர். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப் படுபவர். உற்சாகத்துடன் நடைபோடக்கூடியவராகிய நீங்கள் ஒரு குழுவிற்குச் சிறந்த தலைவராக விளங்கக் கூடியவர். எப்பொழுதும் முன்னேறிச் செல்வீர்களே தவிர சுணங்கிவிட மாட்டீர்கள். வாழ்வில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டிலும் செயல்பாட்டில் காட்டும் ஆர்வத்திலும் உங்களுக்கு நிகர் நீங்களேதான். உங்கள் துணையின் உள்ளம் கவர்ந்தவர் நீங்கள்.

அன்னாசியை ரசித்து ருசிப்பவரா?

நீங்கள் எந்த விசயத்தையும் சட்டென ஆலோசித்து முடிவெடுத்து அதைவிட வேகமாகச் செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு அதனால் லாபம் ஏற்படும் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை மாற்றிக்கொண்டிருக்கும் பழக்கமுடையவர் நீங்கள். எவ்வளவு பெரிய வேலையாக இருப்பினும் அதை அருமையாக ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யும் திறமையில் உங்களுக்கு இணையே இல்லை என்று சொல்லலாம். தன்னிறைவுடனும் நேர்மையாகவும் இருப்பது உங்கள் தன்மை. எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள் ஆனால் அப்படி நட்புக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்நட்பைத் தொடர்வீர்கள். உங்கள் துணைவர் ஃ துணைவி உங்கள் ஒளிவு மறைவில்லாத குணத்தால் ஈர்க்கப் பட்டாலும் அன்பை வெளிக்காட்டத்தெரியாத உங்கள் தன்மை அவரை சலிப்படையச் செய்துவிட வாய்ப்புண்டு.

திராட்சை விரும்பிகளே!

உங்களைப்பற்றிப் பார்ப்போமா? நீங்கள் பொதுவாக மென்மையாகஇ அமைதியாகப் பழகக் கூடியவர். ஆனால் 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழி உங்களைப் பற்றித்தான் எழுந்ததோ என்னவோ! கோபம் பொங்கி வரும் அதே வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு. அழகினை ஆராதிப்பவர் நீங்கள். மலரோஇ ஓவியமோ குழந்தைகளோ மற்ற மனிதர்களோ எதுவானாலும் அழகாக இருந்தால் இரசிப்பதும் பாராட்டுவதும் உங்களுக்கு இயல்பானது. உங்கள் தோழமையான அணுகுமுறையாலும் வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும்இ உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள் வட்டத்தில் நீங்கள் பிரபலமானவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதை ஏனோதானோ என்று செய்யாமல் இரசித்துச் செய்வீர்கள். வாழ்வை உற்சாகத்துடனும்இ புத்துணர்வுடனும் எதிகொள்வீர்கள். என்ன? உங்கள் வாழ்க்கைத்துணையும் அதே போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அப்படியில்லை என்றால் கொஞ்சம் மனத்தை வருத்திக்கொள்வீர்கள்... கொஞ்ச நேரத்திற்கு. பின் உங்கள் பழைய துள்ளல் உங்களைத் தொத்திக்கொண்டுவிடும். அவ்வளவுதான்.


இனி என்ன? உங்கள் நண்பர் அல்லது வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த பழம் என்ன என்று தெரிந்துகொண்டு அவருடைய தன்மையைப் பற்றிச் சொல்லி வியக்க வையுங்களேன்!!!!!!!

பலனுள்ள பன்னிரண்டு

நாம் மற்றவர்களிடம் பழகும் போது எப்படி நடந்து கொள்கிறோம், நமது உடல் பாஷைகள், பேசும் விதம் ஆகியவற்றைக்கொண்டே அவர்கள் நம்மை மதிப்பீடு செய்கிறார்கள். குறிப்பாக நாம் ஒரு வேலைக்குச் செல்லுமிடத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நமது நடை உடை பாவனைகள் எப்படி அமைகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றியும் தோல்வியும் அமையும். இது நாம் நடைபயில முயற்சிப்பது போலத்தான். உங்களைப் பின்பக்கமாக நடந்து போகச் சொன்னால் எவ்வளவு கடினமாக இருக்கும்? அது போலத்தான் மற்றவர்களுடன் பழகும்போது எப்படி அவர்களுடன் உறவாட வேண்டும் என்பதான பயிற்சியும். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவதற்கு முன்னால் என்னவெல்லாம் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது? இதோ 12 மோசமான பழக்கங்கள்:

1. மற்றவர்களிடம் பேசும்போது அவர்களை நேராகப் பார்க்காமல் நிலத்தைப் பார்த்துப் பேசுவது. யாருடன் பேசுகிறோமோ அவர்களது கண்ணை நேராகப் பார்த்துப் பேசும்போதுதான் நமது வார்த்தைகளிலுள்ள உண்மையையும் நேர்மையையும் அடுத்தவருக்குப் புரியவைக்க முடியும். அதற்காக அவர்களை முறைத்துப் பார்க்கக் கூடாது.

2. நிற்கும்போதோ உட்காரும்போதோ நேராக இல்லாமல் வளைந்து கூனியிருப்பது. நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் மற்றவர்களை உங்கள் பால் ஈர்க்க அவசியம். அது உங்களுக்கு உங்கள்மேல் உள்ள தன்னம்பிக்கையைக் காட்டும்.

3. முகத்தைச் சிடுசிடுவென வைத்துக்கொண்டு முறைப்புடன் பேசுவது. இது யாருக்குமே பிடிக்காது, உங்களுக்கு பேசப் பிடிக்கவில்லையானால் அவர்களுடன் பேசுவதைத் தவிருங்கள், பேசும்போது முகத்தில் ஒரு புன்னகையைத் தவழவிடுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுவதோடு உங்களோடு உறவாடுபவருக்கும் ஒரு உற்சாகத்தை அளிக்கும்.

4. யாராவது புதியவர்களைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக்கொள்வது. உங்கள் பெற்றோர்கள் உங்களது சிறு வயதில் புதியவாராக யாராவது இருந்தால் அவருடன் பழகாதே என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால் நீங்கள் இப்பொது வளர்ந்து விட்டிர்கள். யாருடன் பேசும்போதும் நீங்கள் என்ன பேசுவது என்று பேசத் திணறாமல் அவர்களுடன் சரளமாக உரையாடுவது உங்களது உறவுகளை மேம்படுத்தும். சந்திப்பவர்கள் பரிச்சயமில்லாதவராக இருந்தாலும் கூச்சமில்லாமல் பேசப் பழகுங்கள்.

5. நீங்கள் மற்றவர்களது மனதில் ஏற்படுத்தும் முதல் முத்திரைதான் உங்களோடு உறவாடுபவர்களது நினைவில் எப்போதும் நிலைத்து நிற்கும். அதை வைத்துத்தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். அதனால் முதல் சந்திப்பிலேயே மற்றவர்களைக் கவருமாறு நடந்துகொள்வது மிகவும் அவசியம்.

6. மிகவும் சங்கோஜத்துடன் அதிகமாகப் பேசாமலிருப்பது. வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமானால் மற்றவர்களிடம் உறவாடும்போது நன்கு சகஜமாகப் பேசத் தெரிய வேண்டும். எண்ணங்களைத் தங்குதடையில்லாமல் வெளிப்படுத்த வேண்டும். அதற்காக வளவளவென்று பேசி 'இவன் எப்போது வாயை மூடுவான்' என்று மற்றவர்கள் நினைக்கும்படி செய்யக் கூடாது. வார்த்தைகளை அளந்து சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, அழகாகப் பேச வேண்டும். அசந்தர்ப்பமாக ஏதாவது பேசி, தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடாது. முக்கியமாக நீங்களே உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும். மனதில் தோன்றுவதை யெல்லாம் கண்டபடி உளறக் கூடாது.

7. மற்றவர்கள் பேசும்போது அவர்கள் பேச்சில் கவனமில்லாமல் இருப்பது. அடுத்தவர்கள் பேசும்போது காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்கள் பேசும்போது எங்கோ கவனத்தைச் செலுத்திவிட்டு, அவர்கள், 'நான் சொல்வது சரிதானே' என்று கேட்கும்போது என்ன சொன்னார்கள் என்றுகூடத் தெரியாமல் விழிக்கக் கூடாது. அவர்களைப்பற்றி உங்களுக்கு ஏதும் அக்கறையில்லை, 'மனுஷன் மகா போர்' என்று நினைத்தால் ஏதோ பரவாயில்லை. ஆனால் முக்கியமான அலுவலக அதிகாரியிடமோ அல்லது மிகவும் வேண்டியவருடனோ பேசும்போது மனதை அங்கும் இங்கும் அலைய விடதீர்கள். கேட்கும் விஷயத்தில் கவனமாக இருங்கள்!

8. சொந்தக்காரர்களுடன் அல்லது நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமலிருப்பதைத் தவிர்க்க வேண்டும். எல்லோரிடமும் நல்ல உறவு வைத்திருக்க அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது அவசியம். அவ்வப்போது அவர்களது பிறந்த நாள், மணநாள் இவைகளைக் குறித்து வைத்துக்கொண்டு, வாழ்த்துத் தெரிவித்து, அவர்களுடன் ஏதாவது வகையில் தொடர்பு வைத்திருக்க வேண்டும். அதற்காக தினமும் பேச வேண்டும் என்பது அவசியமில்லை. நீங்கள் ஒருவர் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு அவ்வப்போது நினைவு படுத்திக்கொண்டிருந்தால் சரி!

9. உற்சாகமில்லாமல் சோர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் இருக்கும் சூழ்நிலை இறுக்கமாக இருக்கும்போது அந்த இறுக்கத்தைத் தளர்த்தி ஒரு நல்ல உற்சாகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இல்லையென்றால் அதற்குப் பிறர் மீது பழிபோடுவதில் பயனில்லை. நிலைமையை சரிப்படுத்த நீங்கள் ஏதாவது செய்யுங்கள்! நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால் அதைப்பற்றி யாருக்கும் அக்கறையிருக்காது. ஒரு வேளை உங்கள் அம்மாவைத் தவிர!

10. மற்றவர்களோடு கலகலப்பாய் இல்லாமல் உம்மனாமூஞ்சியாய் இருப்பது அடுத்தபடி தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் நீங்கள் ஒரு ஜாலியான மனிதர் என்று எண்ணும்படியாக இருக்க வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களோடு சேர்ந்து பேசி வாழ்க்கையை உற்சாகமாகச் செலவிடுங்கள்!

11. உங்களுக்குள்ள பயத்தையும் தயக்கத்தையும் வெளிக்காட்டாதீர்கள். முக்கியமாக, புதிய நண்பர்களைச் சந்திக்கும்போது, உயர் பதவியில் இருப்பவர்களுடன் பேசும்போது, நேர்முகத் தேர்விற்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

12. விடாப்பிடியாகத் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று நினைப்பது. எப்போதும் திறந்த மனதோடு இருங்கள் உங்களைச் சுற்றிப் பல மதத்தினர், வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள், கொள்கையில் மாறுபட்டவர்கள் இருப்பார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். அவர்களுடன் மனக்கசப்போ அல்லது வேறுபாடோ இருந்தால் சுமுகமாகப் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்.


தசாவதாரம்


உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாடு பலருக்கு தெரிந்திருக்கலாம். லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானிதான் முதன்முதலாக மாற்று சிந்தனையைத் தூண்டினார். ‘‘ஒவ்வொரு வகையான உயிரினமும் திடீர் திடீரென படைக்கப்பட்டன என்பது நம்புகிறமாதிரி இல்லை. அற்ப உயிரியான பாக்டீரியாகூட அப்பா, அம்மா இல்லாமல் பிறக்காது. எல்லா உயிரினங்களின் தலைமுறைகளும் பெருகும் விதம் இதான்! அப்படி பார்க்கப் போனால், மனித இனத்த உருவாக்கிய முதல் அப்பா, அம்மா யார்? ஒவ்வொரு இனத்தின் முதல் தலைமுறை யாராக இருக்கும்? இதை நாம் கண்டறிய வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதன்பிறகு பலர் மனதிலும் இதே கேள்வி எழுந்தது....
அடுத்த சில வருஷங்களில் பரிணாமக் கொள்கையை அறிவித்த சார்லஸ் டார்வின், பல்வேறு உயிரினங்களும் தோன்றுவதற்கு ‘இயற்கைத் தேர்வு’தான் ((Natural selection) காரணம் என்றார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது!
அது- கடலில் இருக்கும் பாசி, மீன்கள், ஆமைகள், நத்தைகள், காடுகளில் இருக்கும் குரங்கு போன்ற உயிரினங்கள், பறவைகள் என எல்லாமே ஏதோ ஒருவகையில் மனிதர்களுக்கு மூதாதையர்கள் என்றால் எல்லோருக்கும் அதிர்ச்சி வராதா?

அப்படியானால் நாம் அவற்றை என்ன உறவுமுறை சொல்லி அழைப்பது? பாசி... கொள்ளுத் தாத்தா, பூண்டோடு அழிந்துவிட்ட டினோஸர்கள்... எள்ளுத் தாத்தா, குரங்கு... பெரியப்பா, சிம்பன்ஸி வகைகள்... மனிதனின் சித்தப்பா என்றெல்லாம் டார்வின் அடுக்கியபோது பலருக்கு கோபம் வந்துவிட்டது. ஆனால், உண்மை அதுதான் என்று காலப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற��


டார்வினின் தியரி இப்படிப் போகிறது... ‘பூமியின் சூழ்நிலை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிவிடுகிறது. பூமியில் இருந்த உயிரினங்களும் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறிவந்தன. ஒரு அப்பா, அம்மாவுக்கு பிறக்கும் அடுத்த தலைமுறை உயிரினம் தன அப்பா, அம்மாவின் குணங்கள் கொண்ட நூறு சதவிகித ஜெராக்ஸ் காப்பியாக இல்லாமல், அதன் தாய் & தந்தை சந்தித்த புதிய பிரச்னைகளை எதிர்கொள்ளும் விதமாக குணத்திலும் உடல் அமைப்பிலும் மிகமிக நுட்பமான சில மாற்றங் களோடுதான் பிறக்கிறது. கால ஓட்டத்தில் புதிதுபுதிதாக எழும் இயற்கையின் சவால்களைத் தாக்குப் பிடிக்க முடியாத உயிரினங்கள் மடிந்து போகின்றன. அந்த புதிய சவால்களைத் தாக்குப் பிடிக்கக் கூடிய வகையில் புதிய உயிரினங்கள் உருவாகின்றன. லட்சக்கணக்கான வருஷங்கள்... ஆயிரக்கணக்கான தலைமுறைகள்... ஒவ்வொரு உயிரினமும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் இருந்தன. ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு உயிரினத்துக்கு பிறந்த வாரிசு, அதேமாதிரி இல்லாமல் புதிய இனமாக தலை எடுத்தது.

பரிணாம வளர்ச்சியும் அப்படித்தான் என்பது டார்வின் கட்சி! காலப்போக்கில், அறிவியல்ரீதியாக இது நிரூபிக்கப்பட்டது. நம் உடலில் இருக்கும் அதே போன்ற மரபணுக்கள்தான் பாக்டீரியா, பாசிகள், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என எல்லாவற்றின் உடம்பிலும் இருக்கின்றன. ‘அப்படின்னா எல்லாரும் பங்காளிங்கதான். முதன்முதலாக ஆழ்கடலில் எட்டிப்பார்த்த நீலப்பச்சைப் பாசிதான் நமக்கு மூதாதையர். அது அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கியது. இப்படித்தான் படிப்படியாக உயிர்கள் தோன்றுவது நிகழ்ந்தது’ என்றார் டார்வின்.

 அந்த ஒற்றை நீலப்பச்சைப் பாசியிலிருந்துதான் சகல உயிரினங்களும் தோன்றியதாக வைத்துக் கொள்வோம். அந்த முதல் பாசி எங்கிருந்து வந்தது ?. உயிர்கள் எதுவுமே இல்லாத சூழலில் அதன் வருகை எப்படி நிகழ்ந்தது ? அது எப்படி பெருகியது ? அதிலிருந்து விலங்கினங்கள் எப்படி தோன்றியிருக்கும்?’ என அடுக்கடுக்கான கேள்விகள். எழுந்தது .பல நிபுணர்கள் ஒவ்வொரு தியரியாக சொன்னார்கள் ஆனால், கடைசியில் ஓபாரின் என்ற ரஷ்ய விஞ்ஞானி சொன்னதான் உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. ‘வானத்திலிருந்து வந்த மின்னல், கடலுக்கடியில் சில ரசாயன மாற்றங்களைச் செய்தது. அதன் விளைவாக உயிர்களின் அடிப்படைப் பொருட்களான மூலக்கூறுகள் கிளம்பின. அதிலிருந்துதான் உயிர் தோன்றியது’’ என்றார் அவர்.

பிற்பாடு சிகாகோவைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டான்லி மில்லர், 1953ஆம் ஆண்டு இந்த தத்துவம் உண்மை என்று நிரூபித்தும் காட்டினார். மூடிய ஒரு குடுவயில் ஆதிக்காலத்தில் கடல் இருந்த சூழ்நிலையை உருவாக்கி, மின்சாரத்தின் மூலம் செயற்கை மின்னல அந்த குடுவைக்குள் ஏற்படுத்தினார். அதன் விளைவாக செயற்கைக் கடலின் அடியில் உயிர் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவானது. கவனிக்கவும்! சூழ்நிலைதான் ஏற்பட்டது! புதிய உயிரே தோன்றிவிடவில்லை. அது மனிதனால் ஆகக்கூடிய காரியமும் இல்லை!.

உலகத்தில் உயிரினங்கள் தோன்றிய மொத்த வரலாற்றையும் சுருக்கி ஒரு வருஷம் என்கிற கற்பனை காலண்டருக்குள் அடைத்தால், பாசி தோன்றியது ஜனவரி முதல் தேதி... மனிதன் தோன்றியது டிசம்பர் முப்பத்தோறாம் தேதி! அதாவது அவன்தான் கடைசிக் குழந்தை | இப்போதுள்ள உயிர்களிலேயே பரிபூரணமான குழந்தை!

உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டுக்கும் திருமாலின் பத்து அவதாரங்களுக்கும் சம்பந்தம் இருக்கு என்றால் சிரிப்பீர்கள். எளிமையாக சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்.

முதலில் ஒரு செல்லிலிருந்து கடலில் தோன்றிய முதல் உயிரினம் மீன் என்றால் இது மச்சாவதாரம். பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை, தவளை போன்றவை தோன்றியது - இது கூர்மாவதாரம். அதன் பின் நிலத்தில் மட்டும் வாழும் உயிரனமாக (பன்றி) வராகவதாரம். பின் நான்காவதாக மனிதனுமின்றி, மிருகமுமின்றி நரசிங்காவதாரம். ஐந்தாவதாக ஒரு குள்ளமனிதனாக வாமனாவதாரம். ( இதற்கு பிறகு வருவோம்). ஆறாவதாக, மனிதன் கொஞ்சம் விலங்குகளின் தன்மையுடன் கூடிய பரசுராமாவதாரம். ஏழாவதாக முழுமனிதனாக இராமாவதாரம். எட்டாவதாக குறும்பு செய்யும் மனிதனாக கிருஷ்ணாவதாரம். ஒன்பதாவது விவசாயம் பார்க்கும் மனிதனாக பலராமவதாரம்.

டார்வினுக்கு இந்து மதத்தில் உள்ள 10 அவதாரங்களைத் தெரிய வாய்ப்பு இல்லை. ஆரம்பத்தில் உயிரனங்கள் தண்ணீரில் தோன்றியது. பிறகு அதே உயிரினம் தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் தகுதி பெற்றது. அதன் பிறகு நிலத்தில் வாழும் விலங்குகள். அடுத்து படிப்படியாக அந்த விலங்குகள் வளர்ச்சி பெற்று குரங்காகி அதிலிருந்து மனிதன் தோன்றினான். மீனில் ஆரம்பித்து 5-வது அவதாரமாக வருவது வாமன அவதாரம். நான்கு அவதாரங்களை அடுத்து விடுபட்ட இந்த குள்ளமான வாமன அவதாரம்தான் - ''மிஸ்ஸிங் லிங்க்'' என்பது உயிரின வளர்ச்சிப் படிகளில் அடிக்கடி உபயோகிக்கப்படும் ஒரு சொல். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று விஞ்ஞானம் ஒப்புக் கொண்டாலும் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த மிஸ்ஸிங் லிங்க் எதுவென்று விஞ்ஞானிகள் அவ்வப்போது தலையை பிய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைப் பார்த்தால் விடுப்படவில்லை என்பது தெளிவாகுகிறது.

சமீபத்தில் அதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால் நம்புவீர்களா ? ஆம் கடந்த அக்டோபர் மாதம் விஞ்ஞானிகள் குள்ள மனிதனின் எலும்புக்கூடுகளை இந்தோனேஷியாவில் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த மனிதனின் உயரம் மூன்று வயது குழந்தையின் உயரம். இவர்கள் மண்டை ஓடுகள் ஒரு சாத்துக்குடி அளவே இருப்பதாக படங்கள் காட்டுகிறது. இந்த மனிதன் 18,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் கண்டுபிடிக்கபட்ட இடத்தில் கல்லினாலான ஆயுதங்கள், மற்றும் மிருகங்களின் எலும்புகூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மனிதனுக்கு Hobbit என்று பெயர் வைத்துள்ளார்கள். (Lord of the Rings என்ற படத்தில் வரும் குள்ள மனிதனின் பெயர் )

மீசையும்... ஆசையும்...!

மீசையும்... ஆசையும்...!



ஆண்களுக்கு உதட்டின் கிரீடமாக உட்கார்ந்திருப்பதாலேயே மீசை தனி மரியாதை பெறுகிறது. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளில் மீசைக்கு உயர் அந்தஸ்து உண்டு. மீசை விஷயத்தில் `டாப் 10' நாடுகள் எவையெவை என்று பார்க்கலாமா...

1. இந்தியா

தென்னிந்தியாவில் 80 சதவீதம் பேர் மீசை வைத்திருக்கின்றனர். இதனால் இந்தியா உலகத்திலேயே `நம்பர் 1' ஆகிவிடுகிறது. இந்தியக் கலாசாரத்தில் நீண்ட காலமாகவே மீசை ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. இது ஆண்மையின் அடையாளமாக நம் நாட்டில் கருதப்படுகிறது. உலகத்திலேயே நீளமான மீசைக்குச் சொந்தக்காரர் ஓர் இந்தியர்தான். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அந்த மனிதரின் மீசையின் நீளம் 12.5 அடி.

2. மெக்சிகோ

இங்கும் மீசை ஆண்மையின் அடையாளமே. மீசையில் மெக்சிகோவின் அடையாள மனிதர்களாக எமிலியானோ ஸபாட்டா, பாஞ்சோ வில்லா ஆகியோர் இருக்கிறார்கள். ஐரோப்பிய மக்கள் மெக்சிகோவில் குடியேறியபோது, தங்களின் சமூக அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் விதமாகவும் அந்நாட்டு மக்கள் மீசை வளர்த்தனர்.

3. பாகிஸ்தான்

உலகிலேயே அதிகமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். இந்நாட்டின் 17 கோடி இஸ்லாமிய மக்களில் பெரும்பாலானவர்கள் தாடி, மீசை வைத்திருக்கின்றனர். புகழ்பெற்ற பாகிஸ்தானியர்களாக தேசியக் கவி முகம்மது இக்பால், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்டட், முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், தற்போதைய பிரதமர் அசிப் அலி சர்தாரி ஆகியோரும் மீசைக்காரர்களே.

4. ஜெர்மனி

ஜெர்மனியின் மொத்த மக்கள்தொகை 8 கோடி. இந்நாட்டுக்கும் மீசையில் பெருமிதமான வரலாறு உண்டு. அரசியல் தலைவர் பிஸ்மார்க் முதல், தத்துவஞானி பிரெட்ரிச் நீஷே, விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை மீசை மீது ஆசை வைத்த பிரபலங்கள். உலக மீசை மற்றும் தாடி சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக சங்கங்கள் பங்கேற்பது ஜெர்மனியில் இருந்துதான்.

5. ஈரான்

ஈரானிய மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஷியா முஸ்லீம்கள். இங்கு முக்கியப் புள்ளிகள் பலர் பெருமையோடு மீசையுடன் வலம் வருகிறார்கள். அவர்களில் அயதுல்லா, கால்பந்து நட்சத்திரம் அலி டே போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

6. எகிப்து

பிற முஸ்லீம் நாடுகளைப் போல இங்கும் மீசை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். முக்கியத் தலைவர்களுக்கும் இதில் ஆர்வம் உண்டு. உதாரணமாக முன்னாள் அதிபர் நாசர், அதிபர் அன்வர் அல் சதாத் போன்றோர்.

7. துருக்கி

சமீப ஆண்டுகளில் துருக்கியானது ஐரோப்பிய நாடுகளுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது. அதற்கேற்ப அந்நாட்டு மக்கள் `நவீனமாகவும்', `புரொபஷனல்களாகவும்' தோற்றமளிக்க விரும்புவதால், மீசை- தாடியைத் துறக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் இன்றும் துருக்கிய சமூகத்தில் மீசைக்கு ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது. இது ஏறக்குறைய மதஅடையாளமாகவும் இங்கு கருதப்படுகிறது.

8. அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது ஏறக்குறைய 1 கோடிப் பேர் மீசை வைத்திருக்கின்றனர். கடந்த மே மாதம் அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் உலக மீசை மற்றும் தாடி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதில் அதிகப் பதக்கங்கள் பெற்ற நாடு அமெரிக்கா தான். அது ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும் ஒரு பதக்கத்தை வென்றது.

9. ஹங்கேரி

ஹங்கேரியில் உலக மீசை மற்றும் தாடி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. ஹங்கேரிய மீசை, `ஒயில்டு வெஸ்ட் மவுஸ்டாச்' என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ளவர்களிடம் மீசை மட்டுமல்ல, அதன் மீதான ஆசையும் வளர்ந்து வருகிறது.

10. பல்கேரியா

இசை, கால்பந்து, கைப்பந்துக்கு அப்புறம் பல்கேரியர்கள் அதிகம் நேசிப்பது மீசையைத் தான்.. சோவியத் ïனியனின் தாக்கத்தில் பல்லாண்டு காலம் இருந்த பல்கேரியா, அண்மை ஆண்டுகளில் மாறியுள்ளது. மாறாதது மீசை மீதான மோகம் மட்டும்தான்.

எழுதுவது ஏன்?

1) எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால்

தனக்குள்ளிருந்து தன்னை யாரோ எழுதும்படியாக வற்புறுத்துவது போல ஒருவன் அடையும் நிலையில் தான் இந்த வகை எழுத்து உருவாகிறது. மிதமிஞ்சிய வேதனையை. தனிமையை பகிர்ந்து கொள்வதற்கு யாருமற்ற நிலையில் கதையோ, கவிதையோ எழுதுவது உருவாகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இந்த வகையில் தான் துவங்குகிறார்கள்.


2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க.

மிகச்சிறந்த இலக்கியவாதிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. வாழ்வின் ஞானமும், சரளத்தன்மையும், அன்பையும் வெளிப்படுத்தவே அவர்கள் எழுதுகிறார்கள். தங்களது அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு சந்தோஷமாக முன்வருகிறார்கள். வாசிப்பவனும் எழுத்தாளனைப் போலவே அந்த அனுபவத்தை துய்த்து உணருகிறான். உதாரணத்திற்கு லு?யி கரோல் எழுதிய ஆலிஸின் அற்புத உலகம் அவரை சந்தோஷப்படுத்தியதோடு நு?ற்றாண்டுகளாக குழந்தைகளை, பெரியவர்களைச் சந்தோஷப்படுத்திவருகிறது. இந்த வகை எழுத்து எதையும் போதிப்பதோ, கட்டாயப்படுத்துவதோ இல்லை.


3) யாருக்காவது எதையாவது கற்றுக் கொடுக்க

விற்பன்னர்களும், அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் வாசகனை தங்களை விடவும் அறிவில் குறைந்தவன் என்ற கருத்தில் தான் எழுதுகிறார்கள். அது சமையற்கலையாக இருந்தாலும் அணுவிஞ்ஞானமாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.
இந்த வகை எழுத்தில் எழுத்தாளனின் விருப்பம் நிறைவேறுவது அவனது அறிவின் திறன் அளவில் தான் சாத்தியமாகிறது. பலநேரங்களில் அதுவே படிக்கமுடியாமலும் செய்துவிடுகிறது. எளிமையும், ஆழ்ந்த அறிவும், விளக்கி சொல்லும் திறன்மிக்க மொழியும் ஒன்று சேர்ந்து எழுத்து உருவானால் அப்போது வாசகன் கற்றுக்கொள்வதோடு நல்ல கலைப்படைப்பை வாசித்த அனுபவத்தையும் பெறுகிறான்.


4) தன் கருத்துக்களை தெரியப்படுத்த

இந்த வகை எழுத்தாளர்கள் தாங்கள் தனித்துவமானவர்கள், ஞானம்பெற்றவர்கள், அதிக அறிவுதிறன் கொண்டவர்கள் என்று தங்களை நம்பக் கூடியவர்கள். உலகில் தங்களுக்கு மட்டுமே சில அரிய கருத்துகள் மனதில் உதயமாகியுள்ளதாக நம்புகிறவர்கள். தத்துவத்திலும் அரசியலிலும் விருப்பம் கொண்டவர்களே இந்தவகை எழுத்தில் அதிகம். இந்த வகை எழுத்தில் ஒரிஜினாலிடி மிக அரிதாகவேயிருக்கிறது.



5) வேதனையிலிருந்து விடுதலை அடைய

பிரச்சனைகளை நேரிடையாக சந்திக்க முடியாமலும், ஆறுதல் தேடுவதற்கு வழியற்றும், எழுதுவது ஒரு பாவமன்னிப்பு கோருதல் போல என நம்புகிறவர்களே இந்த வகை எழுத்தாளர்கள். ஆனால் எழுத்தாளனின் வேதனைகளை வாசகனின் மீது திணிப்பதும் பலநேரங்களில் தவறானதாகிவிடுகிறது. அது தானும் விடுதலை அடையமுடியாமல் வாசிப்பவனையும் நரகத்தில் தள்ளிவிடும்


6) புகழ்பெற

ஒரு பைத்தியக்காரன் தான் புகழ்பெறுவதற்கென்றே எழுத முயற்சிப்பான். காரணம் எழுதிப் புகழ்பெறுவது எளிதான காரியமில்லை. எல்லா எழுத்தாளர்களுக்கும் மனதில் தனக்குப் பெரிய புகழ் கிடைக்கவேண்டும் என்ற ஆசையிருக்கதான் செய்கிறது . ஆனால் அதற்காக யாராவது எழுதத் துவங்கினால் அந்த எழுத்து நிச்சயமற்ற பலனைத் தான் உருவாக்கும்


7) பணக்காரன் ஆக

சம்பாதிக்க, கடனை அடைக்க, வசதியாக வாழ என பலகாரணங்களுக்காக எழுதுபவர்கள் பலரிருக்கிறார்கள். உபயோகமான எந்த விஷயத்திற்கும் வழங்கபடுவது போல தான் எழுத்திற்கும் சன்மானம் வழங்கப்படுகிறது. ஆனால் பணத்துக்காக மட்டும் எழுதுவது ஆபத்தானது. அது மலிவான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்


8 ) உலகை செம்மைபடுத்த

இந்தவகை எழுத்தாளர்கள் உலகம் தங்களால் தான் காப்பாற்றப் படப் போகிறது என்று நம்புகிறவர்கள். மேலும் உலகைப் பற்றி தங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்று நம்புகிறவர்கள்.ஹிட்லர் மெயின்கேம்ப் எழுதியது கூட இந்த வகை ஈடுபாட்டில் உருவானது தான்.


9) பழக்கத்தின் காரணமாக

இது தன்னைத் தானே காப்பிசெய்து கொள்வது போன்ற எழுத்து ரகம். தன்பெயரைத் தொடர்நது அச்சில் பார்ப்பது ஒரு நோக்கமாக இருக்க கூடும். மற்றவகையில் வெறுமனே பழக்கம் காரணமாக மட்டும் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை விடவும் மெளனமாக எதையும் எழுதாமலிருப்பது அவருக்கும் நல்லது, வாசகர்களுக்கும் நல்லது

மர்லின் மன்றோ

1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ. உலக இளைஞர்களின் காமத்தின் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம், இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது.
மர்லினின் அபிரிதமான அழகும், பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும், 36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை, ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது.

மர்லின் மன்றோ பிறக்கும்போது அவரது தாயார் கிளாடிஸ் மன்றோ பேக்கர் தனது முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கரை பிரிந்து எட்வர்ட் மார்டின்சன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். மர்லினின் தந்தை யார் என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. அப்பாவை தேடிய நீண்ட பயணமாக மர்லினின் வாழ்க்கையை எளிமையாகக் கூறலாம்.மர்லினின் பிறப்புச் சான்றிதழில் அப்பா என்று எட்வர்ட் மார்டின்சனின் பெயரும், ஞானஸ்தான சடங்கில் அப்பா இடத்தில் ஜாஸ்பர் பேக்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மர்லினின் இளமைப் பருவம் கொடியது. பிறந்த பன்னிரெண்டாவது நாளே வறுமை காரணமாக வளர்ப்பு பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள். பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு வளர்ப்பு பெற்றோர்கள் என அனாதைத்தனமான வாழ்க்கை. இடையில் மர்லினின் தாயார் மனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட, அவள், தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

16 வயதில் நடந்த மர்லினின் முதல் திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை. வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம் அது. 1944-ல் மர்லினின் வாழ்க்கை புதிய மாறுதலுக்குள்ளானது. டேவிட் கொனோவர் என்ற புகைப்படக் கலைஞர் Yank பத்திரிக்கைக்காக மர்லினை சில புகைப்படங்கள் எடுத்தார். மர்லினின் அபிரிதமான அழகை முதலில் கண்டுணர்ந்தவர் கொனோவரே.

ஒரே வருடத்தில், அமெரிக்க முன்னணி பத்திரிக்கைகளின் அட்டைப்பட அழகியாக உயர்ந்தார் மர்லின் மன்றோ. இந்தப் புகழ், வெளிச்சம் மர்லினின் கணவனுக்குப் பிடிக்கவில்லை. கணவனா, வேலையா என்ற கேள்வி வந்தபோது, கணவனை உதறினார் மர்லின். 1942ல் நடந்த 1944ல் கசந்த நினைவுகளுடன் முறிந்துபோனது.

ஜாதிபதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவர் பாடியது, அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. மர்லின் ஒரு உளவாளி. ஜான் கென்னட மூலம் அமெரிக்காவின் ரகசியங்கள் தெரிந்துகொள்கிறார் என்பது போன்ற ஹாஸ்யங்கள் கிளம்பின. அமெரிக்க உளவு நிறுவனங்களின், 'நீக்கப்பட வேண்டியவர்கள்' பட்டியலில் அவர் பெயரும் இணைக்கப்பட்டது.

இறுதியில் 1962 ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது அறையில் இறந்து கிடந்தார் மர்லின். அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளே மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இளமையை ஒரு அனாதையைப் போல் காக்க நேர்ந்த மர்லினின் உடல் சவக்கிடங்கில் அதே அனாதைதனத்துடன் கிடந்தது. அவள் உடலைப் பெற்றுக்கொள்ள கணவனோ, காதலனோ, உறவினர்களோ யாருமில்லை. இருந்த ஒரே உறவான மர்லினின் தாயோ மகளின் மரணத்தை உணர முடியாத மனச்சிதைவுடன் மனநல காப்பாகத்தில் இருந்தாள்.


அழகின், இளமையின், காமத்தின் குறியீடாக மர்லின் இன்று வரை முன்னிறுத்தப்படுகிறாள். மிதமிஞ்சிய காமத்தை வெளிப்படுத்தும் வேடத்தை ஏற்று நடித்த மர்லின் ஒருபோதும் காமத்தை நாடிச் சென்றதில்லை.
மர்லின் சிறந்த பாடகி. லேடீஸ் ஆ·ப் தி கோரஸ் படத்தில் மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார். இது தவிர அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை முப்பதை தொடும். உலகின் தலைசிறந்த நாவலாசிரியர்களை, அவர்களின் படைப்புகளை மர்லின் அறிந்திருந்தார். இந்த பன்முகத்தன்மையை அழித்து, கவர்ச்சி எனும் ஒற்றை பிம்பமாக இந்த சமூகம் அவரை பிரகடனப்படுத்தியது. சுருக்கமாக, மர்லின் வாழ்க்கை சிதைக்கப்பட்ட ஓர் அழகிய கனவு!

மனிதப் பண்பு ( தெய்வம் நீ என்று உணர் )

தெய்வம் நீ என்று உணர்

இன்றைய உலகம் அறிவியல் உலகம். எதையும் ஆராய்ந்து கண்டு தெரியும். விருப்பங்கொண்டோர் நிறைந்த உலகம். நேரில் கண்டால் ஒழிய மற்றவற்றை நம்ப மறுக்கின்ற உலகம்.


பொறுமை இல்லை

‘சந்திர மண்டலத்திற்குச் சென்று வருவது இயலும்’ என்பதைக் கற்பனை என்று ஒதுக்கித் தள்ளியதும் இந்த உலகந்தான். ஆனால் அதுவே உண்மையான போது, அதனை ஒத்துக்கொண்டதும் இந்த உலகந்தான். ஆதலின் காட்சி அளவில் கண்டால் ஒழிய மற்றவற்றை நம்ப இயலாத நிலை உலகில் நாளும் வளர்ந்து வருகின்றது. அதேபோல் அறிவியல் வளர்ச்சியால் கற்பனை என்று கொண்டவற்றுள் சில உண்மையானதாகவும் உண்மை என்று கொண்டவற்றுள் பல கற்பனை யானதாகவும் மாறி வருவதையும் காண்கின்றோம்.

பரபரப்பு மிகுந்த இவ்வுலகில் எதையும் ஆழ உணர்வதற்கு மக்களுக்குப் போதிய நேரம் வாய்ப்பதில்லை; பொறுமையும் இருப்ப தில்லை. உண்டு செரித்த பின் மனிதனுக்குக் கிடைக்கும் உயிர்ச்சத்து (வைட்டமின்), மாத்திரை வடிவிலேயே கிடைக்கும் என்றால் பிறகு உணவைத் தேடி அலைவானேன். அதுபோல்தான் எல்லாவற்றிலும். அதனால் ஆழ உணர்ந்து தெளிய வேண்டும் என்ற விருப்பமும் மக்களுக்கு வாய்ப்பதில்லை.


நம்பிக்கை குறைகின்றது

இத்தகைய சூழ்நிலையில் இயற்கையின் எல்லையில்லாத ஆற்றலை, அதன் அமைப்பை காரண காரியத் தொடர்பை மனிதன் அறிந்து போற்றுவதற்குரிய வாய்ப்பு இல்லை. எதையும் நேரில் கண்டோ, உற்று உணர்ந்தோ, சுவைத்து அறிந்தோ பழக்கப்பட்ட அவனுக்குப் பிறர் சொல்வதைக் கேட்பதில் நம்பிக்கை விழுவதில்லை. எல்லாவற்றையும் இயக்குகின்ற பேராற்றல் ஒன்று இருக்கிறது என்பதை அறிந்தாலும் உணர்வதில்லை. அதனால் பாதிப்பு நிகழாதபோது நன்மைகள் நிகழாத போது, நிகழ்கின்ற பெருந்தீமைகளைத் தடை படுத்த முடியாதபோது அந்தப் பேராற்றலைப் பற்றி அவன் ஏன் கவலைப் பட வேண்டும்? அதனால் நம்புதற்குரிய கூறுகளும் குறைந்து வருகின்றன.


நிறையும் குறையும்

இதற்கும் மாறாக மனிதன் நேரில் காணு கின்ற வேறொரு மனிதனை நம்புகிறான். அவனது மனிதனது குணநலன்களை நம்புகிறான் பெரும்பான்மையான நல்ல குணங்களை உள்ள ஒரு மனிதனை உலகம் மதிக்கிறது. அவனைத் தனது வழி காட்டி யாகக் கொள்கிறது. வாழ்க்கையே ஒப்பிட்டுப் பார்க்கும் ஒன்று தான். அந்த ஒப்பீட்டில் சிலர் மனநிறைவு கொள்கிறார்கள். சிலர் மனக்குறைவு கொள்கிறார்கள். நாமும் உயர வேண்டுமெனச் சிலர் புதிய எழுச்சியோடு செயல்படத் தொடங்குகிறார்கள். முறையான வாழ்வை உடையவர்கள் மன நிறைவு கொள்வதும், முறையற்ற வாழ்வை உடையவர்கள் மனக்குறைவு கொள்வதும் இயல்பே.


புதிய வழி நல்லதாக இருந்தால்

மக்களின் அளவுகோலாக விளங்கும் எடுத்துக்காட்டான மனிதனின் அருங் குணங்களை ஆராய்ந்தால் உண்மையை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். இப்படிக் கால வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவது இயல்புதான். ஒன்றில் இருந்த நம்பிக்கை வேறொன்றில் செல்வதும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். என்றாலும் எப்படி மாறினும் அடிப்படையான அறங்கள் மாறுவதில்லை. மக்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்பதும், அற வழியில் வாழ வேண்டும் என்பதும் உயிர்களிடத்தில் அருள் காட்ட வேண்டும் என்பதும், என்றும் எங்கும் மாறாத ஒன்று. அதனாலேயே உலக இயக்கம் நடை பெறுகிறது.

மனிதப் பண்புகள் நிறைவந்தவர்களைச் சான்றோர் என்கின்றோம். சான்றோர் என்பதற்குரிய குணங்களை ஆராய்ந்தால் சாதாரண மனிதனும் சான்றோன் ஆவதற்குரிய வழி கிடைத்து விடுகின்றது. புதிய வழி நல்லதாக எளியதாக, காலத்திற்கு ஒத்ததாக இருந்தால் அதனைப் பின் பற்றுவதில் தவறு ஒன்றும் இருத்தற்கில்லை.


ஐந்து பண்புகள்

நம்முடைய முன்னோர்கள் சான்றோர்க்கு முதன்மையாக இருக்க வேண்டிய ஐந்து பண்புகளை வற்புறுத்திக் கூறியுள்ளார்கள். அவற்றுள் முதன்மையாக வேண்டப்படுவது அன்பு. தனக்கு வேண்டியவர்கள் என்றும் வேண்டாதவர்கள் என்றும் வேறுபாடு இன்றி எல்லாரிடத்திலும் அன்போடு நடந்து கொள்வது மனிதத் தன்மையின் பொது இயல்பு. இப்பொதுத் தன்மை பலரிடம் இல்லாத போது, இருக்கின்ற சிலர் நல்லவர்களாக – உயர்ந்தவர்களாகக் காணப் படுகிறார்கள். சிலரைக் கண்டால் மட்டும் இன்முகமும் வேறு சிலரைக் கண்டால் இன்னாமுகமும் காட்டுகின்றவர்கள் மனிதத் தன்மையிலிருந்து இழிந்து விடுகிறார்கள்.


எது நாணம்?

அடுத்து வேண்டப்படுவது பழி பாவங் களுக்கு அஞ்சுதலாகிய நாணம். செல்வச் செருக்காலும், செல்வாக்கு வாய்த்ததாலும் என்னால் எதுவும் முடியும் என்று நேர்மைக்கு மாறான செயல்களைச் சிலர் செய்கிறார்கள். ஆனால் அச்செயல் செய்வதற்கு அவர்கள் அஞ்ச வேண்டும். தூங்குகின்ற ஒருவனை ஒரு கோழைகூடக் கொன்று விடலாம். தன்னந்தனியாகச் செல்கின்ற ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் ஒருவன் கெடுத்து விடலாம். திறமையுள்ள ஒருவன் திறனற்றவர்களை எல்லாம் எதிர்த்து எதிர்த்து வெற்றி கொண்டு விடலாம். ஆனாலும் இவை களெல்லாம் நேர்மையான செயல்களா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லா வசதிகளையும் பெற்றிருந்தும் இப்படி எண்ணிப் பார்த்துத் தவறு செய்யாமல் வாழ்கின்றவர்கள் உண்மையில் மனித சமுதாயத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். தங்களுடைய அற்ப வளத்தைத் தீய வழியில் பயன்படுத்துகிறவர்கள் அழிந்து போகிறார்கள். அந்த அழிவும் அவர்களாலேயே ஏற்பட்டு விடுகின்றது. ‘நன்றும் தீதும் பிறர் தர வருவதில்லை, நாமாகவே தேடிக்கொள்வது’ என்பது நமது முன்னோர்கள் பட்டறிந்து மொழிந்ததாகும்.


ஒதுங்கி வாழ்கிறார்கள்

அன்பான உள்ளமும் நல்ல செயல்கள் செய்வதும் மட்டும் ஒருவனுக்கு வாய்த்து விட்டால் போதாது. அவன் பிறருக்கு உதவுகின்றவனாகவும் விளங்க வேண்டும். நல்லவர்கள் பலர் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்காகவே வாழ்கிறார்கள். பிறர் நலம், பொதுநலம் பற்றி எண்ணுவதும் செய்வதும் இல்லை. நல்லவர்கள் ஒதுங்கி வாழ்வதே நாடு கெட்டழிவதற்கு ஒரு காரணமாகும். தங்களின் நற்பண்பால் பலருக்கும் வழி காட்டியாக அமைவதோடு வாழ்க்கையில் முடியாதவர்களுக்கு உதவ அவர்கள் தாமாக முன்வருதல் வேண்டும். முடிந்தவர்களுக்கு உதவ ஆயிரம் பேர் முன் வருவார்கள். ஏழைகளுக்கு? எதுவும் அறியாதவர்களுக்கு? அத்தகையவர்களைக் கைதூக்கி விடுவதே ‘ஒப்புரவு’ என்பதாகும். இந்த ஒப்புரவினைச் செய்கின்றவர்கள் நாட்டில் இல்லாமல் இல்லை; இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எங்கோ விரல்விட்டு எண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் பலரானால் நாடு நலம் பெறும் என்பது உறுதி.


வாய்ப்பளிக்க வேண்டும்

மனிதன் குறைவுடையவன். முழுமைத் தன்மை அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆதலின் யாரேனும் சூழ்நிலையின் காரணமாகவோ, உணர்ச்சி வயப்பட்டு ஏதேனும் ஒரு தவற்றைச் செய்துவிட்டால் அதை கொண்டே அவர்களை வாழ்நாள் முழுதும் குற்றவாளியாக்கி விடுதலும் கூடாது. அவர்களுக்கு வாய்ப்பளித்துத் திருத்துவதற்கு முயல வேண்டும். தன் பற்களை உடைத்தவனுக்குக் காந்தியடிகள் பாத அணி செய்து தந்ததை அனைவரும் அறிவர். அதற்குப் பிறகு அந்த அதிகாரி தான் செய்த தவற்றுக்கு நாணிச் சீர்திருந்தி யதையும் உலகு அறியும். இதுபோல் வாழ்வில் ‘கண்ணோட்டம்’ செலுத்தி உலகைக் களிவித்து வாழ்கின்ற பண்பு உள்ளோர் பெருக வேண்டும். அவ்வாறு இருப்போர் பலரானால், இப்பண்பு ஊர் தோறும் சிலருக்கு வாய்க்குமானால் மனித இனம் மாண்புறும் என்பதில் எவ்வித ஐயப் பாடும் இல்லை. இத்தகைய பண்புடையோர் நம் இதயங்களில் வாழாமல் இல்லை.


பொய் குறையக் கவலை குறையும்

எல்லாவற்றிற்கும் மேலாக வாய்மையைப் போற்றுதலாகும். பேசுதல் என்பது எளியவற்றுள்ளும் எளிமையான செயல். ஆனால் அதில்தான் அரிய கவனம் செலுத்துதல் வேண்டும். எல்லாவற்றிலும் உண்மையாக நடந்து கொள்ளுதல் வேண்டும். ஆனால் இன்றைய நடை முறையில் பொய்யாமை போற்றப்படுவ தில்லை. மாறாக பொய்மை ஒரு கலை யாகவே வளர்ந்து விட்டது. பொய்யான புகழ்ச்சி, பொய்யான விருந்தோம்பல், பொய்யான பழக்க வழக்கங்கள், தனக்கு என ஒன்று. உலகின் பார்வைக்கு என வேறொன்று. இப்படிப் பொய்தவழும் உலகின் போக்குச் சொல்லும் தரமன்று. அதனால் ஏற்படுகின்ற தீமைகள் அளவிடற் கரியன. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பொய் இருக்கின்ற அளவிற்கு கவலைகள் இருக்கின்றன. பொய் குறையக் குறையக் கவலைகள் குறையும் என்பதை அவர்கள் அறிவதில்லை. அதனால்தான் காந்தியடிகள் உண்மையை உணர்ந்து அதனைக் கடை பிடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். தன் வாழ்க்கையையே வாய்மையைப் போற்றும் சோதனைக் களமாகக் கொண்டு வெற்றி கண்டார்.


மனிதனே தெய்வம்

இறைவனை எண்ணரிய குணங்களை உடையவன் என்கிறோம். தூய்மையே வடிவானவன் என்று போற்றுகின்றோம் அவனை உணர முடியாதவர்கள், உணர வாய்ப்பில்லாதவர்கள், ஏன்? உணர விரும்பாதவர்கள், மனிதர்களில் சிறந்து விளங்கும் நல்ல மனிதர்களின் பண்பு நலன்களை எண்ணிப்பார்த்து அவர்களைப் போல் நாம் விளங்க வேண்டும் என்று விரும்புவதும், அவர்களின் பண்புகளை ஆராய்ந்து அவற்றைப் பின்பற்றுவதும் சாலச் சிறந்ததாகும்.


நீ தான் மனிதன்

அன்பையும் நாணத்தையும் ஒப்புரவையும் கண்ணோட்டத்தையும் வாய்மையையும் உடையவர்களைச் சான்றோர் என்றார் உலகப் பெருமகனார் வள்ளுவர். இத்தகு குணங்களை வளர்த்துக் கொண்டால் தெய்வத்தைத் தேடி அலைய வேண்டாம் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்றார் பாரதி. அறிஞர்களின் கருத்துக்களைப் படித்து மகிழ்வதற்கும், பிறர்க்குச் சொல்வதற்கு மட்டுமே பயன்படுத்துகின்ற வழக்கத்தை மாற்றி வாழ்க்கையில் கடைபிடிப்பதற் காகவே அவை எழுதப்பெற்றவை என்பதை உணர்ந்தால் தனி மனித நலத்தோடு சமுதாயமும் நலம் பெறும். அந்த நலம் வாய்க்கும் நாள் நம்மை நாம் உணரும் நாளாகும்.

வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்


வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்

மனித உறவுப் பிரச்சனைகள் (Human Relations Problems) மன நிம்மதியைப் போக்கிவிடுகின்றன. வாழ்க்கையில் பிடிப்பினைத் தளர்த்துகின்றன. செயலூக்கத்தினைக் குறைக்கின்றன. சிந்தனைத்திறன், அறிவு (Creativity) ஆகியவற்றைப் பாதிக்கின்றன. இவற்றிற்குக் காரணங்கள் யாவை? தீர்வுகள் யாவை என்பதைப் பார்ப்போம்.

காரணங்கள்

தன்னைப் புரிதல், மற்றவர்களைப் புரிதல், வாழ்வினைப் பற்றிய தெளிவான நோக்கு- இவைகள் இல்லாத பட்சத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன.

தீர்வுகள்

1. உயர்வு மனப்பான்மை (Superiorty Complex) & தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) கொள்ளாமல் இருக்க வேண்டும். கர்வம் கொண்ட, அகங்காரம் மிக்க, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற, தானே பெரிது என்று எண்ணுகின்ற, மனப்பான்மையை போக்கிக்கொள்வது எப்படி?

இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் தெரிந்துகொள்ளவும் முடியாது. ஒரு உதாரணத்திற்கு, ஒரு ராக்கெட்டில் அதன் உச்ச வேகத்தில் வானத்தில், எவ்வளவு ஆண்டுகள் பயணித்தாலும், வானின் எல்லையை காண முடியாது. இப்படி பூமிக்கு மேலேயும், கீழேயும் பக்க வாட்டிலும் வானுக்கு எல்லை இல்லை. எவ்வளவு பெரிய தொலைநோக்கியை வைத்து ஆராய்ந்தாலும், ஒரு எல்லைக்கு மேல் அறிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும்போது இந்த வானவெளியில் பூமி, இந்தியா, தமிழ்நாடு, நம்மூர், நாம் – எவ்வளவு மிகச்சிறு பகுதி… எண்ணிப்பாருங்கள்.

ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அதையும் பிரித்து அணுத்துகள்கள் – இவற்றைப் பற்றி எவ்வளவு டாக்டர் பட்டம் வாங்கினாலும், எத்தனை ஆராய்ச்சிகள் செய்தாலும் முழுமையாக இன்னும் புரியவில்லை. பிறப்புக்கு முன்பும், இறப்புக்கு பின்பும் இன்னும் சரியாகத் தெரியவில்லை.

இதையெல்லாம் எண்ணிப்பார்த்தால் தான் பெரிது என்ற அகங்கார மனநிலை போய்விடும்.

தாழ்வு மனப்பான்மையை போக்குவது எப்படி?

இந்த உலகில் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு தனித்தன்மையும் சிறப்புத்தன்மையும் உடையது. (Uniqueness) ஒருவர் கைரேகையைப் போல் இன்னொருவர் கைரேகை இருப்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு செடி,கொடி, பறவைகள் உயிரினங்கள்- எல்லாமே மிக மிக அற்புதமாக படைக்கப் பட்டிருக்கின்றன. இதை எண்ணிப்பார்க்கும்போது ஒரு சிறந்த படைப்பே என்பதை எண்ணிப்பார்த்தால் ஒப்பிட்டு உருவாகும் தாழ்வு மனப்பான்மை ஓடிவிடும். என்னிடம் மறைந்திருக்கும் மாபெரும் ஆற்றலை தொடர் முயற்சியினால் வெளிப்படுத்தினால் மாபெரும் சாதனை புரிய முடியும் என்பதை உணர்ந்து தாழ்வு மனப்பான்மையை தகர்த்து எறிக.

“பெரியோரைப் பார்த்து
வியத்தலும் இலமே
சிறியோரைப் பார்த்து இகழ்தல்
அதனினும் இலமே”
-புறநானுறு

2. இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும், மதிப்பும், முக்கியத்துவமும், கொடுக்கும்போது, உறவுகள் இனிமையாகும்.

ஏனென்றால் எல்லா உயிர்களுக்கும் அடிப்படை உறவுத் தேவைகள்: (i) அன்பு (ii) மதிப்பு, முக்கியத்துவம், அங்கீகாரம் இவைகள் கிடைக்கும்பொழுது உள்ளங்கள் நிறைவு கொள்ளும். நிறைந்த உள்ளங்கள் நிறைவின் இனிமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தும்.

மனித உறவுத் தேவைகள் கிடைக்காத போது, உள்ளங்கள் பாதிக்கப்பட்டு – பாதிப்பினை வேறு வேறு ரூபத்தில் எளிப்படுத்தி – உறவுகளுக்குள் உரைசலை உருவாக்கும்.

ஆகவே நான், எனது என்ற விஷயங்களைப் பற்றி அதிகம் பேசாமல், உங்கள் நீங்கள், உங்களுடைய என்கிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும்போது – நம்மோடு உரையாடவும், உறவுகளைத் தொடரவும் மனிதர்கள் விரும்புவர்.

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்


புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்

எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம்.


நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி
பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்
ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது-

மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது மனிதனுடைய வலது மூளை சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கும். வலது மூளை கற்பனை சக்திக்கும், ஆக்க அறிவிற்கும் (Creativity) காரணமாக இருப்பதால், படிப்பதால் நன்மை விளைகிறது.

மேற்கண்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தால் எல்லாவற்றையும் காட்சியில் பார்த்துவிடுவதால் மூளைத் தூண்டலுக்கு அங்கு வாய்ப்பில்லை.

நல்ல நூல்களைப் படிப்பதால் விளையும் நன்மைகள்

1.திருவள்ளுவர் ‘வழுக்குகின்ற இடத்தில் ஒரு ஊன்றுகோலைப் போல சான்றோர் சொல் பயன்படும்’ என்று கூறுகிறார்.

2. இந்த உலகில் பல்வேறு வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது ‘ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப்போவதற்கு முன்பு ஏதேனும் ஒரு நல்ல நூலின் ஒரு பகுதியை படித்துவிட்டுத்தான் படுக்கச் செல்கிறேன்’ என்று கூறியுள்ளனர். இவ்வாறு படிக்கும் பழக்கம் பல புதிய விசயங்களை தெரிந்து கொள்ளவும் நமக்கு நானே மேலும் மேலும் தூண்டுதல் செய்து கொள்ளவும் பயன்படும்.

3. ஒரு அறிஞர் சொல்கிறார், “Life is a Learning Process”. அப்படிப் பார்க்கும்போது வாழ்க்கை முழுதும் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

4. ஜப்பானியரின் கைசன் என்னும் கொள்கை சொல்கிறது ‘தொடர்ச்சியாக வளர்ச்சியடைய வேண்டும்’ அதாவது அறிவில் – தொழிலில் வளர்ச்சியடைய மேலும் மேலும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும்.

5. நாம் சார்ந்திருக்கும் துறையில் என்னென்ன புதுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொண்டே இருக்கவேண்டும். அதன் எதிர்காலம் அதன் மார்க்கெட் நிலவரம், போட்டியாளர்களுடைய செயல்கள், அரசின் வணிகக் கொள்கைகள் என்பது பற்றியெல்லாம் விழிப்புணர்வு வர, செய்திகளைத் தெரிந்து கொண்டே இருக்கவேண்டும்.

6. மற்றவருடைய அனுபவங்களையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்கிற போது அவை வளர்ச்சிக்கு வழிகாட்டுபவையாக இருக்கும்.

7. மனித மனம் ஓர் நிலம். அந்த நிலத்தில் ஒன்றும் பயிர் செய்யவில்லையென்றால் புல்- பூண்டுகள் முளைத்து விடும். அந்த நிலத்தில் விதைகளை தொடர்ந்து தூவிக் கொண்டே இருக்க நல்ல நூல்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

8. நல்ல நூல்களைப் படித்த பின் அவற்றை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். சந்தித்து உரையாடும்போது பேச வேண்டிய விசயத்தை பேசி முடித்தப்பின் படித்த நூலில் உள்ள சிறப்பம்சத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த சந்திப்புக்கு பின் ‘உங்களுடைய சந்திப்பு பல நல்ல விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்து’ என்ற நல்ல உணர்வை அது நண்பரிடம் ஏற்படுத்தும்.

9. என்னுடைய பயிற்சியின் போது சில அன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் “நூல்கள் வாங்கிவிடுவேன் ஆனால் படிக்கத் தவணை செய்கிறேன். என்ன செய்வது?’

பதில்: ‘நூலை எடுத்து முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அமைதியாக பொறுமையாக உட்கார்ந்து படிக்க வேண்டும் அதற்கு இப்பொழுது நேரமில்லை’ என்று சிலர் தள்ளிப் போடுகின்றனர். அதற்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் பகுதியில் அதன் சுருக்கம் இருக்கும். அதைப் படியுங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடு போடப்பட்டோ அல்லது பெரிய எழுத்திலோ உள்ள முக்கிய வரிகளைப் படியுங்கள். நேரம் கிடைக்கும் போது முதலில் படித்த அத்தியாயத்தை படியுங்கள்.

ஹென்றி ஃபோர்டு சொல்லுவார், “எந்தப் பெரிய வேலையையும் பகுதி பகுதியாக பிரித்துச் செய்து விட்டால் வேலை எளிதில் முடியும்’

அடுத்து, படிக்கும்போது வேறு நினைவுகள் வந்து கவனம் சிதறினால் விரல் வைத்து படியுங்கள் பின் சிறிது சிறிதாக விரலை வேகமாகக் கொண்டு சென்று படியுங்கள். படித்து முடித்ததற்கு பிறகு வருகிற பயன்களை எண்ணிப் பார்த்து படியுங்கள்.

நிறைவுரை
பல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும். ஆக்க அறிவு (Creativity) மிகும். உரையாடும் போது மற்றவர்களால் மதிக்கப்படுவோம். எல்லோராலும் வேண்டப்பட்டோராக மாற முடியும்.

  நம் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்குத் தக்கபடி நூல்களை வாங்கி கொடுப்போம். வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் அமைப்போம்!


வாழ்த்துக்கள்!

என்றும் உங்க ஹாப்பி

சீரியலால் தீ :-


சீரியலால் தீ :-

சீரியல் சுயமாய் சிந்திக்கும் ஆற்றலை தடை செய்கிறதாம் .ஒரு பெண் ஒரு நாளைக்கு பார்க்கும்  மொத்த சீரியல் அளவு அதாவது நேரம் சும்மார் நான்கு மணி நேரம். இந்த சீரியல் பற்றி யோசிக்கவும் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமும்.  அடுத்த சீரியலை
எப்படி நேரம் ஒதுக்கி பார்ப்பது என்பதிலுமே இந்த சீரியல் பார்க்கும் பெண்கள் தமது நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் இவர்கள்
குடும்பத்தின் மீது காட்டும் அக்கறை குறைகிறது. தமது குழந்தை மீதும் பற்று குறைகிறது. தமது வேலைகளை சரியாக திட்டமிட்டு
செயல் படுத்த தவறி விடுகின்றனர் .அனவசியமாஹா  மின் இயதிரங்களை பாவித்து வேலைகளை சீக்கிரத்தில் முடிக்க முயல்கின்றனர். இதனால் மின் செலவு அதிகமாகிறது .
அதோடு கூட ஒரே  இடத்தில   இருப்பதால்  நோய்  உண்டஹவும்  வாய்புகள் அதிகம்.   அதனால் சினிமாவை  விட சீரியல் நமது  சிந்தனைக்கு தீ வைக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.

சிகரட் எனும் நல்ல பழக்கம்...!!!


எனக்கு சிகரட் குடிக்கும் நல்ல பழக்கம் சிறு வயதில் இருந்தே இல்லாமல் போய்விட்டது. எல்லோரும் சிகரட் பிடிப்பதை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். என்றாவது ஒரு நாள் சிகரட் பிடிக்க முயற்சிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கல்லூரி படிக்கையில் நானும் என் நண்பனும் ஒரு பந்தயம் வைத்தோம். என்னவென்றால், யார் மூன்று வருடமும் சிகரட் பிடிக்காமல் இருக்கிறார்கள் என்று.

"நான் அப்படி இருந்து காட்டுகிறேன்" என்றேன். என் நண்பனும் சிகரட் பிடிக்காமல் இருந்து காட்டுகிறேன் என்றான். ஆனால், அவன் சொன்ன ஒரு விசயம் வேடிக்கையாக இருந்தது. என்னவென்றால், அவன் அப்படி சிகரட் பிடிக்காமல் இருந்தால், கல்லூரி கடைசி நாள் அன்று சிகரட் பிடிப்பதாக கூறினான்.

மூன்று வருடமும் நானும் சிகரட் பிடிக்கவில்லை, அவனும் பிடிக்கவில்லை. கடைசி நாள் அன்று அவன் சொன்ன படியே சிகரட் பிடித்தான். என்னையும் பிடிக்கச் சொன்னான். எவ்வளவோ முயன்றும் என்னால் மட்டும் முடியவில்லை.

பிறகு MCOM படித்தபோது, நாங்கள் எல்லோரும் கோவா டூர் சென்றோம். இரயில் திருச்சி ஜங்ஷனை தாண்டியதுமே எல்லோர் கையிலும் சிகரட், என் கையிலும்தான். ஆனால், என்னால் மட்டும் அந்த சுவையை உணரமுடியவில்லை.

இராணிப்பேட்டையில் என் நண்பன் ஒருவன், திடீரென 555 சிகரட் பாக்கெட் வாங்கினான்.

ஏனென்று கேட்டேன். அவன் கூறினான், " மாப்ளே, பையில 555 சிகரட் பாக்கெட் இருந்தா ஒரு ஸ்டேடஸ்டா" என்றான்.

அப்படி விளையாட்டாக ஆரம்பித்த அவன் பழக்கம் இப்போது விடமுடியாத பழக்கமாக மாறிவிட்டது. இன்னொறு வயதான நண்பருக்கு சிகரட்டே சரியாக பிடிக்க தெரியாது. ஆனால், பிடிப்பார். எப்படியென்றால், அவர் புகையை உள்ளே இழுக்க மாட்டார். ஆனாலும் ஒரு ச்செயின் ஸ்மோக்கர் போல் தன்னை காண்பித்துக்கொள்வார்.

ஒரு முறை நான் ஒரு பார்ட்டிக்கு செல்லும்போது என்னை மிகவும் வற்புறுத்தி என்னை சிகரட் பிடிக்க வைத்தார்கள். நான் மீண்டும் முயற்சித்தேன். ஒரே இருமல் தொடர்ந்து. இரண்டு சிகரட் பிடித்தேன். பிறகு என்னவோ எனக்கு அந்த நல்ல பழக்கம் வாய்க்க வில்லை.

எனது பெரியப்பா ஒருவர் சாகும் வரை சிகரட் பிடித்தார். அவர் சிறு வயதிலிருந்தே சிகரட் பிடித்ததாக என்னிடம் கூறியுள்ளார். அவருக்கு சிகரட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவருக்கு அந்த கால உடம்பு. அதனால், பாதிப்பு இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஆனால், இப்போது சிகரட்டினால் ஏற்படும் தீமைகளை பார்க்கும்போது, படிக்கும்போது மிகவும் பயமாக உள்ளது.

ஏன் சிகரட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்?

01. ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் சிகரட் பிடிப்பதால் இறக்கிறார்கள்.

02. வாழ்நாள் முழுவதும் சிகரட் பிடிக்கும் இருவரில் ஒருவர், இந்த பழக்கத்தினாலேயே இறக்கிறார். பாதி பேர் மிக குறைந்த வயதிலேயே இறக்கிறார்கள்.

03. நிறைய பேருக்கு புற்று நோய் சிகரட் பிடிப்பதால் வருகிறது.

04. ஹார்ட் அட்டாக் வருவதற்கும், ஸ்ட்ரோக் வருவதற்கும் காரணமாகிறது.

05. உயர்ந்த இரத்த அழுத்தம் வருவதற்கும் காரணமாகிறது.

06. லங்க் கேன்சர் வருவதற்கும் நெக் கேன்சர் வருவதற்கும் காரணமாகிறது.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சென்றவாரம் கோலாலம்பூரில் ஒரு மீட்டிங்கில் ஒரு சுவீடன் நாட்டு அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. மலேசியாவில் இப்போது ஒவ்வொறு சிகரட் பாக்கெட்டிலும் ஒரு போட்டோ போட்டுள்ளார்கள். அதில் ஒருவருடைய தொண்டையில் கேனசர் உள்ளதை படமாக சிகரட் பாக்கெட்டின் அட்டையில் போட்டுள்ளார்கள்.

அவர் என்னிடம் கேட்டார்,

" உங்கள் நாட்டில் இப்படி சிகரட் பாக்கெட் அட்டையில் போட்டோ உண்டா?" என்று.

" இல்லை என்றுதான் நினைக்கிறேன்" என்றேன்.

" என் மனைவிக்கு தெரியாமல் சிகரட் பாக்கெட் மறைப்பது கஷ்டமாக உள்ளது" எனக்கூறினார்.

நான் கேட்டேன், " ஏன் சார், அப்படி மனைவிக்கு பயந்து, கேன்சர் வரும் என்று தெரிந்தும் சிகரட் பிடிக்க வேண்டுமா?"

அதற்கு அவர் கூறிய பதில்:

" SOMETIMES CANCER CURES SMOKING"

பணம் மட்டும் தான் வாழ்கையா ???


பொதுவாக எனக்கும் எனது நண்பர்களுக்கும் பணம் பற்றி பெரிய விவாதமே அவ்வபோது எழுவது உண்டு .

பணத்தை பற்றி எனது எண்ணம் " பணம் என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று . ஆனால் பணத்தால் எல்லாவற்றையும் பெற முடியாது . உதாரணத்துக்கு உண்மையான அன்பு , கனிவான உபசரிப்பு மற்றும் பல " .

ஆனால் என் நண்பர்கள் சொல்லுவது " பணம் தான் முக்கியம் . பணத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் . பணம் இல்லை என்றால் நம்மை விட்டு நண்பர்கள் உறவினர்கள் கூட பிரிந்து விடுவார்கள் "

இப்படிப்பட்ட நண்பர்கள் , உறவினர்கள் நம்முடன் இருப்பதை விட நம்மை விட்டு பிரிந்து போவது நல்லது . அவர்களுக்காக நாம் ஒன்றும் வருத்தப்பட வேண்டியது இல்லை என்பது என் எண்ணம். 


"ஒரு மனிதன் தனது துயரத்தில் தான் உண்மையான மனிதர்களை அறிகின்றான் " என்று சொல்லப்படுவது உண்டு .

அப்பா அம்மாவுக்கு !!!

குழந்தைகள் பிறக்கும் போது கள்ளங் கபடமில்லாமல்தான் பிறக்கின்றனர். ஒரு சூதுவாதும் தெரிவதில்லை. வளர வளர சூழலிலிருந்து புதிது புதிதாய்க் கற்றுக் கொள்கின்றனர். எனவே, மழலைகளுக்கு ஐம்புலன்களுக்கும் தகுந்த ஆரோக்கியமான விருந்து அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். நாம் பல சமயம் நம் தவற்றை உணராமல் குழந்தையின் மேல் அவற்றைத் திணிக்கிறோம். குழந்தைகள் தவறு செய்வதற்கு நாம் தான் பொறுப்பு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

சிலர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சுவதற்குக்கூட சில வேண்டாத அமங்கலச் சொற்களை உபயோகிப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே மங்கலமான சொற்களையும் மரியாதையுடன் கூடிய சொற்றொடர்களையும் உபயோகிக்க, குழந்தையும் அவற்றைக் கற்றுக்கொள்கிறது. குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை கிரஹிக்கும் சக்தி மிக அதிகம் எனக் குழந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பலர் குழந்தை முன், "சனியனே, ஏன் இப்படி அழுது தொலைக்கிறே?" என்றும், "எதற்கு இந்த ஒப்பாரி?" என்றும், "மூதேவி, ஏன் இப்படி அழுது என் உயிரை வாங்கறே? என்றும் கூறக் கேட்டிருக்கிறேன். இதே போல், மடையா, முட்டாள், அடிப்பாவி போன்ற சொற்களைப் பலமுறை கேட்கும் குழந்தையின் மனதில் அவை பதிந்து விடுகின்றன.

குழந்தையின் ஒவ்வொரு புலனுக்கும் உகந்த சூழலை அமைப்பது அவசியம். கண்ணிற்குப் பல வண்ணங்கள், வண்ணப் படங்கள், இயற்கைக் காட்சிகள், கடவுளின் படங்கள், தேசத் தலைவர்களின் படங்கள் போன்றவைகளை அடிக்கடிக் காட்ட அவற்றிற்கு நல்ல அஸ்திவாரம் கிடைக்கிறது.

காதுகளுக்கு தெய்வபக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள், தாலாட்டு போன்ற நல்ல கருத்து செறிந்த பாடல்களை அடிக்கடிக் கேட்கும் வாய்ப்புத் தர வேண்டும்.

அடுத்தது தொடு உணர்ச்சி. இதில் தாய் எல்லா உறவினர்களிடமும் தன் குழந்தையைக் கொடுத்துப் பழக்கப்படுத்தி, குடும்பத்திற்குள் ஒரு பாசப் பிணைப்பு உண்டாக்க முயல வேண்டும். உறவினர்களின் நல்ல குணத்தைப் பல தடவை சொல்லி, அவர்கள் மீது அந்தக் குழந்தைக்கு அன்பைப் பெருக்க வேண்டும்.

இந்தக் காட்சி நமக்குப் புதிதல்ல: பாட்டி அன்புடன் தன் பேத்தியைக் கூப்பிட, பேத்தி, "தத்தித் தத்தி" நடந்து வர, பாட்டி அவளை ஆசையுடன் அணைத்து மடியில் அமர்த்த, ஒரு குரல் வருகிறது, "வாடி, எனக்கு ஆபீசுக்கு நாழி ஆச்சு, உன்னைக் க்ரெச்சில் விட்டு நான் போக வேண்டும், இப்போத்தான் ரொம்பக் கரிசனமாய் உன்னக் கொஞ்சக் கூப்பிடறா உன் பாட்டி. போதாதற்கு 'கொல் கொல்'லுன்னு இருமல் வேறு" மருமகள் போட்ட போடலில் பாட்டி முகம் வாட, கம்பீரமாக வாக்குவாதம் கிளம்ப, மன்ஸ்தாபத்தில் முடிகிறது அன்றைய நாள்.

குழந்தைகளுக்கு அன்பு செலுத்தக் கற்றுக்கொடுங்கள், " அத்தையிடம் போ, கண்ணா, நல்ல அத்தை, உனக்குத் தலை எல்லாம் வாரிவிடுவாள்" என்று சொல்ல அவள் அத்தையிடம் தாவிச் செல்வாள், இதேபோல் மாமா, தாத்தா என்ற உறவுகளைப் புனிதமாக்கி நன்கு பாசப் பிணைப்பை உண்டாக்குவது ஒரு தாயின் கையில் தான் இருக்கிறது. அன்பு செலுத்துவது என்பது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒரு மகளை அல்லது மகனை வளர்த்து ஆளாக்கி, பல தியாகங்கள் செய்து கடைசியில் அந்த வயதானவர்கள் எதிர்ப்பார்ப்பது அன்பு ஒன்றுதான், அதுவும் பேரக் குழந்தைகளின் பந்தம், அதன் சிறப்பே தனிதான்.

குழந்தைகள் வளர்ப்புக்குப் பெற்றோர் பல தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு எம்.டி. படித்த டாக்டர் பெண்மணி தன் குழந்தை பிறந்தவுடன் தன் கிளினிக்கை வேறு ஒரு நண்பருக்கு ஒரு ஐந்து வருடங்கள் கொடுத்துவிட்டு தான் அந்தக் குழந்தையை நன்கு வளர்த்தாள், குழந்தைக்குத் தாயின் அணைப்பு மிகவும் தேவை. பிறந்ததிலிருந்தே அது தாயின் புடவைத் தலைப்பு, அல்லது தாலிக்கொடி, சங்கிலி என்று ஏதாவது அம்மாவிடம் பிடித்துக் கொள்ளும், அப்போது தாய் சொல்லே வேதவாக்காக எடுத்துக் கொள்ளும். இந்த நல்ல சமயத்தில் உண்மை பேசுதல், பணிவுடன் பேசுதல், பிறர் சொற்களைக் கேட்டல், எதிர்த்துப் பேசாதிருத்தல் என்பது போல் சொல்லிக் கொடுக்க, பசுமரத்தாணிபோல் பதிந்து விடும். உதரணமாக வீர சிவாஜியின் தாயை எடுத்துக்கொள்ளாலாம்.

அன்பு என்ற தோணியில் குழந்தைகளை வைத்து, தியாகம், பொறுப்புணர்ச்சி ஆகியவற்றுடனான துடுப்பால் ஒட்ட, சூறாவளி வந்தாலும் தாண்டி நம் வாழ்க்கையில் அமைதியை அடையலாம், குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்.

தூய தமிழ் சொற்களும்... பேச்சு வழக்கு சொற்களும்...

அ - தமிழ் மொழியின் முதல் எழுத்து : அழகு:

அகிலம் - உலகம்
அகம் - உள்ளே
அருகே - பக்கத்தில்
அடுத்த - வேற


அரசர் - மன்னர்
அதிகாரி - வேலைப் பார்ப்பவர்
அதிகம் - நிறைய
அறிவிப்பு - சொல்லுதல்


அசைவு - நகருதல்
அபிப்ராயம் - தன் விருப்பத்தை கூறுதல்
அமருதல் - உட்காருதல்
அவசரம் - மிக வேகமாக


அடிப்படை - அத்தியாவசியமான
அஞ்சுதல் - பயப்படுதல்
அங்கீகாரம் - உரிமை
அழைத்தல் - கூப்பிடுதல்


அதிர்ச்சி - வியப்பு
அருள்வாக்கு - தெய்வவாக்கு
அலுவலகம் - வேலை பார்க்கும் இடம்
அனுப்புதல் - கொடுத்தல்


அழகு - பெண்
அமைப்பு - நிறுவனம்
அறிஞர் - திறமையானவர்

அஆ - வியப்பைக் குறிக்கும் விட்டிகைச் சொல்.
அஃக - சுருங்க : குறைய : நுண்மையாக.
அஃகம் - தானியம் : விலைப் பொருள் : முறைமை : ஊறுநீர் : சுருக்கம்.
அஃகரம் - வெள்ளெருக்கு : கிரியை.
அஃகல் - நுணுகுதல் : குவிதல் : குறைதல் : சுருங்குதல் : வற்றுதல் : வறுமை.

சிரித்த முகம்; சிடுமூஞ்சி – இதற்கும் ஜோதிடம்


பொதுவாக சனி/செவ்வாய்/ராகு/கேது ஆகியவற்றில் ஏதாவது ஒன்று லக்னத்தில் இருந்தால் அவரது முகத்தில் சிடுசிடுப்பு காணப்படும். குறிப்பாக செவ்வாய் லக்னத்தில் இருந்தால் மூக்கிற்கு மேல் கோபப்படுபவராக இருப்பார்.

லக்னத்தில் சூரியன் இருந்தாலும் அவரது கோபம் சுட்டெரிக்கும் வகையில் இருக்கும். ஆனால் நியாயமான விடயத்திற்கு மட்டுமே கோபம் வரும். லக்னத்தில் சனி இருந்தால் அவருக்கு அசட்டுத்தனமான கோபம் இருக்கும். ஆனால் அவரது மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை முக பாவனையில் இருந்து அறிய முடியாது.

லக்னத்தில் சுக்கிரன், குரு, புதன், வளர்பிறை சந்திரன் அமர்ந்திருந்தால் அவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள். சிலருக்கு லக்னத்தில் சனி இருந்தாலும், நல்ல நிலையில் உள்ள குரு (வக்ரம், நீச்சமடையாத, பாவிகள் சேர்க்கை பெறாத) அந்த சனியைப் பார்த்தால் அவர்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். எதிரில் இருப்பவர் பைத்தியம் என்று நினைக்கும் அளவுக்கு சிரிப்பார்கள்.

மேலும் 5, 9வது இடத்திற்கு உரிய கிரகங்கள் லக்னத்தில் இருந்தாலும் அந்த ஜாதகர் சிரித்த முகத்துடன் இருப்பார். ஏனென்றால் 5ஆம் இடம் ஒருவரின் மனப்பான்மையை குறிக்கும். ஒருவரின் ஜாதகத்தில் 5க்கு உரியவர் லக்னத்தில் இருந்தால் அவர் பலவற்றையும் அலசி ஆராய்ந்து தெளிவான முடிவெடுப்பவராகவும், கோபத்தை எளிதில் வெளிப்படுத்தாதவராகவும், எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்.

சிரித்த முகம், சிடுமூஞ்சி ஆகியவற்றைப் பற்றி மட்டுமல்லாமல், உடலமைப்பு, குணம் ஆகியவற்றைப் பற்றியும் சங்க கால ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இப்ப நீங்கள் சிரித்த முகமா ? சிடுமூஞ்சியா ?  

நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்..!!!


1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதே Huh?அதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா Huh?

2-எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க Huh?
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில  எங்க மேனேஜர்ஜ  பார்த்த எனக்கு ரோபோ சங்கர்  ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)


3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்குHuh?


4-மூக்குலயும்  வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா Huh?

5-கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் Huh?


6- கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதி மன்றம் சென்றால் அவர்களும் ''கீதை'' மேல் சத்தியம் சத்தியம் செய்ய வேண்டுமா Huh?

7-விளம்பரங்களில் ''இலவசப்பரிசு'' என்று சொல்கிறார்களே..,பரிசுனாலே அது இலவம் தானே இல்லையா Huh?

8-numberஜ ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ணு எழுதுகிறோம்? numberல oங்கர எழுத்தே இல்லையே Huh?

9-சின்மா DVDய  reverseல சுத்தினா படம் reverseல ஓடுமா Huh?

10-அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு'' எல்லோரும் சொல்லுறாங்களே''நாய் எண்ணைக்கு வேலை செய்திருக்கு..ஒரு ஓரமா தானே படுத்தி வால் ஆட்டிட்டு இருக்கும் இல்லையா Huh?

11-கண்ணு பெரிசா இருக்கிறவங்களுக்கு கண்ணு சிரிசா இருக்கிறவங்ள விட சைட்ல அதிகமாக பார்க்க முடியுமா Huh?

இதுக்கு எல்லம் உங்களிக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க..புண்ணியம போகும் Cry
 Grin