Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Sunday, December 22, 2013

சுனாமி..!



சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு + னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

சுனாமி எப்படி உருவாகிறது?

பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின. இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.


எப்படியெல்லாம் வரும் சுனாமி.?

1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.

2. கடலாழ பூகம்பத்தினால் வரும்

3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.

4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.

5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)

6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.


சுனாமி முதன் முதலில் ஏற்பட்டது எப்போது..?

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.

2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.


சுனாமி எச்சரிக்கை அமைப்பு:

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.

அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் 'சுனாமி மிதவை கருவி'.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்:

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.

நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும்.

அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

யாரிடத்தும் எதையும் எதிர்ப்பார்க்காதே - சிந்தனைத்துளி


சுதந்திரமானவனாக இரு. எவரிடத்திருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன் உனது கடந்தகால வாழ்க்கை நீ பின்னனோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமல் போனதையும் தான்காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்து வந்தவையாகத்தான் இருக்கும்.

- விவேகானந்தர்.

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.

-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.

- வால்ட் விட்மல்

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.

- விவேகானந்தர்.


மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி

- சீன அறிஞர் கன்பூசியஸ்


“வேதனையைத் தாங்கி
பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”

- தாகூர்

எழுதுவது ஏன்?

1) எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால்

தனக்குள்ளிருந்து தன்னை யாரோ எழுதும்படியாக வற்புறுத்துவது போல ஒருவன் அடையும் நிலையில் தான் இந்த வகை எழுத்து உருவாகிறது. மிதமிஞ்சிய வேதனையை. தனிமையை பகிர்ந்து கொள்வதற்கு யாருமற்ற நிலையில் கதையோ, கவிதையோ எழுதுவது உருவாகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இந்த வகையில் தான் துவங்குகிறார்கள்.


2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க.

மிகச்சிறந்த இலக்கியவாதிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. வாழ்வின் ஞானமும், சரளத்தன்மையும், அன்பையும் வெளிப்படுத்தவே அவர்கள் எழுதுகிறார்கள். தங்களது அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு சந்தோஷமாக முன்வருகிறார்கள். வாசிப்பவனும் எழுத்தாளனைப் போலவே அந்த அனுபவத்தை துய்த்து உணருகிறான். உதாரணத்திற்கு லு?யி கரோல் எழுதிய ஆலிஸின் அற்புத உலகம் அவரை சந்தோஷப்படுத்தியதோடு நு?ற்றாண்டுகளாக குழந்தைகளை, பெரியவர்களைச் சந்தோஷப்படுத்திவருகிறது. இந்த வகை எழுத்து எதையும் போதிப்பதோ, கட்டாயப்படுத்துவதோ இல்லை.


3) யாருக்காவது எதையாவது கற்றுக் கொடுக்க

விற்பன்னர்களும், அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் வாசகனை தங்களை விடவும் அறிவில் குறைந்தவன் என்ற கருத்தில் தான் எழுதுகிறார்கள். அது சமையற்கலையாக இருந்தாலும் அணுவிஞ்ஞானமாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.
இந்த வகை எழுத்தில் எழுத்தாளனின் விருப்பம் நிறைவேறுவது அவனது அறிவின் திறன் அளவில் தான் சாத்தியமாகிறது. பலநேரங்களில் அதுவே படிக்கமுடியாமலும் செய்துவிடுகிறது. எளிமையும், ஆழ்ந்த அறிவும், விளக்கி சொல்லும் திறன்மிக்க மொழியும் ஒன்று சேர்ந்து எழுத்து உருவானால் அப்போது வாசகன் கற்றுக்கொள்வதோடு நல்ல கலைப்படைப்பை வாசித்த அனுபவத்தையும் பெறுகிறான்.


4) தன் கருத்துக்களை தெரியப்படுத்த

இந்த வகை எழுத்தாளர்கள் தாங்கள் தனித்துவமானவர்கள், ஞானம்பெற்றவர்கள், அதிக அறிவுதிறன் கொண்டவர்கள் என்று தங்களை நம்பக் கூடியவர்கள். உலகில் தங்களுக்கு மட்டுமே சில அரிய கருத்துகள் மனதில் உதயமாகியுள்ளதாக நம்புகிறவர்கள். தத்துவத்திலும் அரசியலிலும் விருப்பம் கொண்டவர்களே இந்தவகை எழுத்தில் அதிகம். இந்த வகை எழுத்தில் ஒரிஜினாலிடி மிக அரிதாகவேயிருக்கிறது.



5) வேதனையிலிருந்து விடுதலை அடைய

பிரச்சனைகளை நேரிடையாக சந்திக்க முடியாமலும், ஆறுதல் தேடுவதற்கு வழியற்றும், எழுதுவது ஒரு பாவமன்னிப்பு கோருதல் போல என நம்புகிறவர்களே இந்த வகை எழுத்தாளர்கள். ஆனால் எழுத்தாளனின் வேதனைகளை வாசகனின் மீது திணிப்பதும் பலநேரங்களில் தவறானதாகிவிடுகிறது. அது தானும் விடுதலை அடையமுடியாமல் வாசிப்பவனையும் நரகத்தில் தள்ளிவிடும்


6) புகழ்பெற

ஒரு பைத்தியக்காரன் தான் புகழ்பெறுவதற்கென்றே எழுத முயற்சிப்பான். காரணம் எழுதிப் புகழ்பெறுவது எளிதான காரியமில்லை. எல்லா எழுத்தாளர்களுக்கும் மனதில் தனக்குப் பெரிய புகழ் கிடைக்கவேண்டும் என்ற ஆசையிருக்கதான் செய்கிறது . ஆனால் அதற்காக யாராவது எழுதத் துவங்கினால் அந்த எழுத்து நிச்சயமற்ற பலனைத் தான் உருவாக்கும்


7) பணக்காரன் ஆக

சம்பாதிக்க, கடனை அடைக்க, வசதியாக வாழ என பலகாரணங்களுக்காக எழுதுபவர்கள் பலரிருக்கிறார்கள். உபயோகமான எந்த விஷயத்திற்கும் வழங்கபடுவது போல தான் எழுத்திற்கும் சன்மானம் வழங்கப்படுகிறது. ஆனால் பணத்துக்காக மட்டும் எழுதுவது ஆபத்தானது. அது மலிவான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்


8 ) உலகை செம்மைபடுத்த

இந்தவகை எழுத்தாளர்கள் உலகம் தங்களால் தான் காப்பாற்றப் படப் போகிறது என்று நம்புகிறவர்கள். மேலும் உலகைப் பற்றி தங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்று நம்புகிறவர்கள்.ஹிட்லர் மெயின்கேம்ப் எழுதியது கூட இந்த வகை ஈடுபாட்டில் உருவானது தான்.


9) பழக்கத்தின் காரணமாக

இது தன்னைத் தானே காப்பிசெய்து கொள்வது போன்ற எழுத்து ரகம். தன்பெயரைத் தொடர்நது அச்சில் பார்ப்பது ஒரு நோக்கமாக இருக்க கூடும். மற்றவகையில் வெறுமனே பழக்கம் காரணமாக மட்டும் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை விடவும் மெளனமாக எதையும் எழுதாமலிருப்பது அவருக்கும் நல்லது, வாசகர்களுக்கும் நல்லது

மர்லின் மன்றோ

1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ. உலக இளைஞர்களின் காமத்தின் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம், இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது.
மர்லினின் அபிரிதமான அழகும், பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும், 36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை, ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது.

மர்லின் மன்றோ பிறக்கும்போது அவரது தாயார் கிளாடிஸ் மன்றோ பேக்கர் தனது முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கரை பிரிந்து எட்வர்ட் மார்டின்சன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். மர்லினின் தந்தை யார் என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. அப்பாவை தேடிய நீண்ட பயணமாக மர்லினின் வாழ்க்கையை எளிமையாகக் கூறலாம்.மர்லினின் பிறப்புச் சான்றிதழில் அப்பா என்று எட்வர்ட் மார்டின்சனின் பெயரும், ஞானஸ்தான சடங்கில் அப்பா இடத்தில் ஜாஸ்பர் பேக்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மர்லினின் இளமைப் பருவம் கொடியது. பிறந்த பன்னிரெண்டாவது நாளே வறுமை காரணமாக வளர்ப்பு பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள். பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு வளர்ப்பு பெற்றோர்கள் என அனாதைத்தனமான வாழ்க்கை. இடையில் மர்லினின் தாயார் மனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட, அவள், தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

16 வயதில் நடந்த மர்லினின் முதல் திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை. வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம் அது. 1944-ல் மர்லினின் வாழ்க்கை புதிய மாறுதலுக்குள்ளானது. டேவிட் கொனோவர் என்ற புகைப்படக் கலைஞர் Yank பத்திரிக்கைக்காக மர்லினை சில புகைப்படங்கள் எடுத்தார். மர்லினின் அபிரிதமான அழகை முதலில் கண்டுணர்ந்தவர் கொனோவரே.

ஒரே வருடத்தில், அமெரிக்க முன்னணி பத்திரிக்கைகளின் அட்டைப்பட அழகியாக உயர்ந்தார் மர்லின் மன்றோ. இந்தப் புகழ், வெளிச்சம் மர்லினின் கணவனுக்குப் பிடிக்கவில்லை. கணவனா, வேலையா என்ற கேள்வி வந்தபோது, கணவனை உதறினார் மர்லின். 1942ல் நடந்த 1944ல் கசந்த நினைவுகளுடன் முறிந்துபோனது.

ஜாதிபதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவர் பாடியது, அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. மர்லின் ஒரு உளவாளி. ஜான் கென்னட மூலம் அமெரிக்காவின் ரகசியங்கள் தெரிந்துகொள்கிறார் என்பது போன்ற ஹாஸ்யங்கள் கிளம்பின. அமெரிக்க உளவு நிறுவனங்களின், 'நீக்கப்பட வேண்டியவர்கள்' பட்டியலில் அவர் பெயரும் இணைக்கப்பட்டது.

இறுதியில் 1962 ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது அறையில் இறந்து கிடந்தார் மர்லின். அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளே மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இளமையை ஒரு அனாதையைப் போல் காக்க நேர்ந்த மர்லினின் உடல் சவக்கிடங்கில் அதே அனாதைதனத்துடன் கிடந்தது. அவள் உடலைப் பெற்றுக்கொள்ள கணவனோ, காதலனோ, உறவினர்களோ யாருமில்லை. இருந்த ஒரே உறவான மர்லினின் தாயோ மகளின் மரணத்தை உணர முடியாத மனச்சிதைவுடன் மனநல காப்பாகத்தில் இருந்தாள்.


அழகின், இளமையின், காமத்தின் குறியீடாக மர்லின் இன்று வரை முன்னிறுத்தப்படுகிறாள். மிதமிஞ்சிய காமத்தை வெளிப்படுத்தும் வேடத்தை ஏற்று நடித்த மர்லின் ஒருபோதும் காமத்தை நாடிச் சென்றதில்லை.
மர்லின் சிறந்த பாடகி. லேடீஸ் ஆ·ப் தி கோரஸ் படத்தில் மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார். இது தவிர அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை முப்பதை தொடும். உலகின் தலைசிறந்த நாவலாசிரியர்களை, அவர்களின் படைப்புகளை மர்லின் அறிந்திருந்தார். இந்த பன்முகத்தன்மையை அழித்து, கவர்ச்சி எனும் ஒற்றை பிம்பமாக இந்த சமூகம் அவரை பிரகடனப்படுத்தியது. சுருக்கமாக, மர்லின் வாழ்க்கை சிதைக்கப்பட்ட ஓர் அழகிய கனவு!

மனிதப் பண்பு ( தெய்வம் நீ என்று உணர் )

தெய்வம் நீ என்று உணர்

இன்றைய உலகம் அறிவியல் உலகம். எதையும் ஆராய்ந்து கண்டு தெரியும். விருப்பங்கொண்டோர் நிறைந்த உலகம். நேரில் கண்டால் ஒழிய மற்றவற்றை நம்ப மறுக்கின்ற உலகம்.


பொறுமை இல்லை

‘சந்திர மண்டலத்திற்குச் சென்று வருவது இயலும்’ என்பதைக் கற்பனை என்று ஒதுக்கித் தள்ளியதும் இந்த உலகந்தான். ஆனால் அதுவே உண்மையான போது, அதனை ஒத்துக்கொண்டதும் இந்த உலகந்தான். ஆதலின் காட்சி அளவில் கண்டால் ஒழிய மற்றவற்றை நம்ப இயலாத நிலை உலகில் நாளும் வளர்ந்து வருகின்றது. அதேபோல் அறிவியல் வளர்ச்சியால் கற்பனை என்று கொண்டவற்றுள் சில உண்மையானதாகவும் உண்மை என்று கொண்டவற்றுள் பல கற்பனை யானதாகவும் மாறி வருவதையும் காண்கின்றோம்.

பரபரப்பு மிகுந்த இவ்வுலகில் எதையும் ஆழ உணர்வதற்கு மக்களுக்குப் போதிய நேரம் வாய்ப்பதில்லை; பொறுமையும் இருப்ப தில்லை. உண்டு செரித்த பின் மனிதனுக்குக் கிடைக்கும் உயிர்ச்சத்து (வைட்டமின்), மாத்திரை வடிவிலேயே கிடைக்கும் என்றால் பிறகு உணவைத் தேடி அலைவானேன். அதுபோல்தான் எல்லாவற்றிலும். அதனால் ஆழ உணர்ந்து தெளிய வேண்டும் என்ற விருப்பமும் மக்களுக்கு வாய்ப்பதில்லை.


நம்பிக்கை குறைகின்றது

இத்தகைய சூழ்நிலையில் இயற்கையின் எல்லையில்லாத ஆற்றலை, அதன் அமைப்பை காரண காரியத் தொடர்பை மனிதன் அறிந்து போற்றுவதற்குரிய வாய்ப்பு இல்லை. எதையும் நேரில் கண்டோ, உற்று உணர்ந்தோ, சுவைத்து அறிந்தோ பழக்கப்பட்ட அவனுக்குப் பிறர் சொல்வதைக் கேட்பதில் நம்பிக்கை விழுவதில்லை. எல்லாவற்றையும் இயக்குகின்ற பேராற்றல் ஒன்று இருக்கிறது என்பதை அறிந்தாலும் உணர்வதில்லை. அதனால் பாதிப்பு நிகழாதபோது நன்மைகள் நிகழாத போது, நிகழ்கின்ற பெருந்தீமைகளைத் தடை படுத்த முடியாதபோது அந்தப் பேராற்றலைப் பற்றி அவன் ஏன் கவலைப் பட வேண்டும்? அதனால் நம்புதற்குரிய கூறுகளும் குறைந்து வருகின்றன.


நிறையும் குறையும்

இதற்கும் மாறாக மனிதன் நேரில் காணு கின்ற வேறொரு மனிதனை நம்புகிறான். அவனது மனிதனது குணநலன்களை நம்புகிறான் பெரும்பான்மையான நல்ல குணங்களை உள்ள ஒரு மனிதனை உலகம் மதிக்கிறது. அவனைத் தனது வழி காட்டி யாகக் கொள்கிறது. வாழ்க்கையே ஒப்பிட்டுப் பார்க்கும் ஒன்று தான். அந்த ஒப்பீட்டில் சிலர் மனநிறைவு கொள்கிறார்கள். சிலர் மனக்குறைவு கொள்கிறார்கள். நாமும் உயர வேண்டுமெனச் சிலர் புதிய எழுச்சியோடு செயல்படத் தொடங்குகிறார்கள். முறையான வாழ்வை உடையவர்கள் மன நிறைவு கொள்வதும், முறையற்ற வாழ்வை உடையவர்கள் மனக்குறைவு கொள்வதும் இயல்பே.


புதிய வழி நல்லதாக இருந்தால்

மக்களின் அளவுகோலாக விளங்கும் எடுத்துக்காட்டான மனிதனின் அருங் குணங்களை ஆராய்ந்தால் உண்மையை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். இப்படிக் கால வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவது இயல்புதான். ஒன்றில் இருந்த நம்பிக்கை வேறொன்றில் செல்வதும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். என்றாலும் எப்படி மாறினும் அடிப்படையான அறங்கள் மாறுவதில்லை. மக்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்பதும், அற வழியில் வாழ வேண்டும் என்பதும் உயிர்களிடத்தில் அருள் காட்ட வேண்டும் என்பதும், என்றும் எங்கும் மாறாத ஒன்று. அதனாலேயே உலக இயக்கம் நடை பெறுகிறது.

மனிதப் பண்புகள் நிறைவந்தவர்களைச் சான்றோர் என்கின்றோம். சான்றோர் என்பதற்குரிய குணங்களை ஆராய்ந்தால் சாதாரண மனிதனும் சான்றோன் ஆவதற்குரிய வழி கிடைத்து விடுகின்றது. புதிய வழி நல்லதாக எளியதாக, காலத்திற்கு ஒத்ததாக இருந்தால் அதனைப் பின் பற்றுவதில் தவறு ஒன்றும் இருத்தற்கில்லை.


ஐந்து பண்புகள்

நம்முடைய முன்னோர்கள் சான்றோர்க்கு முதன்மையாக இருக்க வேண்டிய ஐந்து பண்புகளை வற்புறுத்திக் கூறியுள்ளார்கள். அவற்றுள் முதன்மையாக வேண்டப்படுவது அன்பு. தனக்கு வேண்டியவர்கள் என்றும் வேண்டாதவர்கள் என்றும் வேறுபாடு இன்றி எல்லாரிடத்திலும் அன்போடு நடந்து கொள்வது மனிதத் தன்மையின் பொது இயல்பு. இப்பொதுத் தன்மை பலரிடம் இல்லாத போது, இருக்கின்ற சிலர் நல்லவர்களாக – உயர்ந்தவர்களாகக் காணப் படுகிறார்கள். சிலரைக் கண்டால் மட்டும் இன்முகமும் வேறு சிலரைக் கண்டால் இன்னாமுகமும் காட்டுகின்றவர்கள் மனிதத் தன்மையிலிருந்து இழிந்து விடுகிறார்கள்.


எது நாணம்?

அடுத்து வேண்டப்படுவது பழி பாவங் களுக்கு அஞ்சுதலாகிய நாணம். செல்வச் செருக்காலும், செல்வாக்கு வாய்த்ததாலும் என்னால் எதுவும் முடியும் என்று நேர்மைக்கு மாறான செயல்களைச் சிலர் செய்கிறார்கள். ஆனால் அச்செயல் செய்வதற்கு அவர்கள் அஞ்ச வேண்டும். தூங்குகின்ற ஒருவனை ஒரு கோழைகூடக் கொன்று விடலாம். தன்னந்தனியாகச் செல்கின்ற ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் ஒருவன் கெடுத்து விடலாம். திறமையுள்ள ஒருவன் திறனற்றவர்களை எல்லாம் எதிர்த்து எதிர்த்து வெற்றி கொண்டு விடலாம். ஆனாலும் இவை களெல்லாம் நேர்மையான செயல்களா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லா வசதிகளையும் பெற்றிருந்தும் இப்படி எண்ணிப் பார்த்துத் தவறு செய்யாமல் வாழ்கின்றவர்கள் உண்மையில் மனித சமுதாயத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். தங்களுடைய அற்ப வளத்தைத் தீய வழியில் பயன்படுத்துகிறவர்கள் அழிந்து போகிறார்கள். அந்த அழிவும் அவர்களாலேயே ஏற்பட்டு விடுகின்றது. ‘நன்றும் தீதும் பிறர் தர வருவதில்லை, நாமாகவே தேடிக்கொள்வது’ என்பது நமது முன்னோர்கள் பட்டறிந்து மொழிந்ததாகும்.


ஒதுங்கி வாழ்கிறார்கள்

அன்பான உள்ளமும் நல்ல செயல்கள் செய்வதும் மட்டும் ஒருவனுக்கு வாய்த்து விட்டால் போதாது. அவன் பிறருக்கு உதவுகின்றவனாகவும் விளங்க வேண்டும். நல்லவர்கள் பலர் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்காகவே வாழ்கிறார்கள். பிறர் நலம், பொதுநலம் பற்றி எண்ணுவதும் செய்வதும் இல்லை. நல்லவர்கள் ஒதுங்கி வாழ்வதே நாடு கெட்டழிவதற்கு ஒரு காரணமாகும். தங்களின் நற்பண்பால் பலருக்கும் வழி காட்டியாக அமைவதோடு வாழ்க்கையில் முடியாதவர்களுக்கு உதவ அவர்கள் தாமாக முன்வருதல் வேண்டும். முடிந்தவர்களுக்கு உதவ ஆயிரம் பேர் முன் வருவார்கள். ஏழைகளுக்கு? எதுவும் அறியாதவர்களுக்கு? அத்தகையவர்களைக் கைதூக்கி விடுவதே ‘ஒப்புரவு’ என்பதாகும். இந்த ஒப்புரவினைச் செய்கின்றவர்கள் நாட்டில் இல்லாமல் இல்லை; இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எங்கோ விரல்விட்டு எண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் பலரானால் நாடு நலம் பெறும் என்பது உறுதி.


வாய்ப்பளிக்க வேண்டும்

மனிதன் குறைவுடையவன். முழுமைத் தன்மை அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆதலின் யாரேனும் சூழ்நிலையின் காரணமாகவோ, உணர்ச்சி வயப்பட்டு ஏதேனும் ஒரு தவற்றைச் செய்துவிட்டால் அதை கொண்டே அவர்களை வாழ்நாள் முழுதும் குற்றவாளியாக்கி விடுதலும் கூடாது. அவர்களுக்கு வாய்ப்பளித்துத் திருத்துவதற்கு முயல வேண்டும். தன் பற்களை உடைத்தவனுக்குக் காந்தியடிகள் பாத அணி செய்து தந்ததை அனைவரும் அறிவர். அதற்குப் பிறகு அந்த அதிகாரி தான் செய்த தவற்றுக்கு நாணிச் சீர்திருந்தி யதையும் உலகு அறியும். இதுபோல் வாழ்வில் ‘கண்ணோட்டம்’ செலுத்தி உலகைக் களிவித்து வாழ்கின்ற பண்பு உள்ளோர் பெருக வேண்டும். அவ்வாறு இருப்போர் பலரானால், இப்பண்பு ஊர் தோறும் சிலருக்கு வாய்க்குமானால் மனித இனம் மாண்புறும் என்பதில் எவ்வித ஐயப் பாடும் இல்லை. இத்தகைய பண்புடையோர் நம் இதயங்களில் வாழாமல் இல்லை.


பொய் குறையக் கவலை குறையும்

எல்லாவற்றிற்கும் மேலாக வாய்மையைப் போற்றுதலாகும். பேசுதல் என்பது எளியவற்றுள்ளும் எளிமையான செயல். ஆனால் அதில்தான் அரிய கவனம் செலுத்துதல் வேண்டும். எல்லாவற்றிலும் உண்மையாக நடந்து கொள்ளுதல் வேண்டும். ஆனால் இன்றைய நடை முறையில் பொய்யாமை போற்றப்படுவ தில்லை. மாறாக பொய்மை ஒரு கலை யாகவே வளர்ந்து விட்டது. பொய்யான புகழ்ச்சி, பொய்யான விருந்தோம்பல், பொய்யான பழக்க வழக்கங்கள், தனக்கு என ஒன்று. உலகின் பார்வைக்கு என வேறொன்று. இப்படிப் பொய்தவழும் உலகின் போக்குச் சொல்லும் தரமன்று. அதனால் ஏற்படுகின்ற தீமைகள் அளவிடற் கரியன. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பொய் இருக்கின்ற அளவிற்கு கவலைகள் இருக்கின்றன. பொய் குறையக் குறையக் கவலைகள் குறையும் என்பதை அவர்கள் அறிவதில்லை. அதனால்தான் காந்தியடிகள் உண்மையை உணர்ந்து அதனைக் கடை பிடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். தன் வாழ்க்கையையே வாய்மையைப் போற்றும் சோதனைக் களமாகக் கொண்டு வெற்றி கண்டார்.


மனிதனே தெய்வம்

இறைவனை எண்ணரிய குணங்களை உடையவன் என்கிறோம். தூய்மையே வடிவானவன் என்று போற்றுகின்றோம் அவனை உணர முடியாதவர்கள், உணர வாய்ப்பில்லாதவர்கள், ஏன்? உணர விரும்பாதவர்கள், மனிதர்களில் சிறந்து விளங்கும் நல்ல மனிதர்களின் பண்பு நலன்களை எண்ணிப்பார்த்து அவர்களைப் போல் நாம் விளங்க வேண்டும் என்று விரும்புவதும், அவர்களின் பண்புகளை ஆராய்ந்து அவற்றைப் பின்பற்றுவதும் சாலச் சிறந்ததாகும்.


நீ தான் மனிதன்

அன்பையும் நாணத்தையும் ஒப்புரவையும் கண்ணோட்டத்தையும் வாய்மையையும் உடையவர்களைச் சான்றோர் என்றார் உலகப் பெருமகனார் வள்ளுவர். இத்தகு குணங்களை வளர்த்துக் கொண்டால் தெய்வத்தைத் தேடி அலைய வேண்டாம் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்றார் பாரதி. அறிஞர்களின் கருத்துக்களைப் படித்து மகிழ்வதற்கும், பிறர்க்குச் சொல்வதற்கு மட்டுமே பயன்படுத்துகின்ற வழக்கத்தை மாற்றி வாழ்க்கையில் கடைபிடிப்பதற் காகவே அவை எழுதப்பெற்றவை என்பதை உணர்ந்தால் தனி மனித நலத்தோடு சமுதாயமும் நலம் பெறும். அந்த நலம் வாய்க்கும் நாள் நம்மை நாம் உணரும் நாளாகும்.

வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்


வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்

மனித உறவுப் பிரச்சனைகள் (Human Relations Problems) மன நிம்மதியைப் போக்கிவிடுகின்றன. வாழ்க்கையில் பிடிப்பினைத் தளர்த்துகின்றன. செயலூக்கத்தினைக் குறைக்கின்றன. சிந்தனைத்திறன், அறிவு (Creativity) ஆகியவற்றைப் பாதிக்கின்றன. இவற்றிற்குக் காரணங்கள் யாவை? தீர்வுகள் யாவை என்பதைப் பார்ப்போம்.

காரணங்கள்

தன்னைப் புரிதல், மற்றவர்களைப் புரிதல், வாழ்வினைப் பற்றிய தெளிவான நோக்கு- இவைகள் இல்லாத பட்சத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன.

தீர்வுகள்

1. உயர்வு மனப்பான்மை (Superiorty Complex) & தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) கொள்ளாமல் இருக்க வேண்டும். கர்வம் கொண்ட, அகங்காரம் மிக்க, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற, தானே பெரிது என்று எண்ணுகின்ற, மனப்பான்மையை போக்கிக்கொள்வது எப்படி?

இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் தெரிந்துகொள்ளவும் முடியாது. ஒரு உதாரணத்திற்கு, ஒரு ராக்கெட்டில் அதன் உச்ச வேகத்தில் வானத்தில், எவ்வளவு ஆண்டுகள் பயணித்தாலும், வானின் எல்லையை காண முடியாது. இப்படி பூமிக்கு மேலேயும், கீழேயும் பக்க வாட்டிலும் வானுக்கு எல்லை இல்லை. எவ்வளவு பெரிய தொலைநோக்கியை வைத்து ஆராய்ந்தாலும், ஒரு எல்லைக்கு மேல் அறிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும்போது இந்த வானவெளியில் பூமி, இந்தியா, தமிழ்நாடு, நம்மூர், நாம் – எவ்வளவு மிகச்சிறு பகுதி… எண்ணிப்பாருங்கள்.

ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அதையும் பிரித்து அணுத்துகள்கள் – இவற்றைப் பற்றி எவ்வளவு டாக்டர் பட்டம் வாங்கினாலும், எத்தனை ஆராய்ச்சிகள் செய்தாலும் முழுமையாக இன்னும் புரியவில்லை. பிறப்புக்கு முன்பும், இறப்புக்கு பின்பும் இன்னும் சரியாகத் தெரியவில்லை.

இதையெல்லாம் எண்ணிப்பார்த்தால் தான் பெரிது என்ற அகங்கார மனநிலை போய்விடும்.

தாழ்வு மனப்பான்மையை போக்குவது எப்படி?

இந்த உலகில் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு தனித்தன்மையும் சிறப்புத்தன்மையும் உடையது. (Uniqueness) ஒருவர் கைரேகையைப் போல் இன்னொருவர் கைரேகை இருப்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு செடி,கொடி, பறவைகள் உயிரினங்கள்- எல்லாமே மிக மிக அற்புதமாக படைக்கப் பட்டிருக்கின்றன. இதை எண்ணிப்பார்க்கும்போது ஒரு சிறந்த படைப்பே என்பதை எண்ணிப்பார்த்தால் ஒப்பிட்டு உருவாகும் தாழ்வு மனப்பான்மை ஓடிவிடும். என்னிடம் மறைந்திருக்கும் மாபெரும் ஆற்றலை தொடர் முயற்சியினால் வெளிப்படுத்தினால் மாபெரும் சாதனை புரிய முடியும் என்பதை உணர்ந்து தாழ்வு மனப்பான்மையை தகர்த்து எறிக.

“பெரியோரைப் பார்த்து
வியத்தலும் இலமே
சிறியோரைப் பார்த்து இகழ்தல்
அதனினும் இலமே”
-புறநானுறு

2. இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும், மதிப்பும், முக்கியத்துவமும், கொடுக்கும்போது, உறவுகள் இனிமையாகும்.

ஏனென்றால் எல்லா உயிர்களுக்கும் அடிப்படை உறவுத் தேவைகள்: (i) அன்பு (ii) மதிப்பு, முக்கியத்துவம், அங்கீகாரம் இவைகள் கிடைக்கும்பொழுது உள்ளங்கள் நிறைவு கொள்ளும். நிறைந்த உள்ளங்கள் நிறைவின் இனிமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தும்.

மனித உறவுத் தேவைகள் கிடைக்காத போது, உள்ளங்கள் பாதிக்கப்பட்டு – பாதிப்பினை வேறு வேறு ரூபத்தில் எளிப்படுத்தி – உறவுகளுக்குள் உரைசலை உருவாக்கும்.

ஆகவே நான், எனது என்ற விஷயங்களைப் பற்றி அதிகம் பேசாமல், உங்கள் நீங்கள், உங்களுடைய என்கிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும்போது – நம்மோடு உரையாடவும், உறவுகளைத் தொடரவும் மனிதர்கள் விரும்புவர்.

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்


புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்

எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம்.


நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி
பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்
ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது-

மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது மனிதனுடைய வலது மூளை சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கும். வலது மூளை கற்பனை சக்திக்கும், ஆக்க அறிவிற்கும் (Creativity) காரணமாக இருப்பதால், படிப்பதால் நன்மை விளைகிறது.

மேற்கண்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தால் எல்லாவற்றையும் காட்சியில் பார்த்துவிடுவதால் மூளைத் தூண்டலுக்கு அங்கு வாய்ப்பில்லை.

நல்ல நூல்களைப் படிப்பதால் விளையும் நன்மைகள்

1.திருவள்ளுவர் ‘வழுக்குகின்ற இடத்தில் ஒரு ஊன்றுகோலைப் போல சான்றோர் சொல் பயன்படும்’ என்று கூறுகிறார்.

2. இந்த உலகில் பல்வேறு வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது ‘ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப்போவதற்கு முன்பு ஏதேனும் ஒரு நல்ல நூலின் ஒரு பகுதியை படித்துவிட்டுத்தான் படுக்கச் செல்கிறேன்’ என்று கூறியுள்ளனர். இவ்வாறு படிக்கும் பழக்கம் பல புதிய விசயங்களை தெரிந்து கொள்ளவும் நமக்கு நானே மேலும் மேலும் தூண்டுதல் செய்து கொள்ளவும் பயன்படும்.

3. ஒரு அறிஞர் சொல்கிறார், “Life is a Learning Process”. அப்படிப் பார்க்கும்போது வாழ்க்கை முழுதும் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

4. ஜப்பானியரின் கைசன் என்னும் கொள்கை சொல்கிறது ‘தொடர்ச்சியாக வளர்ச்சியடைய வேண்டும்’ அதாவது அறிவில் – தொழிலில் வளர்ச்சியடைய மேலும் மேலும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும்.

5. நாம் சார்ந்திருக்கும் துறையில் என்னென்ன புதுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொண்டே இருக்கவேண்டும். அதன் எதிர்காலம் அதன் மார்க்கெட் நிலவரம், போட்டியாளர்களுடைய செயல்கள், அரசின் வணிகக் கொள்கைகள் என்பது பற்றியெல்லாம் விழிப்புணர்வு வர, செய்திகளைத் தெரிந்து கொண்டே இருக்கவேண்டும்.

6. மற்றவருடைய அனுபவங்களையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்கிற போது அவை வளர்ச்சிக்கு வழிகாட்டுபவையாக இருக்கும்.

7. மனித மனம் ஓர் நிலம். அந்த நிலத்தில் ஒன்றும் பயிர் செய்யவில்லையென்றால் புல்- பூண்டுகள் முளைத்து விடும். அந்த நிலத்தில் விதைகளை தொடர்ந்து தூவிக் கொண்டே இருக்க நல்ல நூல்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

8. நல்ல நூல்களைப் படித்த பின் அவற்றை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். சந்தித்து உரையாடும்போது பேச வேண்டிய விசயத்தை பேசி முடித்தப்பின் படித்த நூலில் உள்ள சிறப்பம்சத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த சந்திப்புக்கு பின் ‘உங்களுடைய சந்திப்பு பல நல்ல விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்து’ என்ற நல்ல உணர்வை அது நண்பரிடம் ஏற்படுத்தும்.

9. என்னுடைய பயிற்சியின் போது சில அன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் “நூல்கள் வாங்கிவிடுவேன் ஆனால் படிக்கத் தவணை செய்கிறேன். என்ன செய்வது?’

பதில்: ‘நூலை எடுத்து முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அமைதியாக பொறுமையாக உட்கார்ந்து படிக்க வேண்டும் அதற்கு இப்பொழுது நேரமில்லை’ என்று சிலர் தள்ளிப் போடுகின்றனர். அதற்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் பகுதியில் அதன் சுருக்கம் இருக்கும். அதைப் படியுங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடு போடப்பட்டோ அல்லது பெரிய எழுத்திலோ உள்ள முக்கிய வரிகளைப் படியுங்கள். நேரம் கிடைக்கும் போது முதலில் படித்த அத்தியாயத்தை படியுங்கள்.

ஹென்றி ஃபோர்டு சொல்லுவார், “எந்தப் பெரிய வேலையையும் பகுதி பகுதியாக பிரித்துச் செய்து விட்டால் வேலை எளிதில் முடியும்’

அடுத்து, படிக்கும்போது வேறு நினைவுகள் வந்து கவனம் சிதறினால் விரல் வைத்து படியுங்கள் பின் சிறிது சிறிதாக விரலை வேகமாகக் கொண்டு சென்று படியுங்கள். படித்து முடித்ததற்கு பிறகு வருகிற பயன்களை எண்ணிப் பார்த்து படியுங்கள்.

நிறைவுரை
பல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும். ஆக்க அறிவு (Creativity) மிகும். உரையாடும் போது மற்றவர்களால் மதிக்கப்படுவோம். எல்லோராலும் வேண்டப்பட்டோராக மாற முடியும்.

  நம் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்குத் தக்கபடி நூல்களை வாங்கி கொடுப்போம். வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் அமைப்போம்!


வாழ்த்துக்கள்!

என்றும் உங்க ஹாப்பி

மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்...



1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள் மனம் விட்டு

சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்

நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும். ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள்.

மிகவும்...

*மிகவும் கசப்பானது தனிமையே!

*மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே!

*மிகவும் துயரமானது மரணமே!

*மிகவும் அழகானது அன்புணர்வே!

*மிகவும் கொடுமையானது பழி வாங்குதலே!

*மிகவும் கவலை தருவது செய்நன்றி மறப்பதே!

*மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பே!

*மிகவும் வெறுமையானது இல்லையென்பதே!

*மிகவும் ரம்மியமானது நம்பிக்கையே!

தேவையான மூன்றுகள்?


இருக்க வேண்டிய மூன்று - தூய்மை, நீதி, நேர்மை.

ஆள வேண்டிய மூன்று - கோபம், நாக்கு, நடத்தை.

பெற வேண்டிய மூன்று - தைரியம், அன்பு, மென்மை.

கொடுக்க வேண்டிய மூன்று - இரப்போர்க்கு ஈதல், துன்புறுவோர்க்கு ஆறுதல், தகுதியானவர்க்குப் பாராட்டு.

அடைய வேண்டிய மூன்று - ஆன்ம சுத்தம், முனைவு, உள்ள மகிழ்வு.

தவிர்க்க வேண்டிய மூன்று - இன்னா செய்தல், முரட்டுத்தனம், நன்றியில்லாமை.

பரிந்துரைக்க வேண்டிய மூன்று - சிக்கனம், தொழிலூக்கம், நாணயம்.

நேசிக்க வேண்டிய மூன்று - அறிவு, கற்பு, மாசின்மை.

Tuesday, December 3, 2013

காட்சியும் அதன் கவிதையும்!



இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!
******************************
உன் சிரிப்பின் அர்த்தம் ...
புரியாமல் தனிமையில் ....
தவிர்க்கிறேன் .....!!!
இவன் என்னிடம் ...
ஏமார்ந்து விட்டானே ...?
என்று சிரிக்கிறாயா ...?
நான் உன்னிடம் காதல் ..
சொல்ல தாமதமாகியதற்கு ...
சிரிக்கிறாயா ...?
ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ...
நன்றாக தெரிகிறது ...!!!
இது காதல் அரும்பும்....
சிரிப்பல்ல ...!!!



நீங்கள் உணவு தந்தால் கூட
நாங்கள் சாப்பிடும் சக்தியை
இழந்து விட்டோம் ....!!!

அப்படியென்றால்
எதற்காக கைநீட்டுகிறாய்...?
என்று கேட்கிறீர்களா ...?

நீட்டி நீட்டியே எங்கள்
கைகள் தானாக நீண்டு
விட்டன ....!!!



செல்கிறோம்
வருத்தி வருத்தி
உழைக்க செல்கிறோம்
எதிர் பார்க்கையுடன்
செல்கிறோம் ....!!!

செல்லவதை மட்டுமே
சொல்கிறோம்
வருவதை மனிதநேயம்
தான் சொல்ல வேண்டும் ....!!!

நாங்கள் விடும் கண்ணீர்
கடல் அன்னைக்கும்
புரியாது கண்ணீரின்
சுவையும் உவர்ப்புத்தானே ....!!!



இந்தா பெண்ணே ...
இப்போது என்றாலும்
இதய கதவை திறந்து
கொள் ....!!!


சகோதரியே ...!!!
இந்தவயதில் இருந்து
சுற்றியல் பிடித்திட்டோமே
சுற்றியலைவிட
வண்மையாகிவிடும்
நம் கைகள் -எம்மை
வேலைக்கு அழைத்த
முதலாளி எதையுமே
பிடிக்காமல் எப்படி
இதயம் இரும்பாகியது ..?
அவருக்கு...?





கட்டிட கலையின்
அற்புத கலை நாங்கள்...!!!

கட்டப்பட்ட கட்டிடத்தை
ரசிப்பவர்களே ....!!!!

கற்களை இப்படி
அடுக்குவதும்
ஒரு கலைதான் ...!!!

மாயக்கண்கள்
எம்மை கூலியாக தான்
பார்க்கும் ....!!!



அழகையும்
சிரிப்பையும்
பார்க்கும்
உள்ளங்களே
ஆபத்தும் உண்டு ....!!!
மறந்து விடாதே ....!!!




தனிமையில் இருந்தேன்
தானாக வந்தாய்
காதல் கொண்டாய்
இப்போ
தனிமைப்படுத்தி
சென்று விட்டாய் ....!!!
இரு எண்ணத்துடன் ..
தனிமையாக
இருப்பதில் சுகம்
உண்டுதான் கண்ணே ....!!!




அன்புக்கு கட்டுப்பட்டால்
அது உனக்கொரு விலங்கு...!!!

ஆசைக்கு கட்டுப்பட்டால்
அதுவும் உனக்கு விலங்கு ....!!!

கோபப்பட்டால் தானாக வரும்
விலங்கு .....!!!

வாழ்க்கையில் ஒரு
விலங்கு வந்தே தீரும்
விலக்கிக்கொண்டவன்
ஞானி ....!!!




தயவு செய்து எம்
வீட்டை கலைக்காதீர்
அழகுக்காக எம் வீட்டை
அபகரிப்பவர்களே
உங்கள் செயலால்
அருகி வரும் இனத்தில்
நாங்களும்
ஒன்றாகி விட்டோம் ....!!!