Showing posts with label குட்டிக்கதைகள். Show all posts
Showing posts with label குட்டிக்கதைகள். Show all posts

Monday, January 27, 2014

உண்மையான பார்வை..!



உண்மையான பார்வை..!
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், " ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?" என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று சொன்னார்.

சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து "ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?" என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ "ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு சென்றான்" என்றார்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவனும் துறவியிடம் "வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி "மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்." என்று சொன்னார்.

அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் "துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொன்னீர்கள்" என்று கேட்டான். அதற்கு துறவி "இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லி, "முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது" என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.

Sunday, December 22, 2013

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்


புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்

எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம்.


நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி
பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்
ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது-

மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது மனிதனுடைய வலது மூளை சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கும். வலது மூளை கற்பனை சக்திக்கும், ஆக்க அறிவிற்கும் (Creativity) காரணமாக இருப்பதால், படிப்பதால் நன்மை விளைகிறது.

மேற்கண்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தால் எல்லாவற்றையும் காட்சியில் பார்த்துவிடுவதால் மூளைத் தூண்டலுக்கு அங்கு வாய்ப்பில்லை.

நல்ல நூல்களைப் படிப்பதால் விளையும் நன்மைகள்

1.திருவள்ளுவர் ‘வழுக்குகின்ற இடத்தில் ஒரு ஊன்றுகோலைப் போல சான்றோர் சொல் பயன்படும்’ என்று கூறுகிறார்.

2. இந்த உலகில் பல்வேறு வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது ‘ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப்போவதற்கு முன்பு ஏதேனும் ஒரு நல்ல நூலின் ஒரு பகுதியை படித்துவிட்டுத்தான் படுக்கச் செல்கிறேன்’ என்று கூறியுள்ளனர். இவ்வாறு படிக்கும் பழக்கம் பல புதிய விசயங்களை தெரிந்து கொள்ளவும் நமக்கு நானே மேலும் மேலும் தூண்டுதல் செய்து கொள்ளவும் பயன்படும்.

3. ஒரு அறிஞர் சொல்கிறார், “Life is a Learning Process”. அப்படிப் பார்க்கும்போது வாழ்க்கை முழுதும் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

4. ஜப்பானியரின் கைசன் என்னும் கொள்கை சொல்கிறது ‘தொடர்ச்சியாக வளர்ச்சியடைய வேண்டும்’ அதாவது அறிவில் – தொழிலில் வளர்ச்சியடைய மேலும் மேலும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும்.

5. நாம் சார்ந்திருக்கும் துறையில் என்னென்ன புதுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொண்டே இருக்கவேண்டும். அதன் எதிர்காலம் அதன் மார்க்கெட் நிலவரம், போட்டியாளர்களுடைய செயல்கள், அரசின் வணிகக் கொள்கைகள் என்பது பற்றியெல்லாம் விழிப்புணர்வு வர, செய்திகளைத் தெரிந்து கொண்டே இருக்கவேண்டும்.

6. மற்றவருடைய அனுபவங்களையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்கிற போது அவை வளர்ச்சிக்கு வழிகாட்டுபவையாக இருக்கும்.

7. மனித மனம் ஓர் நிலம். அந்த நிலத்தில் ஒன்றும் பயிர் செய்யவில்லையென்றால் புல்- பூண்டுகள் முளைத்து விடும். அந்த நிலத்தில் விதைகளை தொடர்ந்து தூவிக் கொண்டே இருக்க நல்ல நூல்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

8. நல்ல நூல்களைப் படித்த பின் அவற்றை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். சந்தித்து உரையாடும்போது பேச வேண்டிய விசயத்தை பேசி முடித்தப்பின் படித்த நூலில் உள்ள சிறப்பம்சத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த சந்திப்புக்கு பின் ‘உங்களுடைய சந்திப்பு பல நல்ல விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்து’ என்ற நல்ல உணர்வை அது நண்பரிடம் ஏற்படுத்தும்.

9. என்னுடைய பயிற்சியின் போது சில அன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் “நூல்கள் வாங்கிவிடுவேன் ஆனால் படிக்கத் தவணை செய்கிறேன். என்ன செய்வது?’

பதில்: ‘நூலை எடுத்து முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அமைதியாக பொறுமையாக உட்கார்ந்து படிக்க வேண்டும் அதற்கு இப்பொழுது நேரமில்லை’ என்று சிலர் தள்ளிப் போடுகின்றனர். அதற்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் பகுதியில் அதன் சுருக்கம் இருக்கும். அதைப் படியுங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடு போடப்பட்டோ அல்லது பெரிய எழுத்திலோ உள்ள முக்கிய வரிகளைப் படியுங்கள். நேரம் கிடைக்கும் போது முதலில் படித்த அத்தியாயத்தை படியுங்கள்.

ஹென்றி ஃபோர்டு சொல்லுவார், “எந்தப் பெரிய வேலையையும் பகுதி பகுதியாக பிரித்துச் செய்து விட்டால் வேலை எளிதில் முடியும்’

அடுத்து, படிக்கும்போது வேறு நினைவுகள் வந்து கவனம் சிதறினால் விரல் வைத்து படியுங்கள் பின் சிறிது சிறிதாக விரலை வேகமாகக் கொண்டு சென்று படியுங்கள். படித்து முடித்ததற்கு பிறகு வருகிற பயன்களை எண்ணிப் பார்த்து படியுங்கள்.

நிறைவுரை
பல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும். ஆக்க அறிவு (Creativity) மிகும். உரையாடும் போது மற்றவர்களால் மதிக்கப்படுவோம். எல்லோராலும் வேண்டப்பட்டோராக மாற முடியும்.

  நம் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்குத் தக்கபடி நூல்களை வாங்கி கொடுப்போம். வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் அமைப்போம்!


வாழ்த்துக்கள்!

என்றும் உங்க ஹாப்பி

Friday, December 20, 2013

நம்முடைய நான்கு மனைவிகள்! குட்டிக்கதைகள்!


ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.


அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.


அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தன...க்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.


ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டாள்.


ஒருநாள்...


அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.


தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.


அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.


பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.


நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள்.


ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.


உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.


1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.


2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.


3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
 

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

Tuesday, December 3, 2013

குட்டிக்கதைகள்!

ஒரு ஊரில் எலித்தொல்லை.


அதைப் பார்த்த ராஜா,'


 'ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,''என்று அறிவித்தார்.


மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு 


 அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர்.


அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது.


அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார்.


வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது.


அனால் எலித்தொல்லை குறையவில்லை.இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில்தெரிய வந்தது; 


பணம் கிடைக்குமே என்றுமக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்! 

வேகமான சிந்தனை - குட்டிக்கதைகள்!


ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.


அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.


புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே


அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.


இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.


குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.


குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...


பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...


- வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கும் '