Sunday, December 22, 2013

மர்லின் மன்றோ

1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ. உலக இளைஞர்களின் காமத்தின் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம், இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது.
மர்லினின் அபிரிதமான அழகும், பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும், 36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை, ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது.

மர்லின் மன்றோ பிறக்கும்போது அவரது தாயார் கிளாடிஸ் மன்றோ பேக்கர் தனது முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கரை பிரிந்து எட்வர்ட் மார்டின்சன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். மர்லினின் தந்தை யார் என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. அப்பாவை தேடிய நீண்ட பயணமாக மர்லினின் வாழ்க்கையை எளிமையாகக் கூறலாம்.மர்லினின் பிறப்புச் சான்றிதழில் அப்பா என்று எட்வர்ட் மார்டின்சனின் பெயரும், ஞானஸ்தான சடங்கில் அப்பா இடத்தில் ஜாஸ்பர் பேக்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மர்லினின் இளமைப் பருவம் கொடியது. பிறந்த பன்னிரெண்டாவது நாளே வறுமை காரணமாக வளர்ப்பு பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள். பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு வளர்ப்பு பெற்றோர்கள் என அனாதைத்தனமான வாழ்க்கை. இடையில் மர்லினின் தாயார் மனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட, அவள், தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

16 வயதில் நடந்த மர்லினின் முதல் திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை. வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம் அது. 1944-ல் மர்லினின் வாழ்க்கை புதிய மாறுதலுக்குள்ளானது. டேவிட் கொனோவர் என்ற புகைப்படக் கலைஞர் Yank பத்திரிக்கைக்காக மர்லினை சில புகைப்படங்கள் எடுத்தார். மர்லினின் அபிரிதமான அழகை முதலில் கண்டுணர்ந்தவர் கொனோவரே.

ஒரே வருடத்தில், அமெரிக்க முன்னணி பத்திரிக்கைகளின் அட்டைப்பட அழகியாக உயர்ந்தார் மர்லின் மன்றோ. இந்தப் புகழ், வெளிச்சம் மர்லினின் கணவனுக்குப் பிடிக்கவில்லை. கணவனா, வேலையா என்ற கேள்வி வந்தபோது, கணவனை உதறினார் மர்லின். 1942ல் நடந்த 1944ல் கசந்த நினைவுகளுடன் முறிந்துபோனது.

ஜாதிபதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவர் பாடியது, அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. மர்லின் ஒரு உளவாளி. ஜான் கென்னட மூலம் அமெரிக்காவின் ரகசியங்கள் தெரிந்துகொள்கிறார் என்பது போன்ற ஹாஸ்யங்கள் கிளம்பின. அமெரிக்க உளவு நிறுவனங்களின், 'நீக்கப்பட வேண்டியவர்கள்' பட்டியலில் அவர் பெயரும் இணைக்கப்பட்டது.

இறுதியில் 1962 ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது அறையில் இறந்து கிடந்தார் மர்லின். அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளே மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இளமையை ஒரு அனாதையைப் போல் காக்க நேர்ந்த மர்லினின் உடல் சவக்கிடங்கில் அதே அனாதைதனத்துடன் கிடந்தது. அவள் உடலைப் பெற்றுக்கொள்ள கணவனோ, காதலனோ, உறவினர்களோ யாருமில்லை. இருந்த ஒரே உறவான மர்லினின் தாயோ மகளின் மரணத்தை உணர முடியாத மனச்சிதைவுடன் மனநல காப்பாகத்தில் இருந்தாள்.


அழகின், இளமையின், காமத்தின் குறியீடாக மர்லின் இன்று வரை முன்னிறுத்தப்படுகிறாள். மிதமிஞ்சிய காமத்தை வெளிப்படுத்தும் வேடத்தை ஏற்று நடித்த மர்லின் ஒருபோதும் காமத்தை நாடிச் சென்றதில்லை.
மர்லின் சிறந்த பாடகி. லேடீஸ் ஆ·ப் தி கோரஸ் படத்தில் மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார். இது தவிர அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை முப்பதை தொடும். உலகின் தலைசிறந்த நாவலாசிரியர்களை, அவர்களின் படைப்புகளை மர்லின் அறிந்திருந்தார். இந்த பன்முகத்தன்மையை அழித்து, கவர்ச்சி எனும் ஒற்றை பிம்பமாக இந்த சமூகம் அவரை பிரகடனப்படுத்தியது. சுருக்கமாக, மர்லின் வாழ்க்கை சிதைக்கப்பட்ட ஓர் அழகிய கனவு!

0 comments:

Post a Comment