Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Monday, January 27, 2014

எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?

எப்படி  சாப்பிட வேண்டும் தெரியுமா..?

உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை நாம் ஏற்றுக் கொண்டிருந்தாலும்கூட, "உணவே மருந்து" என்ற விஷயம் நமது உணவு முறையில் ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது. இன்றைக்கு ஒரு சளியோ, காய்ச்சலோ வந்தால் உடனடியாக டாக்டரைத் தேடி ஓடுகிறோம் அல்லது அலோபதி மருந்துகளைச் சாப்பிடுகிறோம். அந்தக் காலத்தில் நமது வீட்டுப் பெரியவர்களோ மருந்துக்குப் பதிலாக உணவு மூலமாகவும், வீட்டு மருத்துவம் மூலமாகவும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டனர்.

அப்படிக் காலங்காலமாக தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள், நமது மிகப் பெரிய பொக்கிஷம். அப்படிப்பட்ட ஆரோக்கிய உணவு முறைகளைப் பற்றி மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்:

வீட்டில் எந்த விசேஷமானாலும் சரி, முக்கியப் பண்டிகை, திருவிழா என்றாலும் வாழையிலையில் சாப்பிடுவது நமது பாரம்பரியம். ஹோட்டல்களும்கூட இதைப் பின்பற்றுகின்றன. வாழையிலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது. அதேபோல் சாப்பிட்ட பின்னர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது மருத்துவக் குணங்கள் கொண்டதாகவும், செரிமானத்துக்கு உதவுவதாகவும் இருந்தது.

ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் சாப்பிடும் முதல் உணவுப் பண்டம் இனிப்பு என்பதில் தொடங்கி, விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவது வரை அனைத்துக்கும் காரணம் இருக்கிறது. உமிழ்நீர் சுரப்பதால்தான் உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது இதன் காரணமாகத்தான்.

உணவைச் சவைத்து, அரைத்துச் சாப்பிடுவதன் காரணமாக உமிழ் நீரின் சலைவரி என்ஸைம்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்று குறிப்பிட்டார்கள்.

உணவின் இறுதியில் மோர் சாப்பிடுவது நல்லது. சீரணம் நடை பெறும்போது ஏற்படும் அமிலச் சுரப்பால் உருவாகக் கூடிய அல்ச ருக்கு, இதுவே மருந்தாக இருக்கும்.

இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைக்கிரமத்தில் உணவைச் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும்.

சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. குளிர் நாடுகளில் இருப்பவர்களுக்குப் பசி உண்டாக்குவதற்குச் சூடான சூப்பைக் குடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் வெப்பமண்டல நாட்டில் வாழும் நமக்கு, அது எப்படி நன்மை தருவதாக இருக்கும்?

அதேபோல் பழங்களைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. சாப்பாட்டுக்குப் பின் டெசர்ட்டாக சாப்பிடுவதும் பெரிய பலன் தராது. பழத்தின் பாலிஃபீனால்கள், மருத்துவக் குணமுள்ள ஆல்கலாய்டுகள் உடலில் சேர வேண்டுமெனில் பழத்தைத் தனியாகவோ அல்லது முதல் உணவாகவோ சாப்பிடுவது நல்லது.

அதேபோலச் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு 1/2 மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது சீரண என்ஸைமை நீர்க்கச் செய்யாமல், உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க வகை செய்யும்.

காலையில் குளிர்ந்த நீர் 2 டம்ளரும் இரவில் படுக்கும் முன் 3 டம்ளர் வெந்நீரும் அருந்தினால் உடல் உறுதியாகும். சாப்பாட்டின் ஆரம்பத்தில் தண்ணீர் குடித்தால் உடல் சூட்டைத் தணித்து உடல் இளைக்கும், உணவின் இடையில் தண்ணீர் குடித்தால் நடுத்தரமான உடல் பருமன் ஏற்படும். இறுதியில் தண்ணீர் குடித்தால் உடல் பருக்கும். பித்தம் (உடல்சூடு) இருப்பவர்கள் குளிர்ந்த நீரும், வாதம், கபம் (சளி) இருப்பவர்கள் வெந்நீரும் குடிப்பது சிறந்தது. வெந்நீர் உடல் சூட்டைத் தூண்டிப் பித்தத்தைச் சுத்தம் செய்து, இருமல், சளியைக் குறைக்கும்.

நமது உணவில் அனைத்துச் சுவைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டது மட்டுமில்லாமல் சரிவிகித உணவாகவும் இருந்தது. அதனால் நமது உணவில் அனைத்துச் சத்துகளும், செரிமானத்துக்குத் தேவையான விஷயங்களும் உள்ளன. அந்தப் பழைய முறையைத் தெரிந்துகொண்டு பின்பற்றினாலே, பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க முடியும்.

Sunday, December 22, 2013

கொத்து பரோட்டா..


தேவையான பொருட்கள்:-


பரோட்டா - 6
முட்டை - 4
வெங்காயம் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
பரோட்டா குருமா - 3 மேஜைக் கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

1. வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

3. பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

4. அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும்.

5. பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும்.

6. முட்டை வெந்ததும் அதில் பரோட்டா குருமா மூன்று கரண்டி சேர்த்து கிளறவும். (பரோட்டா குருமா இல்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.)

7. பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.

6. கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

Wednesday, December 4, 2013

தூதுவளை தோசை - சமையல்!



 தேவையானவை: 


புழுங்கலரிசி - 1 கப்,


தூதுவளை இலை - 15,


மிளகு - 10,


சீரகம் - அரை டீஸ்பூன்,


பச்சை மிளகாய் - 2,


உப்பு - தேவைக்கேற்ப,


எண்ணெய் + நெய் - தேவையான அளவு.


செய்முறை: 


புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியிலோ, ஆட்டுக்கல்லிலோ பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தூதுவளை இலை, உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும்.


பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி நெய் + எண்ணெயைக் கலந்து அதை சுற்றிவர ஊற்றி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.


மார்பில் சளிக்கட்டியிருந்தால் அதை குணப்படுத்தும் தன்மை உள்ளது இந்த தோசை. ஆனால், சூடாக சாப்பிட்டால்தான் சுவை.

Tuesday, December 3, 2013

அறுசுவை உணவு...!



காரம்: 

உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.


கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


கசப்பு: 

உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.


கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.


இனிப்பு: 

உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.


புளிப்பு:

 இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.


துவர்ப்பு:

 இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.


உப்பு: 

ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

கேழ்வரகு தோசை - சமையல்!

 

 தேவையானவை:


 கேழ்வரகு மாவு - 1 கப்,

ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப்,

உப்பு - தேவைக்கேற்ப,

சின்ன வெங்காயம் - 15,

பச்சை மிளகாய் - 2,

சீரகம் - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:


கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்).


 வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும்.


மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும்


. இதற்கு காரச் சட்னி ஏற்ற ஜோடி.