Sunday, January 26, 2014

பேஸ்புக் அடுத்த 3 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி அடையும்..?



உலகத்தில் முன்றாவது மக்கள் தொகை கொண்ட நாடு பேஸ்புக் தான்! ஏற குறையே 80 கோடிகள் கொண்ட ஒரே இணைய தளம் பேஸ்புக் தான்!

 இன்று கூகுளேயே சீண்டி பார்க்கும் நிறுவனம் இது தான்!…மேலும் மொபைல் போன் இல்லாதவன் கூட பேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருக்கும் அளவுக்கு அதிவேக வளர்ச்சி அடைந்துள்ள பேஸ்புக் வலைத்தளமானது மக்களிடையே ஒரு தொற்று போல வேகமாக பரவி வருகிறது.

ஆன்னல் சமீபகால்மாக பேஸ்புக் மீதான ஆர்வத்தை மக்கள் மெதுவாக கை விட ஆரம்பித்திருக்கும் நிலையில், 2017ஆம் ஆண்டில் அது தன் பயனர்களை பெரும் அளவில் இழக்கும் என பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றைய சமுக வலைத்தளங்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியுடன் பேஸ்புக் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்த்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொள்ளை நோயைப் போல் பேஸ்புக் சமூக வலைத்தளமும் முடிவுக்கு வரும் என்று வாதிடுகின்றனர்.

பிப்ரவரி 4-ஆம் தேதி தனது 10-வது பிறந்த நாளை கொண்டாடும் பேஸ்புக் சமூக வலைத்தளமானது, மற்ற சமூக வலைதளங்களை விட அதிக நாட்கள் உபயோகிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த வளர்ச்சியானது குறையத் தொடங்கி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தனது 80 சதவீத பயனர்களை பேஸ்புக் இழக்கும் நிலை வரும் என்று பிரின்ஸ்டன் ஆராய்சியாளர்கள் கணித்துள்ளனர்.

ஒரே தினத்தில் பிறந்தநாளைக் கொண்டாடும் அபூர்வ சகோதரர்கள்…. நம்பமுடியாத ஆச்சரியம்..!



பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் காணப்பட்டால் அவர்களில் பிறந்தநானை நினைவில் வைப்பது என்பது சற்று கடினமே.

ஆனால் பிரித்தானியாவில் கும்பிறியாவில் கிளியேட்டர் மூர் எனும் இடத்தைச் சேர்ந்த பீற்றர் டன் (24) எமிலி சக்றுஹாம்(22) என்ற தம்பதிகளுக்கு அக்கவலையே இல்லை. ஏனென்றால் இவர்களுக்கு பிறந்த 4 குழந்தைகளுமே ஒரு திகதியில் தனது பிறந்த நாளைக் கொண்டுகின்றனர்.

இத்தம்பதிகளின் மூத்த மகனான சாம்(5), மற்றும் இரண்டாவதாக பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளான புரூக்(2) மற்றும் நிகோலி ஆகியோர் ஜனவரி மாதம் 12ஆம் திகதியே தமது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

இவர்களின் நான்காவது மகனான ரேயன் கடந்த 12ஆம் திகதி பிறந்துள்ளான். இவ்வாறு ஒரு தாய்க்கு பிறந்த 4 பிள்ளைகளும் ஒரே நாளில் பிறந்த நாளைக் கொண்டாடுவது 133225 பிறப்புகளுக்கு ஒரு பிறப்பு என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.

இந்தத் தம்பதிகளுள் இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் ஒரே தினத்தில் பிறக்க வேண்டும் என்பதற்கு முன்கூட்டியே எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரணத்திற்கு பின் நடப்பது என்ன..?



மரணத்திற்கு பின் நடப்பது என்ன..?: அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் சுவாரஸ்ய தகவல்

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார்.

மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல்களிலும் விரிவாக எழுதப்படவில்லை.

அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் கூறி இருப்பதாவது:-

சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைந்து வரும் போது நான் ஒரு செவிலியர் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சந்தித்தேன். டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்து நாற்காலியில் அமரும் அளவிற்கு குணம் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் திடீரென அவர் நினைவிழந்து விழுந்தார். அவரது உடல் குளிர்ந்தது. எனது எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லை. வெகுவேகமாக அவரது தோல் ஈரம் ஆனது, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது. அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. நான் உடனடியாக அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுத்தபின், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற செவிலியர்கள் உதவியுடன் அவரது படுக்கையில் அவரை கிடத்தினோம்.

மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மேலும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டாம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டாமிற்கு நினைவு திரும்பவில்லை.

பின்னர் நினைவு திரும்பிய டாம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்ட போது நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பயணம் சென்று வந்ததாக தெரிவித்தார். முதலில் படுக்கையில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிடந்ததைக் கண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியில்லாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார். அடுத்த நொடியே மருத்துவமனையின் அறையில் இருந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந்ததாக அவர் தெரிவித்தார்.

அங்கு ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார். டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவும் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவும் அங்கிருந்து என்னையும் மருத்துவரையும் கண்டதாகவும் கூறினார்.

அப்போது நான் லாலிபாப் வடிவிலான ஒரு கருவியைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக பின்னர் அவர் தெரிவித்தார். மேலும் அறையின் திரைச்சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

டாம் நினைவிழுந்து படுக்கையில் இருந்த அந்த தருணங்களில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொண்டு இருந்தேன். திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் பிசியோதெரபி மருத்துவரும் நின்றிருந்தனர். இவை அனைத்தும் நடந்தேரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்ப போக சொன்னதாகவும் அதன் பின் அவர் மிதந்து வந்து அவரது உடலுக்கு திரும்பியதாகவும் டாம் கூறினார்.

மேற்கண்ட இந்த அனுபவங்கள் உட்பட மேலும் பலரது மரண அனுபவங்களை செவிலியர் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.

ஸ்கைப்பில் பேச இனிமேல் தனி அக்கவுண்ட் தேவையில்லை.....




இன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவுவது ஸ்கைப் புரோகிராம்.

இதனைப் பயன்படுத்த, இந்த புரோகிராமில் நமக்கென ஒரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்தி, அதற்கான பாஸ்வேர்டையும் அமைக்க வேண்டும். இனி, இது போன்ற தனி அக்கவுண்ட் தேவையில்லை.

பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், ஸ்கைப் புரோகிராமில் நுழைந்து செயல்படலாம். அண்மையில், விண்டோஸ் 8 வெளியிடப்படும் சில நாட்களுக்கு முன்னர், ஸ்கைப் இதனை அறிவித்தது.

இதே போல மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வசதியையும் அளித்துள்ளது. இதனை ஸ்கைப் பதிப்பு 6 எனப் பெயரிட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

 இத்துடன், ஸ்கைப் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் லைவ் மெசஞ்சர், ஹாட்மெயில் மற்றும் அவுட்லுக் டாட் காம் ஆகிய தளங்களுடன் இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்பவும் இயலும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம், சென்ற ஆண்டில் 850 கோடி டாலர் கொடுத்து, ஸ்கைப் நிறுவனத்தினை வாங்கியது. அப்போது, தன் சாப்ட்வேர் தொகுப்புகளுடன், ஸ்கைப் புரோகிராமினை இணைந்து இயக்கும் வகையில் மாற்றி மேம்படுத்தப் போவதாக அறிவித்தது.

அதன் அடிப்படையில், தற்போதையே மேம்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதே நிகழ்வில், விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கான ஸ்கைப் பதிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது.

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள இயக்க முறைகளின் படியே, ஸ்கைப் தொகுப்பும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8 போல, மேலும் ஆறு மொழிகளில் கூடுதலான இயக்கத்தினையும் ஸ்கைப் தற்போது கொண்டுள்ளது.

மேக் சிஸ்டத்தினைப் பொறுத்த வரை,ஸ்கைப் தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் சேட் செய்திடும் வசதியினைத் தந்துள்ளது. மேலும் ஆப்பிள் தரும் ரெடினா டிஸ்பிளேயினையும் ஸ்கைப் சப்போர்ட் செய்கிறது.

அவசியமாகத் தேவைப்படும் இலவச புரோகிராம்கள்..!




புத்தம் புதிய பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி, வீடு அல்லது அலுவலகத்திற்குக் கொண்டு வந்து, ஆசையுடன் அதில் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைப் பதியத் தொடங்குகிறீர்களா! இது நமக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகவே இருக்கும். நாம் விரும்பும் புரோகிராம்களை அமைத்து இயக்கலாம்.

அது சமையலுக்கான குறிப்புகளைத் தரும் புரோகிராமாக இருக்கலாம். வங்கி கணக்குகளைப் பராமரிக்கும் திட்டமாகவும் இருக்கலாம். ஆனால், எல்லாருக்கும் பயன்தரும் வகையில் சில புரோகிராம்கள் உள்ளன. இவற்றை அனைவருமே தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அமைத்துக் கொள்வது நல்லது. அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்ற நிலையில், நிச்சயமாய் கம்ப்யூட்டரில் இடம் பெற வேண்டும். அவற்றை இங்கு காணலாம்.

1. பிரவுசர்:

சாப்ட்வேர் புரோகிராம்களை அமைத்திட, இணையத்தை நாட வேண்டி வரலாம். அதற்கு உங்களுக்குத் தேவை ஒரு பிரவுசர். விண்டோஸ் தொகுப்புடன் வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இதில் உங்களுக்கு உதவலாம். இல்லை, நான் ஏற்கனவே பழகிய ஷூ தான் என் காலுக்குச் சரியாக இருக்கும் என்று எண்ணுபவராக நீங்கள் இருந்தால், உங்களுக்குப் பிடித்தமான பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரை அமைத்து இயக்குங்கள்.

2. ஆண்ட்டி வைரஸ்:


 இணையத்துடன் தொடர்பு கொள்வதாக இருந்தாலும், யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றை இணைத்து பைல் பரிமாறிக் கொள்வதாக இருந்தாலும், உங்களுக்குத் தேவை மால்வேர்களையும் வைரஸ்களையும் கண்டறிந்து எச்சரித்து பாதுகாக்கும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளாகும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Windows Defender என்னும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர், மாறா நிலையில் தானாகவே பதிந்து கொண்டு, உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும்.

ஆனால், இது வைரஸ்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதில் அவ்வளவு சிறப்பாகச் செயல்படவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டு. எனவே, மூன்றாவது நிலை நிறுவனங்களின் இலவச ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளை, இறக்கிப் பதிந்து அப்டேட் செய்து கொள்ளுங்கள். இந்த வகையில், இலவசமாகக் கிடைக்கும் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சிறப்பான வகையில் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. Avast Antivirus Free புரோகிராமும் இதே போல செயல்படுகிறது. எனவே இதனையும் பயன்படுத்தலாம். இதே போல, மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினைத் தருவதாக, Malwarebytes AntiMalware Free என்ற புரோகிராம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புரோகிராம், புதிய மால்வேர்கள் இயங்கியத் தொடங்கிய முதல் நாளே அதனைக் கண்டறிந்து தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பொதுவாக, ஆண்ட்டி வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களில் ஒரு புரோகிராம் மட்டுமே முழுமையான பாதுகாப்பினைத் தராது. ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இயக்கக் கூடாது. எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களைப் பதிந்து வைத்து, ஒன்றை நிறுத்தி இன்னொன்றை இயக்கி நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கலாம். இவற்றைப் பெற avast.en.softonic.com/download?// free.avg.com/inen/download என்ற முகவரிகளில் உள்ள இணைய தளங்களை நாடவும்.

3. தேவையற்ற சாப்ட்வேர் நீக்கி (PC Decrapifier):

 நம் பெர்சனல் கம்ப்யூட்டரை நமக்கு விற்பனை செய்திடும் நிறுவனம், நமக்கு உதவுவதாகக் கூறி, பல புரோகிராம்களை, தேவை இல்லாமலேயே பதிந்து அனுப்பும். இவற்றை bloatware என அழைக்கின்றனர். இவற்றை நாம் எப்படி அறிந்து நீக்குவது? இதனை அறிந்து நமக்குப் பட்டியலிட, நமக்குக் கிடைக்கும் புரோகிராம் PC Decrapifier. இந்த சிறிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கினால், நம் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற புரோகிராம்கள் அனைத்தையும் பட்டியலிடும். பின்னர், நாமாக, தேவையற்றதை நீக்கிவிடலாம்.

4. வழி திறக்கும் Unlocker:

 புரோகிராம் ஒன்றை தேவையற்றது எனக் கருதி, அதனை அன் இன்ஸ்டால் செய்திட முயன்றால், நீக்கிட முயற்சி எடுத்தால், விண்டோஸ், இதற்கு ""உனக்கு அனுமதி இல்லை, புரோகிராம் பயன்பாட்டில் உள்ளது'' என நமக்குத் தடை போடலாம். அந்நிலையில் என்ன செய்வது? இந்த வகையில் உதவிட நமக்குக் கிடைக்கும் புரோகிராம் Unlocker.. இதனை இயக்கினால், மறுக்கும் புரோகிராமினை வெட்டிச் சாய்க்கும் வகையில் உங்கள் முன் நிறுத்தும். பின் எளிதாக நீக்கிவிடலாம். இதனைப் பெற pcdecrapifier.com/download என்ற இணைய தளம் செல்லவும்.

5. மீட்டெடுக்கும் ரெகுவா (Recuva):

சில வேளைகளில் நமக்குத் தேவைப்படும் பைல்கள் அல்லது புரோகிராம்களை, அவசரப்பட்டு நீக்கிவிடுவோம். அதன் பின்னர், கைகளைப் பிசைந்து கொண்டு கம்ப்யூட்டர் ஸ்கிரீனை முறைப்போம். இந்தச் சூழ்நிலையில் நமக்கு உதவும் புரோகிராம் ரெகுவா. அழித்த பைல்களை மீட்டெடுக்கும் புரோகிராம். இதனை இயக்கினால், அழித்த புரோகிராம்களில் எவற்றை மீட்டெடுக்கலாம் எனப் பட்டியல் தந்து நம் விருப்பப்படி அவற்றை மீட்டுத் தரும். ஆனால், "file shredder” போன்ற டூல்களால், பைல்கள் அழிக்கப்பட்டிருந்தால், ரெகுவா மீட்டெடுக்காது. Piriform நிறுவனம் இதனை இலவசமாக வழங்குகிறது. இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் recuva.en.softonic.com

6. சிகிளீனர் (CCleaner):


 Piriform நிறுவனம் வழங்கும் இன்னொரு இணையற்ற உதவிடும் புரோகிராம் சிகிளீனர். நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் சேரும் குப்பைகளை நீக்கி, மிக அழகாக வைத்திடும் புரோகிராம். தற்காலிக பைல்கள், தேவையற்ற குக்கீகள், ஹிஸ்டரி பைல்கள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் குறியீடு வரிகள் என அனைத்தையும் நீக்கும். புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வதிலும் இது உதவும். எந்தவிதமான மிச்சம் மீதி துணை பைல்கள் எதுவும் தங்கவிடாமல், புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடும். இதுவும் இலவசமே. கூடுதல் வசதிகளுடன் கூடிய சிகிளீனர், புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெறலாம். இந்த புரோகிராமினை http://www.piriform.com/ என்ற இணைய தளம் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

7. சாப்ட்வேர் இன்ஸ்பெக்டர் (Secunia PSI Personal Software Inspector):

எந்த காவல் துறை புரோகிராம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் பயன்படுத்தும் பயன்பாட்டு சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்தும், அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு இயக்கப்பட வேண்டும். இல்லையேல், இடையே கிடைக்கும் இடைவெளியில், மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம்கள் புகுந்து, உங்கள் கம்ப்யூட்டரை உங்கள் கட்டுப்பாட்டிலிருந்து கொண்டு சென்றுவிடும். உங்களின் புரோகிராம்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகின்றனவா என்ற கண்காணிப்பை மேற்கொள்ளும் பணியினை செகுனியா பி.எஸ்.ஐ. புரோகிராம் மேற்கொள்கிறது. இது கம்ப்யூட்டர் இயங்கும்போது, அமைதியாக பின்னணியில் இயங்கும். உங்கள் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான பேட்ச் பைல்களைப் பெற்று, அவற்றை அப்டேட் செய்திடும். இயலவில்லை என்றால், இது போல பேட்ச் பைல் உள்ளது, நீங்களாக அப்டேட் செய்திடுங்கள் என்று எச்சரிக்கை செய்தி தரும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை என்றைக்கும் அப்டேட்டாக வைத்திருக்க இந்த இன்ஸ்பெக்டர் உதவும். secunia.com/products/consumer/ psi/? என்ற தளம் சென்றால், இதனைப் பெறலாம்.

காமராசர் - வாழ்க்கை வரலாறு



காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநிலம் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொடக்ககால வாழ்க்கை

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.

தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார்.

சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

சிறை வாழ்க்கையும் படிப்பும்

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.

ராசாசியி தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசு கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடு அவர்களின் வாத திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார்.

 1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார்.

அரசியல் குரு

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் தன் பணியைத் தொடங்கினார்.

தமிழக அரசியல்

தமிழக ஆட்சிப் பொறுப்பு

1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)

குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.

ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி.
அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், - சா. கணேசன், - இராஜாஜி - பாகனேரி பில்லப்பா, - காமராசர், - ரா. கிருஷ்ணசாமி நாயுடு

அமைச்சரவை

காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:

மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.

அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)

அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.

முதலமைச்சராக ஆற்றிய பணிகள்


ராசாசி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.

காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:

  •     பாரத மிகு மின் நிறுவனம்
  •     நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
  •     மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய              பெயர் CPCL)
  •     இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
  •     நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
  •     கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
  •     மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.

அகிலஇந்திய காங்கிரசு தலைமை

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு.

 இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் சவகர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாசுதிரி அவர்களை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.

இறுதிக் காலம்

காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார்.

தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.

அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

நினைவுச் சின்னங்கள்

தமிழ்நாடு அரசு காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவருக்கு பெருந்தலைவர் காமராசர் நினவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள்


2004-ஆம் ஆண்டு காமராசு என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

காமராசர் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்

    “தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராசு, காமராசு மகாபுருசர்.”-காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி

    "திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராசர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். -நேரு

    “சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?" -பெரியார்.

    “காமராசு தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.” -இந்திரா காந்தி

    "சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராசை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்." -சிதம்பரம் சுப்ரமண்யம்

    "காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- ம. கோ. இராமச்சந்திரன்

    "தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."- கருணாநிதி

    "காமராசர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், சுதந்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.

இந்திய தபால் துறை நாடு முழுவதும் ஏ.டி.எம். மையங்களை அமைக்கிறது..!



இந்தியா முழுவதும் 3,000 ஏ.டி.எம். மையங்களையும், 1.35 லட்சம் மைக்ரோ ஏ.டி.எம். மையங்களையும் அமைக்க இந்தியா தபால் துறை முடிவு செய்துள்ளதையடுத்து பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது.தபால் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஏ.டி.எம் மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுமார் 1,54,700 அலுவலகங்களை கொண்டுள்ள இந்திய தபால் துறை உலகிலேயே மிகப் பெரியது. 2012, மார்ச் மாத நிலவரப்படி, 24,969 நிர்வாக அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இவை ரூ.1,877 கோடி செலவில் வங்கி கிளைகளாக மேம்படுத்தப்பட இருக்கிறது.இந்த இந்திய தபால் துறையில் தபால் சேவை மட்டும் இன்றி சிறு சேமிப்பு, தங்கம் விற்பனை, இட்டுவைப்பு பத்திரம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உள்ளன.

இதற்கிடையில் தலைமை தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தேவைக்கு அலுவலகத்திலிருந்து பணம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க இந்தியா முழுவதும் தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம். சேவை வசதியை ஏற்படுத்த மத்திய தகவல் தொலைத் தொடர்புத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.4500 கோடி நிதியையும் ஒதுக்கி உள்ளதால் தலைமை தபால் அலுவலகங்களில் ஏ.டி.எம். சேவை திட்டத்தை தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதத்திற்குள் இந்தியா முழுவதும் தலைமை தபால் நிலையங்களிலும் ஏ.டி.எம். சேவை வசதி தொடங்குப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

”ரஜினி இதுவரை வாழ்த்து சொல்லவில்லை” – கமல்ஹாசன்



பத்ம பூஷண் விருது கிடைத்ததிற்கு ரஜினி வாழ்த்து இதுவரைக்கு சொல்லல. இனிமேதான் சொல்லுவார். எல்லாரும் சொல்லி முடிச்ச உடனே நிதானமாக சொல்லுவார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்கு நான் சொல்லும் வாழ்த்தும் அப்படிப்பட்டதுதான்.” என்று பத்ம பூஷண் விருது பெறுவதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது,””நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்ம பூஷண் பட்டியலில் இடம்பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்தப் பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும். இனிமேல் நான் போகவேண்டிய தூரத்திற்கான ஊக்கியாக, இந்த விருதை நான் எடுத்துக் கொள்கிறேன். இந்தப் பெருமைக்கு தகுதியுள்ளவனாக நான் என்னையாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.”


பாரத ரத்னா விருது எப்போது வாங்கப் போகிறீர்கள்..?

“நான் எப்போதுமே மெதுவாகத்தான் போவேன். பள்ளிப் படிப்பில்கூட அப்படித்தான். இந்த நாட்டில் மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் முதன்மையானது. அதற்குப் பிறகுதான் விருதுகள். நீங்கள் சொல்வது போன்று அதுதான் அடுத்த கட்டம் என்று நினைத்தால், அதுவும் சாத்தியம்தான்.”

கிரிக்கெட்டில் 25 ஆண்டுகள் சாதனைபடைத்த சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கியுள்ளார்கள். ஆனால், நீங்கள் 50 ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்துக் கொண்டு இருக்கிறீர்களே. உங்களுக்கு கிடைக்காதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“கண்டிப்பாக எதுவும் நினைக்கவில்லை. சுதந்திரப் போராட்டம் மாதிரிதான். கிடைத்தாலும் சரி, மறந்தாலும் சரி எனக்கு ஒ.கே தான். இருப்பதற்கும், பணி செய்வதற்கு தகுதியுடையவனாக இருப்பதே பெரிய பட்டம்.”

பத்ம பூஷண் விருது கிடைத்ததிற்கு ரஜினி வாழ்த்து கூறினாரா..?


“இதுவரைக்கு சொல்லல. இனிமேதான் சொல்லுவார். எல்லாரும் சொல்லி முடிச்ச உடனே நிதானமாக சொல்லுவார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்கு நான் சொல்லும் வாழ்த்தும் அப்படிப்பட்டதுதான்.”

இவ்விருதை யாருக்கு சமர்பிக்க விரும்புகிறீர்கள்..?

“எனக்கு கற்றுக் கொடுத்தவர்களுக்கு, குடும்பத்திற்கு இந்த விருதை நான் சமர்ப்பிகிறேன். சம்பளம் வாங்கிக்கொண்டும், சம்பளம் கொடுத்தும் கற்றுக்கொடுத்தவர்கள் அனைவருக்குமே இந்த விருதை சமர்ப்பிகிறேன். சண்முகம் அண்ணாச்சியும், பாலசந்தர் அவர்களும் இதில் முதன்மையானவர்கள். அது மறக்க முடியாத நன்றிக்கடன். தீர்க்க முடியாத கடன். எனக்கு இகழ்வுகள் ஏற்படும் போது மட்டுமே, அது என்னுடையதாகிறது. எனக்கு புகழ் வரும் போது எல்லாம் எனக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள்.”

ஆஸ்கர் விருது எப்போது..?


“இந்த ஊர்ல வியாபாரம் பண்றவங்களுக்கு ஐ.எஸ்.ஐ தான் முக்கியம், யு.எஸ்.ஐ எதற்கு? அந்த ஊர்ல வேலை செய்யும்போது யு.எஸ்.ஐ பார்த்துக் கொள்ளலாம். அந்த ஊருக்கு வியாபாரத்திற்கு போகும்போது கண்டிப்பாக அது பெரிய பெயராக இருக்கும். அவங்களுக்கும், எனக்கும் தேவைப்பட்டால் போவேன்.”

எப்போதுதான் மனநிறைவு பெறுவீர்கள்..?

“நிறைவு என்பதே எனக்கு கிடையாது. எனக்கு பசி மாதிரிதான். இன்றைக்கு நிறையுற மாதிரியிருக்கும், நாளைக்கு பசிக்கும். என்னோட தேடல் எல்லாம் பசி. சினிமா நுட்பம் அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் காலத்தில் ‘போதும்’ என்றால் எப்படி?”

இந்தத் தருணத்தில் உங்களது ரசிகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது..?


“இந்த விருது, இனிமேல் நான் செய்யப் போகும் வேலைக்கான பாராட்டு. வேலை செய்ததிற்கான பாராட்டு என்று நீங்களும் நினைக்க கூடாது, நானும் நினைக்கவில்லை. என்னை ஊன்றுக்கோளாக வைத்து அவர்கள் உயர்வதற்கும் நான் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றேன். அவர்கள் பொதுப்பணி செய்வதற்கும் நான் ஒரு ஊக்கியாக இருக்கிறேன். எனக்குக் கிடைக்கும் ஊக்கம் எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும் ஊக்கமாகத்தான் பார்க்கிறேன்.”

கடந்தாண்டு இதே நேரத்தில் விஸ்வரூபம் பிரச்சினை. இந்தாண்டு பத்ம பூஷண் விருது. அதற்கான மருந்தாக நினைக்கிறீர்களா?

“அப்படி நான் எடுத்துக் கொண்டால் அது கொடுக்கல் வாங்கலாகிடும். அது அல்ல என்று நான் நினைக்கிறேன்.”

விஸ்வரூபம் தடை செய்யப்பட்டபோது இதே இடத்தில் தான் பேசினீர்கள். விருதுக் கிடைத்தவுடனும் இதே இடத்தில் தான் பேசுகிறீர்கள். உங்களது மனநிலை இப்போது எப்படியிருக்கிறது?

“ஒரே மனநிலைதான். இதே இடத்துலதான் நான் சின்ன பிள்ளையா நடிகனா வருவேனா மாட்டேனா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதே இடத்துலதான் பாலசந்தர் சார் கூப்பிடுறாருன்னு சொன்னப்போது இங்க உட்காந்துதான் யோசிச்சிட்டு இருந்தேன். பல விஷயங்கள் இந்த இடத்துல நடந்துருக்கு. ஒரு பக்குவான மனநிலைக்கு என்னை கொண்டு வந்துவிட்டார்கள். எனக்கு எல்லாமே படிக்கட்டுதான்.”

நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது..?

“ஒரு படத்தைப் பற்றி தனியாக கூற முடியாது. சிவாஜி சாரை எடுத்துக் கொண்டால் ஒரு படத்தைப் பற்றி கூற முடியாது. கப்பலோட்டிய தமிழன், பராசக்தி, பாசமலர் இப்படி எல்லாமே சேர்ந்துதான் சிவாஜி சார் படங்கள் பற்றி பேசும்போது வரும். நான் ஒரு படம் முடிச்சுட்டு அடுத்த படம் போகும் போது எனக்கு அதுதான் முக்கியமான படமாக தோன்றும். வாழ்க்கையின் முக்கியமான படமாகவும் மாறிவிடும்.”

மருதநாயகம் பணிகள் எப்போது தொடங்க இருக்கிறீர்கள்..?


மருதநாயகம் செய்யணும். காசு கொடுங்க பண்ணிடுறேன்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா..?

“எல்லாருமே அரசியல்வாதிகள்தான். 5 வருஷத்திற்கு ஒரு தடவை கைல கறையை போட்டுக் கொள்கிறோம். விரல்ல வைக்குற அந்தக் கறை போதும் கைப்பூறம் எதற்கு.”

இன்று 65-வது குடியரசு தினம். இதையொட்டி நீங்கள் சொல்லும் செய்தி..?

“இதுவரைக்கும் அடையவில்லை என்பதற்கான எல்லாச் சான்றும் இருக்கிறது. அடைந்து விட்டோம் என்பதற்கான அடையாளங்களும் இருக்கிறது. மேலை நாடுகளில் எல்லாம் சாய்ச்சுக்கிட்டு வந்துட்டோம்னு சொல்றாங்களே அது இன்னும் இந்தியாவில் அடையவில்லை. இன்னும் பிளவுகள், சாதி ஒழிந்த பாடில்லை. அப்படியிருக்கும் போது நாம் எப்படி பெருமைப்பட்டு கொண்டிருக்க முடியும்..?

பாரதியார் பாடின பாப்பாக்களுக்கு எல்லாம் கொள்ளுப் பேத்திகள் பிறந்து விட்டார்கள். ஆனால் இன்னும் அந்த சாதியை விட்டபாடில்லை. சாதிக்காக இன்னும் ரத்தம் சிந்திக்கொண்டே இருக்கின்றோம். இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கிறது. 65 ஆண்டுகள் எல்லாம் வேண்டாம். 6.5 என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.”

உங்களோடு இணைந்து கவிஞர் வைரமுத்துவும் விருது வாங்க இருக்கிறாரே. பேசினீர்களா..?

“நேற்றே அவருக்கிட்ட சொல்லிட்டேன். அவருக்கு கிடைக்கும் எல்லா புகழும் எனக்கு கிடைத்த மாதிரி. ஞான பீடம் விருது மாதிரி என்ன விருது வாங்கினாலும், எனக்கு கிடைத்த சந்தோஷம் வருகிறது. அவ்வளவு நெருங்கிய நட்பு எங்களுடையது. நிறைய விஷயங்கள் அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்வதும், என்னை பல விஷயங்களுக்காக அவர் தனிமையில் வந்து பாராட்டுவதும் இப்படி பல நிகழ்வுகள் எங்களுக்குள் நடந்திருக்கின்றன. பெரிய சந்தோஷம் என்னென்னா, அவருடன் சேர்ந்து விருது வாங்க போறேன் என்பது தான்.”

விஸ்வரூபம் 2 படப் பணிகள் எந்தளவில் இருக்கிறது..?

“வேலைகள் முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் இசை, கிராபிக்ஸ் பணிகள் இருக்கிறது.”

சுயசரிதை எழுதும் எண்ணம் இருக்கிறதா..?


“நான் சுயசரிதை என்ற விஷயத்திற்கு எதிரானவன். பேட்டிகள் என்றால் ஆர்வத்தோடு இருப்பேன். நிறைய சுயசரிதைகள் பொய்யானவை தான். சுயசரிதையை எழுத மாட்டேன். நிஜம் பேசணும். நிஜம் பேசணும் அப்படிங்கிற வீராப்புல பல பேரை புண்படுத்திற கூடாது. என்னைப் பற்றி எல்லா விஷயங்களையும் சொல்லிட முடியுமானு எனக்கு தெரியல. பேட்டி வேண்டுமானால் கொடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு என் மீதிருக்கும் எல்லா சந்தேகங்களும் அப்படியே இருக்கட்டும், அமையட்டும்.”

பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பணி வாய்ப்புகள்..!


பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Attendant, Office Asst, Counsellor & Faculty பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 09

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

01. Member of faculty – 03

02. Office Assistant – 03

03. Attendant – 02

04. Counsellor (F.L.C.)- 01


வயது வரம்பு:

01 . Counsellor (F.L.C.) பணிக்கு 65க்குள் இருக்க வேண்டும்..

02 . மற்ற அனைத்து பணிகளுக்கும் 30க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வி தகுதி:

01.Member of Faculty பணிக்கு MSW/M.A. in Rural Development/ M.A.in Sociology/ Psychology/ B.Sc. (Ag.)/ B.A. with B.Ed. கற்பிக்கும் திறனுடன் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

02. Office Attendant பணிக்கு BSW/ BA/ B.Com) ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

03. Attendant பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

04. Counsellor பணிக்கு வங்கி துறையின் கிராமப்புற கிளைகளில் கடன் துறை வங்கி அதிகாரியாக பணியாற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 


நேர்முக செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Bokaro Zonal Office, E-17,

First floor, City Centre,

Sector – 4, B.S. City, Bokaro,

Pin – 827004 (Jharkhand)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30-01-2014

நேர்காணல் நடைபெறும் தேதி: 08-02-2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.bankofindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

'' ஐ '' படத்தில் வில்லன் யார் தெரியுமா..?



சினிமாவை அதிகம் எட்டி பார்க்காத பிரபல நடிகரின் மகன் ஐ படத்தில் வில்லன்:-

விக்ரமை வைத்து ‘ஐ’ என்ற பெயரில் ஷங்கர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.  மிகுந்த பிரம்மாண்ட பொருட் செலவில் எடுத்து வரும் இந்த படத்தில் சுரேஷ் கோபி, உப்பன் படேல் மற்றும் சினிமவை வெகு காலம் எட்டி பார்க்காத நடிகர் திலகத்தின் முத்த மகனான ராம்குமார் இன்னொரு முக்கிய வில்லனாக வலம் வருகிறார்.

இவர்களில் மூவரில் ராம்குமார்க்கு நடிப்பு அனுபவம் அதிகம் இல்லாதவர். பலவருடங்களுக்கு முன்பு அறுவடை நாள் என்ற படத்தில் தான் இவருடைய முதல் அறிமுகம், அதற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அப்பாவுக்கு துணையாகவும் மற்றும் சிவாஜி புரோடக்க்ஷன்க்கு முக்கிய பொறுப்பாளர் பணியாற்றி வந்தார்.

ஷங்கர் அவர்கள் இது வரை காணாத ஒரு முகம் இந்த வில்லன் கதாபத்திரத்துக்கு வேண்டும் என யோசித்து வர சமிபத்தில் ராம்குமார் அவர்களை  ஒரு நிகழ்ச்சியில் பார்த்து இவர் கரெக்ட்டாக இருப்பர் என முடிவு செய்து இப்பொழுது நடித்தும் கொண்டு இருக்கிறார்.

சிவாஜி கணேசன் மகன் என்ற ஒரே காரணத்துக்காக புதுமுக நடிகர் போல் நடத்தாமல் இவருக்கு ஏக உபசரிப்பாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிபெறவில்லையா..?



கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு குடியரசு தினத்தில் வெளியான திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ”ஏக் தீவானா தா” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு மற்றும் திரிசா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழில் இப்படம் பெரும்வெற்றியடைந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் இணைந்தது.

தமிழில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் இப்படத்தினை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது.

தமிழில் இப்படம் வெற்றியடைந்திருந்த போதிலும், இதன் ஹிந்தி ரீமேக்கான “ஏக் தீவானா தா” திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வியைச்
சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரதிக் பாபர் மற்றும் எமி ஜேக்சன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கின் மூலம் கிடைத்த வருமானத்தைத் தன்னுடன் கௌதம் வாசுதேவ் மேனன் பங்கிட்டுக் கொள்ளாததால் அவரைக் கைது செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் ஆர்.ஜெயராமன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், கௌதம் வாசுதேவ் மேனனை கைது செய்யக்கோரும் இவ்வழக்கினை வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி வரை இடைக்காலத் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக நாயகன் கமல்ஹாசன் பதம் விபூசன் விருதினைப் பெறவுள்ளார்..!



உலக நாயகன் பதம்ஸ்ரீ கமல்ஹாசன் இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதுகளில் ஒன்றான பதம் விபூசன் விருதினைப் பெறவுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறந்த பங்களிப்புகளைச் செய்தவர்களைப் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவினை ஒட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இவ்வாண்டிற்கான பத்மபூசன் மற்றும் பத்ம விபூசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை பத்ம விருதுகளைப் பெறுவோர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் உயரிய விருதுகளில் இரண்டாவதாக மதிக்கப்படும் பதம் விபூசன் விருதினை உலக நாயகன் கமல்ஹாசன் பெறவுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 1990 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. பதம்ஸ்ரீ விருதுகள் இந்திய அரசின் உயரிய விருதுகளில் மூன்றாவது இடத்தையும், பத்ம விபூசன் விருதுகள் இரண்டாவது இடத்தையும், பாரத ரத்னா முதல் இடத்தையும் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க சூப்பரான 25 வழிகள்..!



இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும்.

மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான்.

சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ்கூறிய எளிய வலியில்லா வழிமுறைகளை பின்பற்றுங்கள்.


  • தினமும் காலை உணவை உண்ணுங்கள்:-
காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும்.
  • உணவை நன்றாக மென்று உண்ணுங்கள்:-
சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள்.
  • அதிகமாக தூங்கி எடையை குறையுங்கள்:-
தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம்.
  • அதிக அளவில் காய்கறிகளை உண்ணுங்கள்:-
ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும். அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.
  • சூப் உள்ளே வரும் போது, உடல் எடை வெளியேறும்:-
ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும். 

  • அளவு சிறியதாக உள்ள பழைய ஆடைகளின் மீது பார்வையை பதியுங்கள்:-
 உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும் படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம்.

  • பிட்சா உண்டாலும் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:-
பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள். இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும்.
  • சர்க்கரை பயன்பாட்டை குறைக்கவும்:-
சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம்.
  • நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்:-
குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள். இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜூஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம்.

  • மதுபானம் குடிப்பதை குறைக்கவும்:
மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும்.
  • க்ரீன் டீ பருகுங்கள்:-
தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும்.
  • யோகாவை தேர்ந்தெடுங்கள்:-
யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள். ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.
  • வீட்டில் உண்ணுங்கள்:-
வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

  • உண்ணும் போது சிறிய இடைவேளை தேவை:-
சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள். இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள்.
  • வீரியமிக்க புதினா சூயிங் கம்மை மெல்லுங்கள்:-
நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும். அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள்.
  • உணவு தட்டின் அளவை குறைக்கவும்:-
உணவு தட்டை 12 இன்ச்-க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.
  • உண்ணும் அளவை சற்று குறைக்கவும்:-
வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.
  • உணவை அதிகமாக சமைக்காதீர்கள்:-
உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள். அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும்.
  • உணவிற்கு முன் பழங்கள்:-
உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

  • தக்காளி சாஸை பயன்படுத்துங்கள்:-
கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.
  • மாமிசத்தை குறைக்கவும்:
அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.
  • 100 கலோரிகளை எரிக்கவும்:-
தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்: 20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல்.
  • இரவு 8 மணிக்கு மேல் உண்ணாதீர்கள்:-
இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள். அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.
  • உணவு ஏடு தயார் செய்துக் கொள்ளுங்கள்:-
தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு. அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும்.
  • கொண்டாட்டம்:-
சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.

மீண்டும் இணைகிறதா வருத்தப்படாத வாலிபர் சங்கம் கூட்டணி..!



கடந்த ஆண்டின் ப்ளாக் பஸ்டர் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குனர் பொன்ராம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில்
மீண்டும் ஒரு படம் தயாராகலாம் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் எம்.ராஜேஷின் முன்னாள் உதவி இயக்குனரான பொன்ராம் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்
திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அறிமுகப்படமே ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது. சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்த திரைப்படங்களில் இப்படமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் அறிமுகமான நாயகியான ஸ்ரீதிவ்யா தற்பொழுது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாகப் பரிணமித்துவருகிறார்.

திருப்பதி பிரதர்ஸ் என்.லிங்குசாமி தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குனர் பொன்ராம் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில்
ஒரு படம் தயாரிக்கப்படலாம் என்று கூறப்பட்டுவருகிறது. விரைவில் இப்படத்தினைப் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

சிவகார்த்திகேயன் தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் திரைக்கதையில், திருக்குமரன் இயக்கிவரும் மான்கராத்தே திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

அஜீத்தை வைத்து இயக்கவில்லை.. அடுத்த பட ஹீரோக்கள் ஆர்யா - கிருஷ்ணா..!



எனது அடுத்த படம் அஜீத்துடன் இல்லை.. ஆர்யாவையும் கிருஷ்ணாவையும் வைத்து இயக்குகிறேன், என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

 ரஜினியின் பில்லா பட ரீமேக்கில் அஜீத்தை வைத்து இயக்கி வெற்றி கண்டார் விஷ்ணுவர்தன். பின்னர் ஆரம்பம் படத்தில் இருவரும் இணைந்தனர். இந்தப் படமும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மூன்றாவதாக அஜீத்தை வைத்து விஷ்ணுவர்தன் சொந்தமாக படம் தயாரித்து இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது.

இதனை மறுத்துள்ளார் விஷ்ணுவர்தன். இதுகுறித்து அவர் கூறுகையில், "விஷ்ண்வர்தன் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை புதிதாக ஆரம்பித்துள்ளது உண்மைதான்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ஆர்யா மற்றும் கிருஷ்ணா நடிக்கிறார்கள். அஜீத்தை வைத்து இப்போது இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. எதிர்காலம் எப்படியோ.. பார்க்கலாம்,' என்றார்

அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்தும்...! சம்பளத்தை ஏற்றாத விஜய் சேதுபதி..!



சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தாலும் தனது சம்பளத்தை இன்னும் உயர்த்தாமல் உள்ளாராம் விஜய் சேதுபதி.

 தென்மேற்குப் பருவக்காற்று படம் மூலம் அறிமுகமானவர் விஜய் சேதுபதி. முதல் படத்திலேயே மிகப் பெரிய பாராட்டு கிடைத்தது. அதற்கு முன் சில படங்களில் துணை நடிகராக நடித்து போராடித்தான் ஹீரோவானார்.

அடுத்து சுந்தர பாண்டியன் படத்தில் நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து வெளியான பீட்சாவில் அவர் ஹீரோ. படம் பிரமாத வெற்றி. அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய லாபம் பார்த்தன. இந்த நேரத்தில் அவர் சம்பளம் ரூ 2.5 கோடி என்று கூறப்படுகிறது.

 பொதுவாக இத்தனை வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுக்கும் ஹீரோக்கள் சம்பளத்தை கணிசமாக ஏற்றிவிடுவார்கள். ஆனால் விஜய்சேதுபதி அமைதியாக அதே சம்பளம்தான் வாங்குகிறாராம்.

 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அந்தப் படம் நன்றாகவே ஓடி லாபம் சம்பாதித்தது. அடுத்து விஜய் சேதுபதியின் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் வெளியாக உள்ளன.

 இந்தப் படங்கள் வந்த பிறகே, தனது சம்பளத்தை உயர்த்தப் போகிறாராம் விஜய் சேதுபதி.